Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                                               வணக்கம் உறவுகளே!

 

"விழுதல் என்பது" என்னும் தலைப்பில் உலகம் முழுவதிலும் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இணைந்து எழுதும் தொடர் கதை நாளை பல இணையத் தளங்களில் ஒரே நாளில் ஆரம்பமாகின்றது. ஒவ்வொரு பகுதியும் வாரம் ஒருமுறை பிரசுரிக்கப்படும். திரு ஏலைய்யா முருகதாசனின் அவர்களின் கூட்டு முயற்சியில் இத்தொடர் ஆரம்பமாகிறது. நாளை பகுதி ஒன்று இங்கு பிரசுரிக்கப்படும். யாழ் இணையமும் இதற்கு ஒத்துழைப்புத் தந்துள்ளது. அதற்காகத் தயாரிக்கப்பட்ட ஒளி,ஒலிப் பேழையை என்னால் இங்கு போடா முடியவில்லை. யாராவது விடயம் தெரிந்தவர்கள் உதவ முன்வந்தால் அதனை மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அனுப்பிவைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏலையா க.முருகதாசன் அவர்கள்

கவிஞர், நாடகக் கலைஞர், எழுத்தாளர், கட்டுரையாளர்

நாடக எழுத்து, நடிப்பு, தயாரிப்பு: (ஊரில்: நாடகங்கள்: நல்ல தீர்ப்பு, நீங்காத நினைவு, சிதைந்த வாழ்வு, நீரோட்டம் (தெல்லிப்பழை, அம்பனை கலைப்பெருமன்றம், முதல் பரிசாகிய ஏழு தங்கப் பதங்கங்களை வென்றன.

சிறந்த நடிகர்: (நீங்காத நினைவு 1970)

பரிசளித்துக் கௌரவித்தவர்: நடிகமணி திரு.வி.வி. வைரமுத்து அவர்கள்

ஜேர்மனியில்: எழுதி, நடித்து, இயக்கித் தயாரித்த நாடகங்கள்: ஊருக்குப் போவோம், எமது உறவுகள், இன்னுமா உறக்கம், காவலரண்.

சஞ்சிகை ஆசிரியர்: ஏலையா

அதில் தொடர்கதைகள் „கார்த்திகா“ என்ற புனைபெயரில்: „நெடுஞ்சுவர், எமக்கென்றொரு விதி, போராட்டம், சதுரங்களும் நேர்க்கொடுகளும், தூரிகை,நிர்மாணம், நினைவுகள், பல சிறுகதைகள், கட்டுரைகள்.

குறும்படம்: கனவுகள், வீடியோ நாடகம்: „நான் ஏன் இங்கிருக்கிறேன்“ (ஜேர்மன் மொழி)

வகித்த பதவி: பொறுப்பாளர், சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் (2004 – 2010 சித்திரை வரை)

எழுதிக் கொண்டிருக்கும் பத்திரிகைகளும் இணையத்தளங்களும்: வெற்றிமணி (ஜேர்மனி), பண்ணாகம் இணையத்தளம் (ஜேர்மனி) கனடா உதயன் பத்திரிகை, அக்கினிக்குஞ்சு இணையத்தளம் (அவுஸ்திரேலியா) காற்றுவெளி (இணைய சஞ்சிகை, இங்கிலாந்து)

2. கலாநிதி திரு. கல்லாறு சதீஸ் அவர்கள்

கவிஞர், கலைஞர், எழுத்தாளர்

வெளியீடு செய்து நூல்கள்: „பனிப்பாறைகளும் சுடுகின்றன (சிறுகதைத் தொகுப்பு 1999) „சொர்க்கங்களும் தண்டிக்கின்றன“ (சிறுகதைத் தொகுப்பு 2004, „ எதிரிகள் யார்?“என்ற சிறுகதைiயும் ஜேரஇமன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.

பெற்ற விருதுகளும், பட்டங்களும்

கௌரவ கலாநிதி விருது ( வழங்கியவர்கள்: கொம்பிளிமெண்ட் ரி மெடிசன், அமெரிககா 2008)

„வாழ்க்கைச் சாதனையாளர்“ விருது ( வழங்கியவர்கள்: கொம்பிளிமெண்ட் ரி மெடிசன் 2009)

கலாநிதி கௌரவ விருது ( வழங்கியவர்கள்: உலகத் தமிழ் பல்கலைக் கழகம், அமெரிககா 06.04. 2014 )

„சிறந்த எழுததாளர்“ அன்னத்தூவி மனதுக்காரர்“( வழங்கியவர்: கவிப்பேரரசு திரு.எம்.வைரமுத்து அவர்கள்)

பங்குபற்றிய இலக்கிய மாநாடு: உலகச செம்மொழி மாநாடு 2010 (சமர்ப்பித்த உரை „கடல் கடந்த தமிழும்;, தமிழர்களும்)

பெருந்தொடர் கதை ஆரம்பம்

விழுதல் என்பது ...............

(தொடர் ஆரம்ப பகுதியை எழுதியவர்கள் கல்லாறு சதீஸ் - ஏலையா முருகதாசன்)

மலர்களின் வாசம் பிடிக்கவில்லை. குயில்களின் கீதம் பிடிக்கவில்லை. மயில்களின் நடனம் பிடிக்கவில்லை. இப்படி இன்னும் என்னென்ன பிடிக்கவில்லை. பைத்தியம் பிடிக்கவில்லை.

பைத்தியம் பிடிக்கக்கூடாது......

ஆன்மா தவிக்கின்றது. கணங்கள் ஒவ்வொன்றும் அனாதைப் பிணமாவேனோ எனும் அச்ச எண்ணம் என்னைத் திணறச் செய்கின்றது. முகம் வியர்க்கின்றது. அக்கம் பக்கம் பார்த்து மெதுவாகத் துடைத்துக் கொள்கிறேன்.

வந்துவிட்டேன், விமான நிலையத்தின் இறுதி நிமிடங்கள் என்னை உந்தித் தள்ளுகிறது.

இறுதியாக இலங்கைத்தீவின் மடியிலிருந்து என் பாதங்களைத் தூக்கி வைத்து விமானத்தில் ஏறுகின்றேன்.

பிறந்தது முதல் வாழ்ந்துவந்த தேசத்தை விட்டு காற்றை உதைத்து விமானப்பறவை மேலே மேலே எழுந்து மேகங்களைக் கிழிக்கிறான். கண்ணாடியூடாக பூமிப் பந்தைப் பார்க்கிறேன். இது என் கிராமமாக இருக்குமோ, ஆவலில் உற்றுப் பார்க்கின்றேன்.

மீண்டும் என்று இத்தேசம் வருவேனோ..........

என் தேசத்தைப் பிடித்த நோயின் கோரம் என்று தீர்ந்து போகுமோ. போகிறேன், என் தேசம் விட்டு, என் கிராமம் விட்டு, என் உறவுகளை விட்டுப் போகிறேன்.

நான் மட்டும் போகவில்லை. எனக்கு மட்டும் இந்தச் சோகம் இல்லை. என் தேசம் விட்டுப் போக முடிந்த எல்லோரும் இலட்சம் இலட்சமாய்ப் போனார்கள்.

எனக்கு எங்கே போவதென்று தெரியாது. எப்படிப் போவதென்றும் தெரியது.

பலபேர் போகும் திசையில் நானும் போகிறேன். இது பெரும் பயணம். சட்ட ரீதியான பயணம் அல்ல. ஆபத்துக்கள் நிறைந்த பயணம். விமானத்திலிருந்து இன்னுமொரு தேசத்தைப் பார்க்கிறேன். அது அழகாக இருந்திருக்க வேண்டும்.

பச்சைப் புல்வெளிகளும், அழகிய கட்டிடங்களுமாய் மனதை கிளர்ச்சி கொள்ள வைத்திருக்க வேண்டும். ஆனால் எனக்கு அப்படியேதும் நடக்கவில்லை. எத்தனை பேரிடம் இந்த பயணத்திற்காக பணம் வாங்கினேன். இறுதிப் பிரிவின் போது உறவுகளின் எத்தனை கேள்விகளை எதிர் கொண்டேன்.

இதயம் நொறுங்க விடை பெற்றேன், உயிரைக் காக்க எத்தனை வலிகள்.........

இவ்வாழ்வில் எங்கேனும் ஒரு தேசத்தில் புகலிடம் தேட வேண்டும். சரியாகப் புகலிடம் பெற யார் சொல்லித் தருவார்கள். செய்முறை படித்து செயல் என்பதைவிட செயலூடாகச் செயல். செய்துதான் பார்ப்போமே.

புதிய தேசத்தில் தங்கும் விடுதியில் இன்னும் பலருடன் தங்க வைக்கப்படுகிறேன். ஐரோப்பிய தேசம் நோக்கிப் போக வேண்டும். மீண்டும் ஒரு சோகம் தாக்காத வாழ்வைத் தேட வேண்டும்.

எந்த இனம் எம்மை நாடோடியாக்கியதோ, அந்த இனத்தின் வருகைக்காக காத்திருந்தோம். அவர் வருகையில்தான் அது புரிந்தது. எங்களின் கடவுட்சீட்டுக்கள் வாங்கப்பட்டன. மீண்டும் பல நாட்கள் காத்திருப்பு தொடர்ந்தது.

காதலுக்காக காத்திருத்தல் சுகமாக இருக்கலாம். கடவுட்சீட்டுக்காக காத்திருத்தல் எத்தனை வலி என்பதை அனுபவித்து அறிந்தேன்.

எங்களிடமிருந்த பணங்கள் வாங்கப்பட்டன. எங்களில் பலர் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டோம். நாம் சென்ற பாதையை மௌனத்தின் ஒலியில்தான் பேச முடியும். இன்றும் அந்தக் கணங்களை இதயத்தில் ஏற்றி நினைத்துப் பார்க்கையில் உடல் ஒரு கணம் அதிர்ந்து துடிக்கும்.

நகரும் வீட்டில் நாங்கள் ஏற்றப்பட்டோம். ஏற்றியவர் ஒரு வெள்ளைக்காரர். நள்ளிரவில் அந்தப் பயணம் தொடங்கியது. அது ஒரு நாட்டின் எல்லையை அந்த நாட்டுப் படைக்கே தெரியாமல் கடந்து நுழைந்து கொள்ள வேண்டிய பயணம்.

அது எனக்குப் புரிந்து போனதால் தூக்கம் கெட்டுப் போனது. சிறு துவாரத்தினூடாக வீதியைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.

இயற்கைக் கடன்களுக்குக்கூட நிறுத்தப்படாது ஓடிய வாகனம் திடீரென்று நிறுத்தப்பட்டது. அது வெறும் ஐந்து நிமிடங்கள்தான். மீண்டும் ஓடுகிறது, ஓடிக் கொண்டேயிருக்கிறது.

நேரம் அதிகாலை ஐந்து மணி. இப்போது எங்கள் அனைவரையும் இறங்குமாறு பணித்தார் அந்த வெள்ளைக்கார்.

என் பாதங்கள் தொட்ட அந்தப் பூமி சுவிற்சலாந்தின் சூரிச் மாநகரம்.

(இத் தொடரை எழுதியவர்: ஏலையா க.முருகதாசன்)

விடிந்தும் விடியாத காலைப் பொழுது. எங்களை இறக்கிவிட்ட இடம் மூன்று தெருக்கள் சந்திக்கும் ஒரு சந்தியாகவிருந்தது. குளிர் வாட்டி எடுத்தது. ஆங்காங்கே குவியலாக வெள்ளை வெளேர் நிறத்தில் பனிக்குவியல்கள் குவிக்கப்பட்டிருந்தன.

அந்த நேரத்திலும் காரில் போவோர் வருவோர் எங்களை உற்றுப் பார்த்துக் கொண்டே சென்றனர். நடந்து போவோரும் எங்களைப் பார்த்து தங்கள் மொழியில் ஏதோ சொல்லிக் கொண்டு போனார்கள். அந்தத் தொனி எங்களை ஏசுவது போல் இருந்தது.

பேருந்துச் சாரதி ஆளுக்கு இருபது பிராங்குகளை தந்துவிட்டு பேருந்தை வேகமாக எடுத்துக் கொண்டு போய்விட்டார்.

எங்கள் பத்துப்பேரில் நான் மட்டுமே தமிழன். மற்றவர்கள் வேறுவேறு நாட்டுக்காரகள்;. குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தோம். சூடாக ஏதாவது குடித்தால் நன்றாக இருக்குமே என அங்கலாய்த்தது மனம். என்னோடு நின்ற பாகிஸ்தான் நாட்டுக்காரனுக்கு மட்டும் ஆங்கிலம் தெரிந்திருந்து. கோப்பி குடித்தால் நன்றாக இருக்குமே என்று நான் ஆங்கிலத்தில் சொன்ன போது அவனும் தலையை ஆட்டினான். நாங்கள் இருவரும் ஆங்கிலத்தில் பேசியதை மற்றவர்கள் கவனித்தார்கள். என்ன பேசுகிறீர்கள் என்பது போல் எம்மை சைகையால் கேட்டார்கள்.

கோப்பி குடித்தால் குளிருக்கு நல்லது என்று பெருவிரலை வாய்க்கருகில் கொண்டு போய்க் காட்டினேன். அவர்களுக்கும் அது தேவைப்பட்டது. பனி மெல்ல மெல்ல பெய்யத் தொடங்கியது. பார்க்க அழகாகத்தான் இருந்தது. ஆனால் குளிரைத் தாங்க முடியவில்லை.

பேருந்து சாரதி ஒவ்வொருவருக்கும் குளிரைத் தாங்குவதற்காக கோற் கொடுத்திருந்தார். கோற்றை பின்பக்கமாக உயர்த்தி தலையை மூடிக் கொண்டேன்.

நாங்கள் நின்ற இடத்திற்கு எதிரே இருந்த சிறிய கடை திறக்கப்பட்டது. அது கோப்பிக்கடை. குளிரிலிருந்து தப்புவதற்கும் கோப்பி குடிப்பதற்குமாக வேகமாக கடைக்குள் போனோம்.

கடைக்காரர் எங்களை ஏறெடுத்துப் பார்த்தார். அவர் மொழியில் ஏதோ கேட்டார். அவர் என்ன கேட்கிறார் என்பது எங்களுக்குப் புரியவில்லை. நான் கொபி என ஆங்கிலத்தில் சொன்னேன்.

கோப்பிக்கடையின் வெக்கை இதமாக இருந்தது. கோப்பிக்கடைக்காரர் தனக்கு முன்னாலிருந்த தட்டில் ஒவ்வொரு கோப்பியாக வைக்க ஒவ்வொருவராக எங்களிடமிருந்த சுவிஸ் பணத்தைக் கொடுத்து கோப்பிக் கோப்பையை எடுத்தோம். மிகுதிப் பணத்தை கோப்பிக்கடைக்காரர் தந்தார். எண்ணிப் பார்க்காமல் அப்படியே கோற்றின் பைக்குள் போட்டேன்.

கோப்பியின் சூடு குளிருக்கு அமிர்தமாகவிருந்து. அப்பொழுது ஒருவர் கோப்பிக் கடைக்குள்ளே நுழைந்தார்.

அவர் எனது நிறத்திலிருந்தார். அவர் கோப்பிக்கடைக்காரரிடம் கோப்பி வாங்கிக் குடித்தபடியே என்னையும் பாகிஸ்தான்காரரைக் கண்டதும் மெதுவாக எனக்கருகில் வந்தார். என்னைப் பார்த்து ஆங்கிலத்தில் “இந்தியனா ஸ்ரீலங்காவா” எனக் கேட்டார். “ஸ்ரீலங்கா “என்றவுடன் அவர் முகத்தில் ஒரு ஆர்வம். நான் தமிழன் என்பதைப் புரிந்து கொண்ட அவர் „ நானும் தமிழன்தான் „ என்றார்.

எனக்குச் சந்தோசமாகவிருந்தது. அப்பொழுது, கோப்பிக்கடைக்காரர் அவரிடம் ஏதோ கேட்டான். அதற்கு அவர் பதில் சொன்னார். என்ன கேட்டவர் என்றேன். “நீங்கள் எனக்குச் சொந்தமா, சந்திக்கவா வந்தீர்கள் என்று கேட்கிறார் நான் இல்லையென்று சொல்லிவிட்டேன்” என்றார்.

கோப்பிக் கடைக்கார் மெதுவாக உள்ளே போவதைக் கவனித்தேன். உள்ளே அவர் யாருடனோ பேசுவது போல் கேட்டது. வந்தவருக்கு விளங்கிவிட்டது. அவர் மெதுவாகச் சொன்னார் “கோப்பிக்கடைக்காரன் காவல்துறையோடு தொலைபேசியில் பேசுகிறான். உங்கள் எல்லாரையும் பற்றிச் சொல்கிறான், என்னைப் பற்றியும் சொல்கிறான். நான் கெதியிலை போறன். நான் இங்கை நின்றால் என்னையும் அவர்கள் விசாரிப்பார்கள், பெரிய பிரச்சனையாகிவிடு;ம் பயப்பட வேண்டாம்” எனச் சொல்லியவாறே அவர் வேகமாக கடையை விட்டுப் போய்விடுகிறார்.

காவல்துறையினர் என்றதும் பயம் பிடித்துக் கொண்டது. காவல்துறையினர் வரப்போகிறார்கள் என்பதை நான் மற்றவர்களுக்குச் சொல்லவில்லை. ஆனால் உள்ளுக்குள்ளை பயம் ஆட்டிப் படைத்தது. என்ன நடக்கப் போகுது எது நடக்கப் போகுது என்று தெரியவில்லை. எங்களை கைது செய்து உடனடியாகவே அவரவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பி விடுவார்களோ என மனம் பதைபதைத்து.அப்படி அனுப்பி விட்டார்களானால் அங்கு என்ன நடக்குமோ………

மெதுவாக கடையை விட்டு நான் வெளியேற எல்லோரும் வெளியே வந்தார்கள். சந்தியை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். கோப்பிக்கடைக்குள் வந்து என்னோடு பேசியவர் உங்கள் நாட்டுக்காரரா என மற்றவர்கள் கேட்டார்கள். நான் “இல்லையென்று” பொய் சொன்னேன்.

என்னோடு நிற்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை என்னால் அறிய முடியவில்லை. உண்மையச் சொல்லப் போய் அதனால் பிரச்சினை ஏதாவது வந்துவிட்டால் என்ற பயம் என்னைப் பொய் சொல்ல வைத்தது.

மனதுக்குள் அழுதேன்”என்ன வாழ்க்கையடா இது, நாதியற்று அனாதைகளா கையறு நிலையில் குளிரில் நடுச்சந்தியில் நிற்கிறேனே” என நினைத்த போது கண்களை கண்ணீர் அடைத்தது.

குளிரினால் மூக்கிலிருந்து சளியும் நீருமாக எனது மீசையில் வளிந்து உறைந்தது. எல்லோருக்குமே எனது நிலைதான். சிலர் தும்மத் தொடங்கினார்கள். காற்சட்டைப் பைக்குள்ளிருந்த கைக்குட்டையை எடுத்து மீசையில் உறைந்து நின்ற சளியையும் நீரையும் துடைத்தேன். துடைக்கத் துடைக்க அடிக்கடி மூக்கிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. எங்கே போய் எங்களை அகதியாக பதிவதென்று தெரியவில்லை.

யாரையாவது கேட்கலாம் என்றால் யாரைக் கேட்பது என்றும் தெரியவில்லை.

கோப்பிக் கடையில் சந்தித்தவரைக் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் கோப்பிக் கடைக்காரனுக்கு பயந்து வேகமாக போய்விட்டார். ஒரு சுவிஸ் நாட்டுக்கார் எங்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அவரிடம் கேட்கலாம் என நினைத்து அவருக்கருகில் போனேன். அவர் என்னைக் கண்டதும் தனது கையை உதறிக் காட்டிவிட்டு வீதியின் மறுபக்கம் போய்விட்டார். நட்டநடுச் சந்தியின் ஓரத்தில் ஒரு பிச்சைக்காறர்களாக நாங்கள் நின்றோம்.

கையில் கட்டியிருந்த மணிக்கூட்டைப் பார்த்தேன் ஏழு மணியாகிக் கொண்டிருந்தது. அங்குமிங்குமாக நடப்பதிலும் கால்களை உதறுவதுமாகவும் உள்ளங் கைகளை தேய்ப்பதுமாக இருக்கையில் நீல விளக்கு சுழன்று சுழன்று எரிய ஒருவித சத்தத்துடன் ஒரு கார் எம்மை நோக்கி வந்து கொண்டிருந்து. அதற்குப் பின்னால் ஒரு வானும் வந்து கொண்டிருந்தது.

எங்களுக்கருகில் வந்து நின்ற காரிலிருந்தும் வானிலிருந்தும் கடும்நீல நிற உடையில் நான்கு பேர் கம்பீரமாக தடதடவென இறங்கினார்கள். காரிலும் வானிலும் பொலிஸ் என எழுதப்பட்டிருந்தது.

வந்தவர்களில் ஒரு காவல்துறைப் பெண் கோப்பிக்கடையை நோக்கிப் போனாள். மற்றைய மூன்று பேரும் எம்மைச் சூழ நின்றபடி பாஸ்போர்ட் என்றனர். எங்களிடம் இருந்த கடவுட்சீட்டுக்களை அவர்களிடம் கொடுத்தோம். கொடுக்கும் போது கை நடுங்கியது.

தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பகுதி 2

 

இத் தொடரும் 1வது தொடரின் எழுத்தாளர் ஏலையா முருகதாசன் அவர்களால்; எழுதப்பட்ட மிகுதி 2 வது பகுதியாக வருகிறது.

 

 

கோப்பிக் கடைக்கு போன பெண் திரும்பி வந்து ஏதோ சொன்னாள். வானில் எல்லோரையும் ஏறச் சொன்னார்கள். கடவுச்சீட்டை கேட்ட விதமும் வானில் ஏறச் சொன்ன விதமும் கடுமையான தொனியாகவிருந்தது. வான் எங்களை ஏற்றியபடி ஓடிக் கொண்டிருந்தது.
கடவுச்சீட்டை வாங்கிவிட்டார்கள் இனி நேரே விமான நிலையத்திற்குத்தான் கொண்டு போவார்கள் என்ற நினைப்பில் ஒடுங்கிப் போயிருந்தேன். பாகிஸ்தான்காரன் மெதுவாக அல்லா அல்லா என்று சொல்லிக் கொண்டிருந்தான். மற்றவர்களில் சிலர் வானின் மேல்பகுதியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் கண்களை மூடியபடி இருக்கையில் சரிந்திருந்தார்கள்.
ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் எங்களை ஏற்றிக் கொண்டு வந்த காவல்துறையினரின் வானும் காரும் ஒரு கட்டிடத்தின் முன்னால் நின்றன. வானின் கண்ணாடி யன்னலுக்கூடாகப் பார்த்தேன். அவர்களின் மொழியில் காவல்நிலையம் என எழுதப்பட்டிருப்பதைப் புரிந்து கொண்டேன்.
எங்கள் எல்லோரையும் இறங்கச் சொல்லி எங்களுக்கு முன்னுக்கு  இரண்டு காவல்துறையினரும் பின்னுக்கு இரண்டு காவல்துறையினருமாக எங்களை கட்டிடத்தின் உள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள்.
அந்தக் கட்டிடத்திற்குள் அகலமான கண்ணாடிகள் பொருத்தப்பட்ட பல அறைகள் இருந்தன. அறைகளுக்குள் பல காவல்துறையினர் வேலை செய்து கொண்டிருந்தனர். சிலர் நடைபாதையில் காணப்பட்டனர்.
எங்களை கட்டிடத்தின் உள்ளேயுள்ள நடைபாதையில் அழைத்துக் கொண்டு போகும் போது அறைகளுக்குள்ளிருந்தவர்கள் எங்களைக் கண்களால்  மற்றையவர்களுக்கு ஜாடைகாட்டி   ஏதோ சொல்வது தெரிந்தது. எங்களை கேலி செய்வது போல் சிரித்தார்கள். ஆனால் சிரிப்பின் சத்தம் வெளியே வரவில்லை. சொந்த மண்ணை விட்டு வந்தால் மற்றவர்களின் கேலியையும் கிண்டலையும் சகித்துத்தான் ஆக வேண்டும். தன்மானம் சுயமரியாதை எல்லாம் எங்கள் நிலையினால் கருகிச் சாம்பலானது.
நான்கு காவல்துறையினரும் எங்களை மேல் மாடியிலுள்ள பெரிய அறையொன்றுக்குள் கொண்டு போய் அங்குள்ள நாற்காலிகளில் உட்காருமாறு  ஆங்கிலத்தில் சொன்னார்கள். நாங்களிருந்த அறையின் எல்லாப் பக்கங்களிலும் அகலக் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட அறைகள் இருந்தன.
சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தோம் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை. எதுவும் நடக்கலாம் என்று மனம் சொல்லிக் கொண்டிருந்தது. எனது இதயம் துடிக்கும் சத்தம் நெஞ்சுகு;கூட்டையும் தாண்டி எனக்குக் கேட்டது.
நான்கு காவல்துறையினரில் ஒருவரின் கையில் எங்கள் கடவுச்சீட்டுக்கள் இருந்தன. நான்கு பேரும் பக்கத்து அறைக்குள் போனார்கள். கடவுச் சீட்டுக்களைக் கொண்டு போனவர் மேசையின் முன்னால் அமர்ந்திருந்த பெண் ஒருவரிடம் கொடுத்தார்.
அந்தப் பெண் ஒவ்வொரு கடவுச்சீட்டாக விரித்துப் பார்த்தார். பிறகு தொலைபேசியில் பேசினார். பெரிய கண்ணாடி யன்னலூடாக உள்ளே நடப்பதைப் பார்க்க முடிந்தது. உற்றுப் பார்ப்பது போல் பார்க்காது தற்செயலாகப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கண்கள் எரிந்தன, இமைகளை விரல்களால் தடவிவிட்டேன். சில நிமிடங்கள் சென்றன. காவல்துறையினரின் சீருடையிலில்லாத ஒரு பெண் ஒரு சிறிய பெட்டியில் எதையோ கொண்டு வந்தார். எங்கள் ஒவ்வொருவரின் முன்னும் பெட்டியை நீட்டி அதற்குள் இருப்பதை ஆங்கிலத்தில் எடுக்கச் சொன்னாள்.
பெட்டிக்குள் புதிய பல்துலக்கும் பிறஸ்கள் இருந்தன. பிறஸ்ஸை எடுத்துக் கொண்டே நன்றி சொன்னேன். எல்லோருக்கும் பிறஸ்களைக் கொடுத்து முடித்ததும் மூடப்பட்டிருந்த ஒரு அறையின் கதவைத் திறந்து எங்கள் எல்லோருக்கும் கேட்கும்படியாக' இது கழிவிடமும் முகம் கழுவும் இடமுமாகும். முகம் கழுவும் இடத்தில் பற்பசையிருக்கின்றது. இங்கே பல்லைத் தீட்டி முகத்தை கழுவுங்கள். முக்கியமாக உங்கள் உள்ளங் கைகளை சவர்க்காரம் போட்டு நன்றாகக் கழுவுங்கள்' என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் போய்விட்டாள்.
பல்துலக்கி முகத்தைக் கழுவினோம். உள்ளங்கைகளை சவர்க்காரம் போட்டுக் கழுவினோம். கைதுடைப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடுதாசியை எடுத்து முகத்தைத் துடைத்தோம். ஆனால் முகத்திலிருந்த ஈரத்தன்மை போகவில்லை.
எனது நாற்காலிக்கு வந்த நான் ஊரிலிருந்து கொண்டு வந்த சிறிய பையை மெதுவாகத் திறந்தேன். பையை மடியில் வைத்தபடியே பைக்குள்ளிருந்த சாரத்தின் ஒரு பகுதியை மேலே இழுத்து முகத்தை துடைத்தேன்.
அப்பொழுது நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது. சீருடையில்  காவல்துறைப் பெண்ணும் சீருடை அணியாத  ஒரு பெண்ணும் இரண்டு தட்டுகளில் ஒன்றில் சிறிய சிறிய பாண் துண்டுகளை ஒருவரும் இன்னொருவர் பிளாஸ்ரிக் குவளைகளில் கோப்பியும் கொண்டு வந்து மேசையில்  வைத்தார்கள்.
பாணைச் சாப்பிட்டுவிட்டு கோப்பியைக் குடிக்குமாறு சொல்லிவிட்டு அவர்கள் போய்விட்டார்கள். உண்மையில் நான் வியப்படைந்துவிட்டேன். வீதியில் நின்ற எங்களுடன்  கடுமையாக நடந்து வானில் ஏற்றி வந்து பின்னர் கண்ணாடி யன்னலுக்கூடாக கேலி செய்தமைக்கும் எதிர்மாறாக நடைபெற்ற காவல்துறையினரின் மனிதாபிமான செயலைப் பார்த்து என்னைக் கவலை  உணர்வு ஆட்கொண்டது.
ஐரோப்பிய நாடுகளில் ஒரு மனிதன் நீரின்றியோ உணவின்றியோ இறக்கக்கூடாது என்ற அடிப்படைச் சட்டம் ஒன்று இருக்கிறது என்பதை  ஊரிலிருந்த போது பத்திரிகைகளில் வந்த வெளிநாட்டுச் செய்திகள் மூலம் அறிந்திருக்கிறேன்;.
அதை கண்கூடாகக் கண்டேன். எழுந்து போய் பாண் துண்டுகளை எடுத்துச் சாப்பிட்டோம். இரண்டு பாண் துண்டுகளுக்கு இடையில் ஜாமும் பட்ரும் பூசப்பட்டிருந்து. பாணைச் சாப்பிட்டபடியே கோப்பியைக் குடித்தோம். பாலைவனத்தில் தாகத்தினால் தவிக்கும் போது தண்ணீர் கிடைத்தது போல் இருந்தது.
சாப்பிட்டு முடிந்ததும் சில நிமிடங்கள் செல்ல, ஒரு சீருடை அணியாத ஆண்  ஒருவர் எங்கள் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி ஒவ்வொருவராக  ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றார். எனது முறை வந்தது எனது பெயரைச் சொல்லி அழைக்க எழுந்து அவருடன் சென்றேன்.
அந்த அறையில் காவல்துறையின் சீருடையுடன் அதிகாரி போல் ஒருவரும் எனது நிறத்தில் ஒருவரும் ஒரு மேசைக்கு முன்னால் உட்கார்ந்திருந்தனர். அந்த அதிகாரி என்னை உட்காரச் சொன்னார். என்னை அறைக்குள் அழைத்து வந்தவரும் அதிகாரிக்கு எதிராக உட்கார்ந்தார்.
அது அகலமான மேசை. நான் எனது நிறத்திலுள்ளவருக்கு எதிராக உட்கார்ந்திருந்தேன். என்னை அழைத்து வந்தவருக்கு முன்னால் ஒரு ஒலிப்பதிவுக் கருவியிருந்தது. அவர் ஒலிப்பதிவுக் கருவியிலிருந்த  ஹெட்போனை தலையில் கொழுவினார். எல்லாமாக நான்கு சிறிய ஒலிவாங்கிகள் ஒவ்வொருவரின் முன்னாலும் மேசையில் பொருத்தப்பட்டிருந்தன.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது இனி என்ன நடக்கப் போகின்றது என்று மனம் பதைபதைத்தது. நான் ஒரு குற்றவாளி போல் கால்களை ஒடுக்கி வைத்து கைகளை முன்னால் கட்டியவாறு நுணிக்கதிரையில் உட்கார்ந்திருந்தேன். எங்கள் நால்வருக்கு முன்னாலும் கண்ணாடிக் குவளைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு ஒரு சிறிய தட்டால் மூடி வைக்கப்பட்டிருந்தது.
என்னிறத்தில் உள்ளவரைக் காட்டி  ' இவர் பெயர் இராஜேஸ்வரன், இவர் சுவிற்சலாந்தின் அரச அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளர். இவர் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த தமிழர். உங்களை விசாரிக்கப் போகிறோம். நீங்கள் உண்மையச் சொல்ல வேண்டும். நீங்கள் உண்மை சொல்லவில்லையென்று நாங்கள் அறிந்தால் உங்களை இருபத்திநாலு மணித்தியாலத்திற்குள் எங்கிருந்து வந்தீர்களோ அந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பி விடுவோம். இவர் நீங்கள் சொல்வதை மொழிபெயர்பார். நான் கேட்பதையும், நீங்கள் சொல்வதையும், அவர் சொல்வதையும் நாங்கள் ஒலிப்பதிவு செய்வோம்' எனச் சொல்லி நிறுத்தினார்.
எனது முகம் வியர்க்கத் தொடங்கியது. நெஞ்சில் வியர்வை அரும்பி வயிற்றுப் பகுதியில் வழிந்தது. முகத்தில் அரும்பிய வியர்வையை மெதுவாக துடைத்தவாறு ' ஓம்' என்பதற்கு அறிகுறியாக தலையை ஆட்டினேன்.
அந்த அதிகாரி தனக்கு முன்னால் மேசையில் கிடந்த எனது கடவுச்சீட்டை எடுத்து விரித்துப் பார்த்தபடியே மொழிபெயர்ப்பாளரைப் பார்த்து அவரது மொழியில் ஏதோ சொன்னார்.
மொழிபெயர்ப்பாளர் என்னைப்பார்த்து கேட்கத் தொடங்கினார். அதிகாரி சொல்லச் சொல்ல மொழிபெயர்ப்பாளர் தமிழில் என்னிடம் கேட்டார்.
'உங்களுக்கு என்ன பெயர்? '
'தருமசீலன்'
'எத்தனை வயது? '
'பத்தொன்பது'
'உங்களின் அப்பா பெயர் என்ன?'
'மார்க்கண்டு'
'உங்களின் அம்மாவின் பெயர் என்ன?'
'கண்மணி'
'நீங்கள் வேலை செய்கிறவரா?'
'இல்லை படிக்கிறவன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தவன்'
'இந்த நாட்டுக்கு எதற்காக வந்தனீங்கள் ?'
„ ................................'
நான் மௌனமாயிருந்தேன். அதிகாரி மொழிபெயர்ப்பாளரை கூர்ந்து பார்த்தார். மொழிபெயர்ப்பாளர் „அவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். இப்படி மௌனமாகவிருக்க முடியாது' என்றார்.
என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அந்த விநாடிப் பொழுதுகளில் எனக்குள் முரண்பாட்டுப் பதில்கள் கேள்விகள் வந்து போயின, ஒரு முடிவிற்கு வந்தவனாக,
„பயத்திலை' என்றேன்.
„உங்கள் நாட்டிலிருந்து எதில் வந்தனீங்கள்?'
„விமானத்தில்'
„விமானத்தின் பெயர்?'
„ தெரியாது'
„உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?'
„ஓரளவு தெரியும்'
„எந்த நாட்டில் வந்து இறங்கினனீங்கள்?'
„ .....  ........  ... ஆஸ்த்திரியாவில்'
„அங்கிருந்து எங்கள் நாட்டிற்கு எப்படி வந்தனீங்கள்?; '
„பேருந்தில்'
„பேருந்தின் பெயர் என்ன?'
„ பார்க்கவில்லை.......தெரியாது'
குரல் கரகரத்தது. தொண்டைக்குள் எச்சில் அடைத்தது. அதிகாரியின் முகத்தில் ஒரு அலட்சியப் புன்னகை வந்து போயிற்று. எனக்கு முன்னாலிருந்த தண்ணீர்க் கண்ணாடிக் குவளையைக் காட்டி குடிக்கச் சொன்னார். எடுத்துக் குடித்தேன். தொண்டையை செருமிக் கொண்டேன். தொடர்ந்தன கேள்விகள்.
„ சாரதியின் பெயராவது தெரியுமா?'
„ தெரியாது'
„ நீங்கள் வந்த பேருந்தில் எத்தனை பேர் வந்தார்கள்?'
„பத்துப் பேரென்று நினைக்கிறன்'
„எல்லாரும் உங்கள் நாட்டுக்காரர்களா?'
„இல்லை நான் மட்டுந்தான் சிறீலங்காவைச் சேர்ந்தவன்'
„ இன்று காலை கோப்பிக்கடையில் ஒரு தமிழரைச் சந்தித்தீர்களா, அவரைத் தெரியுமா, அவர் உங்கள் உறவினரா, அவர் உங்களை சந்திக்கத்தான் வந்தாரா?'
„ இல்லை... இல்லை... அவர் எனது உறவினர் அல்ல. அவரை யாரென்று எனக்குத் தெரியாது'
„உங்கள் நாட்டிலிருந்து இந்த நாட்டிற்கு வரும்வரை பணம் எப்படி கிடைத்தது?'
„ஊரில்
பலரிடம் அம்மா கடன் வாங்கியும் தனது தாலிக்கொடியை விற்றும் காசு தந்தார்'
அதிகாரி தாலிக்கொடியென்றால் என்னவென்று அம்மொழிபெயர்ப்பாளரைக் கேட்பது போல் தெரிந்தது. தாலிக்கொடியை தலிக்கொடி என்று உச்சரித்ததிலிருந்து நான் விளங்கிக் கொண்டேன்.மொழிபெயர்ப்பாளர் தனது விரலில் உள்ள மோதிரத்தைக் காட்டி ஏதோ சொன்னார். அதிகாரியின் முகம் சிறிது வாடியதைக் கவனித்தேன். என்னை அனுதாபத்துடன் உற்றுப் பார்த்தார். தொடர்ந்து அதிகாரி ஏதோ சொன்னார்.
இத்துடன் முதல் கட்ட விசாரணை முடிந்துவிட்டது. அடுத்தடுத்து விசாரணைகளுக்கு உங்களுக்கு அறிவிப்பார்கள். இனி அடுத்து உங்களை படம் எடுப்பார்கள், உங்கள் கைரேகைகளை பதிவு செய்வார்கள். உங்கள் கடவுச்சீட்டில் ஆறு மாதத்திற்கான தற்காலிக வதிவிடா தருவார்கள். உங்களை ஒரு விடுதியில் கொண்டு போய் விடுவார்கள். அங்குதான் நீங்கள் இருக்க வேண்டும்' என்று மொழிபெயர்ப்பாளர் சொல்லி முடித்தார். விசாரணையை ஒலிப்பதிவு செய்தவர் ஒலிப்பதிவுக் கருவியை நிறுத்தினார்.
சில விநாடிகள் செல்ல பக்கத்திலிருந்த கண்ணாடி அறையிலிருந்து ஒரு பெண் சில தாள்களைக் கொண்டு வந்து அதிகாரியிடம் கொடுத்தாள். அது அச்சடிக்கப்பட்ட தாள்கள்.
அதிகாரி மொழிபெயர்ப்பாளரைப் பார்த்தார். மொழிபெயர்ப்பாளர் என்னைப் பார்த்து, அதிகாரி கேட்ட கேள்விகளும் நீங்கள் சொன்ன  பதில்களும் இத்தாள்களில் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. நான் சொன்ன பதில்கள் அத்தனையும் உண்மையானவை என உறுதிப்படுத்துகிறேன் என்பதற்கு கீழ் கையொப்பமிட வேண்டும்' என்று கையொப்பமிட வேண்டிய இடத்தை மொழிபெயர்ப்பாளர் காட்டினார். மார்க்கண்டு தருமசீலன் என்ற பெயருக்கு மேல் கையொப்பமிட்டேன்.
நான் கையொப்பமிட்டதும் அதிகாரி மீண்டும் அந்தப் பெண்ணிடம் தாள்களைக் கொடுத்தார்.எதிலுமே எனது மனம் இலயித்துக் கொள்ளாத போதும். வேகம் வேகமாக அங்கு வேலைகள் நடப்பதைப் பார்த்து விநாடிப் பொழுதுகளில் வியப்பு ஏற்பட்டது.
பக்கத்து அறையிலிருந்து காவல்துறை சீருடை அணிந்த ஆண் வந்து என்னை அழைத்துச் சென்றார். என்னை நிற்க வைத்தும் தனியாக முகத்தையும் பல கோணங்களில் படம் எடுத்தார்.
அவர் ஆங்கிலத்தில் பேசினார். ஒரு மேசைக்கு முன்னால் இருந்த கதிரையில் உட்காரச் சொன்னார். மேசையலிருந்த ஒரு தட்டையான கருவி மேல் வலது உள்ளங்கையை வைக்கச் சொன்னார். ஒரு வெளிச்சம் என் கையை தடவிச் சென்றது. இடது உள்ளங் கையையும் வைக்கச் சொன்னார்.
எனக்கு முன்னால் இரண்டு தாள்களைக் கொண்டு வந்து வைத்தார். அவை சாதாரண தாள்கள் போலிருக்கவில்லை. வித்தியாசமாகவிருந்தன. இரண்டு தாள்களிலும் மார்க்கண்டு தருமசீலன் என எனது பெயர் இருந்தது.
எனது இரண்டு உள்ளங்கைகளையும் தூரிகையொன்றினால் சுத்தம் செய்தார். இரண்டு பெருவிரல்களிலும் மையொன்றைப் பூசி தாளில் அழுத்துமாறு சொன்னார், தாளின் மேல் அழுத்தினேன். பிறகு இரண்டு உள்ளங்கை முழுவதிலும் மையைப்பூசி தாள்களில் அழுத்தச் சொன்னார். இதற்காககத்தான் எங்கள் உள்ளங்கைகளை அந்தப் பெண் கழுவச் சொல்லியிருக்கலாம் என நினைத்தேன்.
பக்கத்திலிருந்த சின்ன தண்ணீர்த் தொட்டியைக் காட்டி கையைக் கழுவச் சொன்னார். கைகளை கழுவியதன் பின் அவரைத் திரும்பிப் பார்த்தேன். அந்த அறையிலிருந்த இன்னொரு கதவைத் திறந்துவிட்டார். நாங்கள் ஆரம்பித்தில் அமர்ந்திருந்த அறையில் போய் அமர்ந்தேன். என்னோடு வந்த சிலர் அங்கிருந்தனர். சிலரைக் காணவில்லை. பாகிஸ்தான்காரன் அங்கிருந்தான். எழுந்து என்னருகில் வந்து உ;டகார்ந்து ஆங்கிலத்தில்'என்ன கேட்டார்கள்' என்றான் நான் எதுவுமே பேசாதிருந்தேன்.
இப்பொழுது எல்லாரும் வந்துவிட்டார்கள். எல்லாருடைய கடவுச்சீட்டையும் என்னை விசாரித்த அதிகாரி கொண்டு வந்து அவரவர்க்கு கொடுத்தார்.தயக்கத்துடன் கடவுசசீட்டை விரித்தேன். உள்ளே நான்காக மடிக்கப்பட்ட தாளிருந்தது. அதையும் விரித்துப்பார்த்தேன். அந்த நாட்டு மொழியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. ஆறு என்ற இலக்கம் அடைப்புக்குறிக்குள் இருந்ததைப் பார்த்து ஆறுமாத தற்காலிக வதிவிட அனுமதி இதுவாகத்தான் இருக்குமென  என நினைத்தேன்.
காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த நான்கு காவல்துறையினரும்  எங்களை அழைத்துக் கொண்டு கீழே இறங்கினார்கள். மேல்மாடிக்கு வந்த அதே பாதையால்தான் திரும்பவும் அழைத்துச் சென்றார்கள். எங்களை கேலி செய்தவர்கள் இருந்த அதே கண்ணாடி அறையைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தோம்.
எதேச்சையாக அந்த அறையைத் திரும்பிப் பார்த்தேன். பல காவல்துறையினர் இருந்தார்கள். அதில் ஒருவர் ஏதோ குடித்துக் கொண்டிருந்தார். அவர் எங்களைப் பார்த்து இடது கையை விமானம் தரையிலிருந்து மேல்நோக்கி எழும்புவது போல் பாவனை செய்து சிரித்தார்.
நீங்கள் திரும்பிப் போகப் போகிறீர்கள் என்பதைத்தான் அவர் அப்படிச் செய்து காட்டியிருக்கிறார். எனது கடவுச் சீட்டிற்குள்ளிருந்த தாளில் ஆறுமாத தற்காலிக வதிவிட அனுமதியிருந்ததால் அவரின் பாவனை எனக்குள் எந்தப் பதட்டத்தையும் கொண்டு வரவில்லை. தலையைக் குனிந்தபடி நடந்து கொண்டிருந்தேன்.
முன்பு கொண்டு வந்து இறக்கிய அதே வானில் காவல்துறையினர்  எங்களை ஏறச் சொன்னார்கள். வான் ஓடிக் கொண்டிருந்தது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் துரும்பாக அகதிவாழ்வுச் சட்டத்திற்குள் அகப்பட்டு அதன் இழுவைக்குள்  போய்க் கொண்டிருந்தேன்.
வானின் கண்ணாடிக்கூடாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். உயர்ந்த கட்டிடங்கள் சுத்தமான வீதிகள், அழகழகான கடைகள் என பின்னோக்கிப் போய்க் கொண்டிருந்தன. அப்பாவின் முகம், அம்மாவின் முகம், தங்கச்சியின் முகம்;, ஊரிலுள்ளவர்களின் முகங்கள் படித்த பள்ளிக்கூடம், ஓடித்திரிந்த ஒழுங்கை, யாழப்பாண பல்லலைக்கழக வளாகம் என நினைவுக்குள் வந்து கொண்டிருந்தன. கூடவே பத்மகலாவின் முகமும் வந்து நின்றது.
என்னுடைய இன்றைய நிலையினாலும் ஊரின் நினைவினாலும் கண்கள் கசியத் தொடங்கியது. வானின் கண்ணாடியோடு சாய்ந்து கொண்டேன். அகதி முகாம் எப்படியிருக்கும்,  அங்கே தமிழர்கள் இருப்பார்களா அல்லது மற்றைய நாட்டுக்காரர்களும் இருப்பார்களா. எல்லாரையும் ஒரு பெரிய மண்டபம் போன்ற ஒன்றில் தங்க வைப்பார்களா அல்லது தனித்தனி அறைகளில் விடுவார்களா என யோசித்துக் கொண்டிருந்தேன்.
இருபது நிமிடங்கள் வரை ஓடிய வான்  ஒரு அழகிய கட்டிடத்தின் முகப்புக் கேற்றைத் தாண்டிப் போய் நின்றது.
அது நான்கு மாடிக் கட்டிடம். எங்களை இறங்கும்படி காவல்துறையினர் சொன்னார்கள். கட்டிடத்தைப்  பார்த்தபடியே இறங்கினேன். கீழே பல நாட்டுச் சிறுவர்கள் ஒடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களில் சில சிறுவர்கள் தமிழ்ப்பிள்ளைகள். ஒரு சிறுவன் „எல்லாரும் வாங்க இங்கை ஒரு புதுத்தமிழ் மாமா வருகிறார்' என்றான். என்னை நோக்கி ஓடிவந்த சிறுவர்கள் காவல்துறையினரைக் கண்டதும் தயங்கி நின்றனர்.
மேல் மாடிகளின்  அரைச் சுவரில் கைகளை வைத்தபடி சிலர் நின்றிருந்தனர். எங்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
சிலர் எங்களை நோக்கி கையசைத்தனர். காவல்துறையினர் எங்களை அழைத்துக் கொண்டு அந்தக் கட்டிடத்தின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர். அங்கே ஒரு வரவேற்பு அறையிருந்தது. எங்களைக் கண்டதும் ஒருவர் தனது அறையை விட்டு வெளியே வந்தார். காவல்துறையினர் அவருக்கு கைலாகு  கொடுத்தனர், அவரிடம் சில தாள்களை  கொடுத்துவிட்டு அவர்கள் விடைபெற்றுச் சென்றுவிட்டனர். காவல்துறையினருடன் பேசியவர் அந்த அகதி முகாமின் பொறுப்பாளராக இருக்க வேண்டும் என நினைத்தேன்.
எங்கள் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி ஒவ்வொருவராக அந்தப் பொறுப்பாளர் அழைத்தார். ஏற்கனவே அந்த கட்டிடத்தில் இருந்த பலர் எங்களைப்  பார்க்க அங்கே   குழுமிவிட்டனர். அவர்களில் தமிழர் பலர் இருந்தனர். ஆபிரிக்க நாட்டவரும் இருந்தனர். என்னை இன்னும் கூப்பிடவில்லை. நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். தமிழர் ஒருவர் கனிவாக பார்த்துக் கொண்டே வந்து என்னருகில் உட்கார்ந்தார், அவரைத் திரும்பிப் பார்த்தேன் அவர்............... (தொடரும்)


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது ஒருவர் கூடவா கருத்து எழுத மாட்டீர்கள்????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது  தான் பார்த்தேன்

தொடருங்கள் சுமே.........

 

நேரத்துக்கும் யாழ் களத்தின் வளர்ச்சிக்கு உழைக்கும்  உங்கள்  நல்லெண்ண  முயற்சிக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்

 

 

என்ன இது ஒருவர் கூடவா கருத்து எழுத மாட்டீர்கள்????

(உங்கள் கதை நடுவில் நிற்கும் எரிச்சலில் எவரும் வரவில்லையோ :lol: ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம் அண்ணா. அதோட தோட்டத்து மல்லிகை என்பதும் ஒரு காரணமோ தெரியவில்லை. அடுத்த வாரம் நான் எழுதிய பகுதி வருகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம் அண்ணா. அதோட தோட்டத்து மல்லிகை என்பதும் ஒரு காரணமோ தெரியவில்லை. அடுத்த வாரம் நான் எழுதிய பகுதி வருகிறது. 

 

முன் கூட்டியே  வாழ்த்துக்கள்

முயற்சி  பலன் தரும் என்பதற்கு உதாரணம் தாங்கள்

வாழ்க  வளமுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம் அண்ணா. அதோட தோட்டத்து மல்லிகை என்பதும் ஒரு காரணமோ தெரியவில்லை. அடுத்த வாரம் நான் எழுதிய பகுதி வருகிறது. 

 

முற்றத்து மல்லிகையை விட தோட்டத்து மல்லிகை வாசம் அதிகமோ?:D அதுதான் யாழில் ஒரு காதல் ஒடாமல் நிற்குதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது ஒருவர் கூடவா கருத்து எழுத மாட்டீர்கள்????

நீங்களாக முன்வந்து, யாழ்களத்தில் தொடங்கிய ' ஒரு காதல்' திரியை, ஒழுங்காகக் கொண்டு சென்று முடித்திருக்க வேண்டியது உங்களது ' தார்மீகப் பொறுப்பு' என்று நான் கருதியதால், இந்தத் தொடருக்குக் கருத்தெழுதுவதை, வேண்டுமென்றே தவிர்த்தேன்! :D

 

வேறு தனிப்பட, எந்தக் காரணமும் இல்லை!

 

யாழ் களத்தின், இந்தக் கதைத் தொடரில், பங்கெடுத்த அனைத்து உறவுகளும், தங்கள் ஆதங்கங்களை, அவ்வப்போது அங்கு தெரிவித்தே வந்துள்ளார்கள்!

 

ஒன்றை, ஆரம்பித்து வைத்துவிட்டு, ' ஒருவரும் எழுத வரமாட்டினம்' என்று காரணம் கூறுவதை, 'தனது பொறுப்பை' ஒருவர் தட்டிக்கழிப்பதாகவே என்னால் அனுமானிக்க முடிகின்றது! :blink:

 

குறைமாதக் குழந்தைகளை, 'யாழ் களம்', வருங்காலத்திலாவது பிரசவிக்கக் கூடாது என்பது மட்டுமே, எனது ' அவா' அன்றி, வேறெந்த நோக்கமும் அடியேனுக்கில்லை! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களாக முன்வந்து, யாழ்களத்தில் தொடங்கிய ' ஒரு காதல்' திரியை, ஒழுங்காகக் கொண்டு சென்று முடித்திருக்க வேண்டியது உங்களது ' தார்மீகப் பொறுப்பு' என்று நான் கருதியதால், இந்தத் தொடருக்குக் கருத்தெழுதுவதை, வேண்டுமென்றே தவிர்த்தேன்! :D

 

வேறு தனிப்பட, எந்தக் காரணமும் இல்லை!

 

யாழ் களத்தின், இந்தக் கதைத் தொடரில், பங்கெடுத்த அனைத்து உறவுகளும், தங்கள் ஆதங்கங்களை, அவ்வப்போது அங்கு தெரிவித்தே வந்துள்ளார்கள்!

 

ஒன்றை, ஆரம்பித்து வைத்துவிட்டு, ' ஒருவரும் எழுத வரமாட்டினம்' என்று காரணம் கூறுவதை, 'தனது பொறுப்பை' ஒருவர் தட்டிக்கழிப்பதாகவே என்னால் அனுமானிக்க முடிகின்றது! :blink:

 

குறைமாதக் குழந்தைகளை, 'யாழ் களம்', வருங்காலத்திலாவது பிரசவிக்கக் கூடாது என்பது மட்டுமே, எனது ' அவா' அன்றி, வேறெந்த நோக்கமும் அடியேனுக்கில்லை! :icon_idea:

 

எனது "அவாவும்" அதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 3

 

 

 

 

திருமதி.நிவேதா.உதயராஜன் .  

தமிழ்மொழி ஆசிரியையாக இலண்டனில் : பன்முக படைப்பாளி  : சிறுகதைகள் கவிதைகள்இ நாடகங்கள்இ பயிற்சிப்பட்டறை ஆசிரியராக :  தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையில்
செய்தி  வாசிப்பாளர்:  உயிரோடை வானொலியில்   இது போன்ற பன்முக  சமூக சேவையாளரான திருமதி. நிவேதா  தொடர் 3 இல் தனது பேனாவைத் தொடர்கிறார்

 

தொடர்கிறது விழுதல் என்பது....

அவர் என்னைப் பார்த்துச் சிரித்தபடியே என்ன? தம்பி யாழ்ப்பாணமோ? என்றார்.
அவரின் சிரிப்பும் இயல்பான பேச்சும் சீலனுக்கு அந்த நேரத்துக்கு தேவையாகவே இருந்தது. ஓமண்ணை என்று மனதில் சிறு தெம்பு எட்டிப் பார்க்கக் கூறினான். என்ன பேர் தம்பி என்றார் அவர் தொடர்ந்து. முழுப்பேர் தருமசீலன். நீங்கள் என்னைச் சீலன் எண்டு கூப்பிடுங்கோ என்றுவிட்டு உங்கள் பெயரைச் சொல்லவில்லையே என்றான். நான் தவம் ஆறு மாதமா இங்க இருக்கிறன். இனி வெளியில விடுவாங்கள். வெளியில போய்த்தான் ஏதும் வேல.வெட்டி பார்க்க வேணும். நீர் என்னத்தில வந்தனீர் என்று விடுப்புக் கேட்கத் தொடங்க நானும் ஆர்வத்தோடு நடந்தவற்றை விபரித்தேன்.
இங்க ஒவ்வொரு கிழமையும் சாப்பாடுடடுடiரைடீட்டுச் சாமான்கள் தருவாங்கள். உடுப்புகள் வாங்கவும் கொஞ்சப் பணம் தருவினம். கவனமா வங்கி வச்சுச் சமைச்சுச் சாப்பிடவேணும். குசினியும் டொயிலட் பாத்ரூம் எல்லாம் எல்லாருக்கும் பொது......'

 

தவத்தார் இடைவெளி விடாமல் சொல்லிக் கொண்டு போக சுவிஸ் மொழி இடைநிறுத்தியது அவரின் பேச்சை. அவன் கூறியது ஒண்டும் எனக்கு விளங்கேல்லை எண்டாலும் விளங்கின மாதிரிக் கண் வெட்டாமல் அவனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன் நான். அவன் கூறி முடித்ததும் தவத்தார் என்னைப் பார்த்து ' இண்டைக்கு பெட்சீற்றும் தலாணியும் தருவினம். வாங்கிக் கொண்டுவந்து வச்சுபோடும். என்ர அறையில ஒரு கட்டில் இருக்கு. உம்மை அங்கை விடச் சொல்லி அவனிட்டைக் கேட்கிறன். என்று சொல்லிவிட்டு என் சம்மதம் கேட்காமலேயே அவனுடன் சுவிஸ் பாசையில் எதோ கதைத்துவிட்டு வாரும் தம்பி. உமக்கு உம்மட கட்டிலைக் காட்டிறன் என்றபடி முன்னால் நடக்க சீலனும் பின்னல் நடந்தான்.
அவர் கதவைத் திறப்பால் திறந்துகொண்டு ஒரு அறைக்குள் நுழைய அவனும் கூடவே நுழைந்தான். அறை பெரிதாக இருந்தது. மேலும் கீழுமாக ஆறு கட்டில்கள் போடப்பட்டிருந்தன. ஒரு சுவர் பக்கமாக ஒரு மேசையும் இரண்டு கதிரைகளும் மட்டும் காணப்பட மேசையில் தண்ணீர்ப் போத்தல்கள் யூஸ் பெட்டிகள் பழங்கள் என அடுக்கப்பட்டிருந்தன. இன்னொரு பக்கத்தில் கட்டில்களுக்கு இடையே இரு மீற்றர் அகலமுள்ள இரு அலுமாரிகளும் வேறொரு மூலையில் இரு அலுமாரிகளும் இருந்தன.
அறைக்குள் ஒரு வித வீச்சத்துடன் காற்றோட்டம் இல்லாமல் இருந்ததும் சீலனுக்கு மூச்சடைப்பது போல் இருக்க சுற்றிவரப் பார்த்தான்.
மேசை இருந்த பக்கமாக இரு சாளரங்கள் திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தன. ‚
ஏனண்ணை ஜன்னல் திறக்காமல் வச்சிருக்கிரியள் என்றபடி ஜன்னலைத் திறக்கப் போக தம்பி தம்பி அதைத் திறக்காதையும். ஒரே புழுதியும் சத்தமும் கேட்கும். அந்தப்பக்கம் விரைவுப்பாதை. அதுதான் பூட்டியே கிடக்கு என்றவர் இந்தாரும் இதுதான் உம்மட கட்டில் என்று வலதுபக்கக் கட்டிலைக் காட்டினர். கட்டிலுக்குப் பக்கத்தில் தனது பாக்கைக் கொண்டு போய் வைத்தவனுக்கு ஊரிலிருந்த வீடு மனக்கண் முன்னே வர நீண்டதொரு பெருமூச்சை விட்டான்.

 

அவன் என்னத்தைப் புரிந்து கொண்ட தவத்தாரும் என்ன தம்பி செய்யிறது. போர்ச் சூழலால அங்க வாழ்ந்துகொண்டிருந்த  நல்ல வாழ்க்கையை விட்டுப்போட்டு இவங்களிட்டைப் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறம் என்றபடி அவரும் பெருமூச்சை விட்டுவிட்டு சரி வாரும் கீழே போய் சாமான்களை எடுத்துக்கொண்டு வருவம் என்று வெளியே செல்ல அவனும் அவருடன் சென்றான்.
புத்தம் புதிதாக படுக்கைக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் ஒரு பெரிய பொலித்தீன் பையுள் போட்டுக் கொடுக்க அதைக் கையில் வாங்கியவன் விபரிக்க முடியாத ஒரு உணர்வுக் கொந்தளிப்புக்கு ஆளானான். இது நாள்வரை அன்னியர் யாரிடமும் கையேந்தாமல் நிம்மதியாய் போய்க்கொண்டிருந்த வாழ்வு இப்போது கையேந்தியபடியே நகர்கிறது. உலகில் நாம் எண்ணியபடி எதுவும் நடப்பதே இல்லை என்ற உண்மை அவன் மனதை பிசைய நூலறுந்த பட்டமாய் அவன் மனம் எதையும் எண்ணும் மனநிலையிலிருந்து விடுபட்டது.
அண்ணை ஒருக்கா ஊருக்கு டெலிபோன் அடிச்சு நான் வந்து சேர்ந்த விஷயத்தை அம்மாக்குச் சொல்லவேணும் என்றான். உங்களின்ர வீட்டில டெலிபோன் இருக்கே என்று அவர் வியப்பானார். என்ர வீட்டுக்குப் பக்கத்தில விதானையாரின் வீடு. அவையிட்டைச் சொன்னால் அம்மாவைக் கூப்பிடுவினம் என்றான். இப்ப அவசரமே? பின்னேரம் நாலு மணிபோல போனால் காணும்தானே என்றவர் இவனின் பதிலை எதிர்பாராது படிகளில் ஏறத் தொடங்கினார். அவனும் வேறுவழியின்றி அவரைத் தொடர்ந்தான்.
அவன் அறையுள் வந்ததும் அறையைச் சாத்தியவர் தம்பி தேத்தண்ணி ஒண்டு போடட்டே என்றார். அவனுக்கும் அது தேவையாக இருந்தது. கட்டிலில் கொண்டுவந்த பொருட்களை வைத்துவிட்டு வாரும் குசிணியைக் காட்டிறன் என்று சொல்லியபடி செல்லும் அவரைப் பின் தொடர்ந்தான்.

 

குசினி பெரிதாக இருந்தது. மூன்று செட் அடுப்புக்களும் இரு மரப் பெட்டகங்களும் மூன்று துவைக்கும் இயந்திரங்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவர் மரப் பெட்டகத்தின் பூட்டைத் தன்னிடமுள்ள சாவியால் திறந்து அதற்குள் உள்ள பாத்திரம் ஒன்றை எடுத்து இருவருக்கும் அளவாக நீரை நிரப்பி மின்னடுப்பில் வைத்துவிட்டு இரு தேநீர் குவளைகளை வெளியே எடுத்து வைத்தார். அவன் தன கண்களால் அறியத் துளாவினான்.
அடுப்பு சூடேற ஆரம்பித்ததும் பின் பக்கமிருந்து சில கருப்பு நிறப் பூச்சிகள் வெளியே வந்து தகர மூடிகளில் ஊரத் தொடங்கின. அவற்றைப் பார்த்ததும் அவனுக்கு ஒருவித அருவருப்பு ஏற்பட அண்ண உங்க பூச்சிகள் என்று கத்தினான். தம்பி பயப்பிடாதை என்று சொல்லிக்கொண்டே அவனைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு இந்தக் குசினியை எல்லா நாட்டவரும் பாவிக்கிறது.
உவங்கள் எங்கடை ஆட்கள் மாதிரி இல்லை. சரியான குப்பை. நாங்கள் தான் கொஞ்சம் கழுவித் துடைச்சு விடுறது. கோப்பை சட்டி எல்லாம் அப்பிடியே வச்சிட்டுப் போவிடுவாங்கள். நாங்கள் வந்து பார்த்தா எங்கட பொருட்கள் ஒண்டும் கிடவாது. அதுக்குப் பிறகுதான் பூட்டுப் போட்டு எங்கட சாமான்களை கவனமா வச்சிருக்கிறம் என்றார்.

 

அவன் வந்த அன்றே என்னத்தைச் சொல்வது என்று தெரியாமல் தலையை ஆட்டியபடி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தான். என்ன இவர் கொஞ்சம் கூட இடைவெளி விடாமல் தொடர்ந்து கதைத்தபடியே இருக்கிறார். இவருடனே தானே நான் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணியபடி மணிக்கூட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்தான். இன்னும் ஒன்றரை மணித்தியாலம் இருக்கு நாலு மணிக்கு. எதுக்கும் இன்னொருதரம் போன் செய்வது பற்றிக் கேட்டுப் பார்ப்போமா என்று எண்ணியபடி அண்ணை உங்களுக்கு இப்ப ஏதும் அலுவல் இருக்கோ என்றான்.
„ நான் சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் படுத்துப் பழகிட்டன். நித்திரை கண்ணைச் சுத்துது. ஒரு மணியத்தியாலம் ஆவது  படுக்க வேணும். நீரும் முகத்தைக் கழுவிக் கொண்டு கொஞ்சம் உம்மட சாமான்களை அந்த மூலைக் கபேட்டில் அடுக்கிக் கட்டிலையும் விரிச்சு உறைகளையும் போடும். ஒரு மணித்தியாலத்தில எழும்பிடுவன்' என்றபடி அவர் போய் படுத்துவிட்டார்.
தொடரும் 4...............
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் 4  

 

(தொடர் 3 பகுதியின் மிகுதி தொடர்கிறது எழுதியவர் நிவேதா உதயராயன் இலண்டன்)
சீலன் அவர் குறிப்பிட்ட அலுமாரியில் தன் பொருட்களை ஐந்து நிமிடத்தில் அடுக்கிவிட்டான். அவன் விடுமுறையைக் கழிக்கவா வந்தவன்?.  இரண்டு காற்சட்டைகளும் இரண்டு சேர்ட்டுகளுடன் இரண்டு உள்ளாடைகள்;, போட்டிருப்பதைவிட ஒரு சோடி சொக்ஸ், ஒரு சவர்க்காரம், சீப்பு, இரண்டு சாரங்கள், இரண்டு துவாய்கள் என இவற்றை அடுக்க மணிக்கணக்கு தேவை இல்லைத்தானே.
சப்பாத்தைக் கழற்றும் போது வியர்வை நாற்றம் அவனையே முகம் சுளிக்க வைக்க சாரத்தையும் துவாயையும் சவர்க்காரத்தையும் எடுத்துக் கொண்டு முகம் கழுவும் இடம் தேடிப் போனான்.
கதவைத் திறந்ததும் ஒரு அடைசல் மணம் மூக்கைத் தாக்க உள்ளே காலை வைக்கவே அருவருப்பாக இருந்தது. பாட்டாச் செருப்பைக் கொண்டு வந்திருக்கலாம் என மனதில் எண்ணியபடியே ஒருவாறு முகம் கைகால்களைக் கழுவி முடித்து சாரத்துடன் வந்து தன் கட்டிலில் இருந்தவன் தன்னை அறியாமலே அதில் சாய்ந்தான்.
இரும்பாலான கட்டில் படுத்தவுடன் கிரீச் என்று ஒரு சத்தம் எழுப்பியது. தவத்தார் பத்து நிமிடங்களிலேயே நல்ல நித்திரைக்குள் போயிருந்தது மெலிதாகக் கேட்ட அவரின் குறட்டைச் சத்தத்திலேயே தெரிந்தது.
கண்களை மூடிய அவனுக்கு மனதில் ஒரு நிம்மதி ஏற்பட்டாலும் தன்னை அனுப்ப தாய் பட்ட கஸ்டங்கள் மனக்கண்ணில் ஓட கடைக்கண்ணில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. பாவம் அம்மா என் உயிரைக் காப்பாற்ற எத்தனை பேரிடம் கெஞ்சி மன்றாடி தன்னுடைய தாலிக்கொடி நகை நட்டெல்லாம் விற்று என் உயிருக்கு உத்தரவாதம் தந்திருக்கிறா.
என்னை உவங்கள் திருப்பி அனுப்பாவிட்டால் எப்பாடுபட்டாவது அம்மாவின்ர கடன்களை அடைச்சுப் போடுவன். இனி என்னை என்ன செய்வாங்கள் என்று தவம் அண்ணையைக் கேட்க வேணும் என்று எண்ணியபடியே தன்னை அறியாது தூங்கிவிட்டான்.
யாரோ தோளைத் தொட்டு உலுப்புவதை உணர்ந்து திடுக்கிடலோடு எழுந்தவனைப் பார்த்துச் சிரித்தபடியே தவத்தார் நின்றார். „என்ன சீலன் பதகளிச்சபடி எழும்புறீர்' என்று சிரித்தவரை „எத்தனை நாட்களுக்குப் பிறகு நிம்மதியோட இருக்கிறன் அண்ணை, என்னைப் போல இளம் ஆட்கள் எல்லாம் நிம்மதியாக தூங்கி எத்தனை வருசமாச்சு „ என்று பெருமூச்சு விட்டவன் தன் உடைகளை மாற்றிக் கொண்டான். ஏற்கனவே தவத்தாரும் வெளிக்கிட்டு நின்றபடியால் அவனைக் கூட்டிக் கொண்டு போன் செய்வதற்காக வெளியே கிளம்பினார்.

 

அவனிடம் இருந்தது அமெரிக்கன் டொலர்தான். அவன் „அண்ணை இதை மாத்த வேணும் எங்க மாத்தலாம்' என்றபடி காசை அவரிடம் நீட்டினான்.'இப்ப நான் தாறன், பாங் இப்ப பூட்டியிருக்கும் நாளைக்கு மாத்தி தாருமன்' அருகிலிருந்த கடை ஒன்றுக்குள் சென்று தன்னிடமிருந்த தாள்காசை சில்லறையாக மாற்றிக் கொண்டு  டெலிபோன் பூத்தொன்றிற்குள் நுழைந்தார்.
இரண்டு பிராங்; குற்றிகளை அதற்குள் போட்டுவிட்டு அவனிடம்  இலக்கத்தை வாங்கி டயல் செய்து காதில் வைத்தால் சிங்களத்திலும் தமிழிலும், இப்பொழுது நீங்கள் தொடர்பு கொண்ட இலக்கத்துடன் பேச முடியாது என்ற அறிவித்தல் வந்தது.'தம்பி நீங்கள் தந்த போன் நம்பர் பிசியாக இருக்கு'என்று சொல்லி முடியமுதல் அவர் போட்ட பணம் உள்ளே இழுக்கப்பட்டு தொடர்பு துண்டிக்கப்பட்டது. „ போட்ட காசை மிசின் விழுங்கிப் போட்டுது என்றவண்ணம் இன்னொருக்கா அடிச்சுப் பாப்பம்' என்றவாறு மீண்டும் இரண்டு பிராங் குற்றிகளை போட்டுவிட்டு இலக்கங்களை அழுத்தினார்.மீண்டும் அதே நிலை.
„சா.., வீணா நாலு பிராங் போட்டுது என்று சலித்தபடி, வாரும் அங்கால ஒரு கடை இருக்கு. கதைச்சு முடியக் காசு கட்டலாம்' என்று கூறியபடி நடக்கத் தொடங்கினார். அவன் எதுவும் கதைக்காமல் சேர்ந்து நடந்தான்.

 

கடையை அண்மித்ததும் „ இதுதான் கடை, நல்ல காலம் சனம் இல்லை வாரும்' என்றபடி உள்ளே நுழைந்து சுவிஸ் மொழியில் ஏதோ கூற அங்கிருந்தவன் ஒரு அடைப்புடன் இருந்த அறை போன்ற ஒன்றைக் காட்டினான். அதற்குள் இருவரும் சென்று இலக்கங்களை அழுத்த தொடர்பு கிடைத்தது. இவனுக்கு படபடப்புடன் யார் தொலைபேசியில் வருகிறார்கள் என ஆவல் உந்த கலோ கலோ என்றான். ஏழாவது தரம் மணி அடிக்கும்  சத்தத்தைத் தொடர்ந்து போன் எடுக்கப்பட்டு விதானையார் „கலோ „ என்றார். அவன் „நான் சீலன் கதைக்கிறன், நான் வந்து சேர்ந்திட்டன் சுவிசுக்கு... அதுதான் அமமாட்டை ஒருக்கா கதைக்க'என்று இழுத்தான்.
சரி அஞ்சு நிமிசத்தில திருப்பி அடியும் நான் அம்மாவைக் கூப்பிடுறன் என்று கூறியபடி விதானையார் போனை வைத்துவிட்டார். அவனுக்கு மனம் முழுவதும் ஒரு மகிழ்வு பரவியது. இப்ப இரவு எட்டு மணிதானே அங்க. அம்மா என்ன எல்லாம் யோசிச்சுக் கொண்டு இருக்கிறாவோ என்று எண்ணியபடி மணிக்கூட்டைப் பார்த்தான்.

 

„ இன்னும் ஒரு மூண்டு நிமிசம் முடிய அடிப்பம், தற்செயலா உம்மட அம்மா வராட்டி வீண் காசுதானே'  என்று அவர் கூறுவதும் சரியெனப்பட பொறுமையாக மனதுள் எதை எதையோ எண்ணியபடி காத்திருந்தான்.
அவன் காத்திருப்பு கரைய „சரி அடிப்பம்' என்றபடி மீண்டும் அவரே இலக்கங்களை அழுத்தி ரிங் போக அவனிடம் போனை நீட்டினார். தாயின் குரல் அழுகையுடன் „தம்பி சுகமாய்ப் போய்ச் சேர்ந்தியளோ' என்று ஒலித்தது. அவனுக்கும் அழுகை வந்தாலும் அடக்கியபடி „பிரச்சனை இல்லை அம்மா, காம்ப் ஒண்டில்தான் இப்ப விட்டிருக்கிறாங்கள். இனிப் போகப் போகத்தான் தெரியும். இங்க எனக்கு தவம் அண்ணை எண்டு ஒருத்தர் உதவி செய்யிறார். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதைங்கோ, பிறகு ஆறதலா எடுக்கிறன்' என்று ஏக்கங்களை மனதில் நிரப்பியபடியே போனை வைத்தான்.

தொடர்ந்து விழுதல் என்பது... தொடர் 5 எழுதவிருப்பவர் வண்ணை தெய்வம் அவர்கள்  

தொடரும் 5...
 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விழுதல்

 

5வது பகுதியை எழுதுபவர் பிரான்ஸ்சில் இருந்து வண்ணை தெய்வம் அவர்கள் பற்றிய அறிமுத்துடன் தொடர்கிறது

 

இயற்பெயர்: திரு.நா.தெய்வேந்திரம்
புனைப்பெயர்: வண்ணை தெய்வம்
பல்துறையாளர்
எழுத்தாளர், நாடக நடிகர், குறும்பட கலைஞர், வானொலிக் கலைஞர், தொலைக்காட்சிக் கலைஞர்
நடித்த நாடகங்களும், எழுதி நடித்த நாடகங்களும் ஊரிலும் புலத்திலும்:
வீரம் விளைந்தது, தங்கையா? தாரமா?, இதயமற்றவன், மன்னபதி மன்னன், ஜயா மேடைக்கு வருகின்றார், பண்டாரவன்னியன், சாவுக்குச் சவால்!, கிழமைச்சீட்டு, வாழவேணும், நீ ஒரு பெக்கோ, நல்வாழ்வு, சதுரங்கம,; சங்கிலியன்,மாலிகபூர்,இதயமற்றவன், தங்கையா? தாரமா?, இசைமன்னன் நீரோ சங்காரம், பாதை தெரியுது பார், குழப்பத்தில் திருப்பம், நாங்கள் திருந்தமாட்டோம்,விளக்குமாறு, ஒளிபிறந்தது,வேலை வேணும், இன்னும் ஏழு நாடகங்கள்
எழுதிய நூல்கள்: விடிவை நோக்கி, கலைப்பாதையில் இவர்,கதாநாயகன், கலைத்துறையில் இரு மலர்கள்,கொந்தல் மாங்காய்,பொல்லாத மனிதர்கள்,வானலையில் எங்கள் கவிதைகள்,யாழ்ப்பாணத்து மண் வாசனை, தாயக தரிசனம்,
ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கும் சஞ்சிகைகள்: முற்றம் (பாரீஸ்) அகரம் (ஜேர்மனி) நந்தவனம் (தமிழகம்)
பணியாற்றிய வானொலி தொலைக்காட்சி ஊடகங்கள்: முத்தமிழ் மன்ற வானொலி (பாரீஸ்) ரிஆர்ரி (பாரீஸ்)ஏபிசி வானொலி (பாரீஸ்) ரிஆர்ரி தொலைக்காட்சி (பாரீஸ்)ரிரிஎன் (பாரீஸ்)
நடித்த சின்னத்திரைப் படங்கள்: நீதியின் சோதனை, ராஜாவின் ராகங்கள், தனிப்புறா, நீ ஒரு தெய்வம், தீ மழை. போன்றவையாகும்.
இவரது சேவை தொடர எமது வாழ்த்துக்கள்

தொடர்கிறது பகுதி 5 விழுதல் என்பது....

 

 

வெளிநாடு செல்வதற்காக வீட்டைவிட்டுப் புறப்பட்டடு இருபது நாட்களுக்கு மேலாகிவிட்டது. கடைசியாக கண்ணீருடன் விடைகொடுத்த தாயின் முகம் இன்னமும் அவன் கண்களுக்குள் நிழலாடிக்கொண்டிருக்கின்றது. தாயின் கண்ணீருக்குப்பின் இருந்த கண்களில் இருந்த ஏக்கம்! அது மகனைப் பிரிவதை எண்ணிய துயரமும், பிரிந்தாலும் எங்காவது உயிருடன் வாழட்டும் என்ற பரிதவிப்பும் ஒன்றாகச் சேர்ந்து வந்ததுதான் அந்தக் கண்ணீர்!
இருபது நாட்களுக்குப் பின்னர் இன்று இரண்டு நிமிடங்களதான்; தாயுடன் பேசியுள்ளான். இனி எப்பொழுது பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப்போகின்றதோ? கடிதங்களில்த்தான் அதிகம் பேசவேண்டியிருக்கும். தாயின் நினைவுகளை அவன் மறக்க முயன்றான் இப்பொழுது கலாவின் நினைவுகள் துளிர்க்க ஆரம்பித்தன. பத்மகாலாவை அவன் கலா என்றுதான் அழைப்பான்.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் சீலன் மருத்துவபீட மாணவன். கலாவும் அவனுடன் படிக்கும் சக மாணவி. அழகானவள்! வசதியானவள்! அடக்கமானவள்! அனேகமான பணக்காரப் பெண்கள் எப்பொழுதும் தங்களைச் சுற்றி நான்கைந்து பேர்களை வைத்துக்கொண்டு தாங்களே அதிகம் கதைத்துக்கொண்டிருப்பார்கள். அதை அருகிலிருப்பவர்கள் ஆமாம் போட்டு கேட்கவேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் கலா அதற்கு எதிர்மாறானவள்! தேவையில்லாமல் யாருடனும் அரட்டையடிக்கமாட்டாள். அதற்காக பேசாமூஞ்சி என்றும் சொல்லிவிட முடியாது. அளவோடு பேசினாலும் அந்தப் பேச்சில் ஒரு கவர்ச்சி இருக்கும். அர்த்தம் இருக்கும். ஒருமுறை அவளுடன் பேசினால் இன்னொருமுறை பேசவேண்டும் என்னும் ஆவலைத் தானாகவே தூண்டும்.
சீலனுடைய குணாபாவங்களும் அப்படித்தான். இதனால்தானோ என்னவோ கலா சீலனை தனது நண்பனாக்கிக் கொண்டாள். ஆரம்பத்தில் இவன் அந்த நட்பை கொஞ்சம் தூரமாகத்தான் வைத்திருந்தான். காரணம் அவனுடைய குடும்பநிலை அப்படி! தகப்பன் இல்லாத தன்னை தனக்குக் கிடைக்கும் பென்சன் பணத்தில் குடும்பச் செலவையும் பார்த்துக்கொண்டு தன் சக்திக்கு மீறி தனது படிப்புச் செலவையும் பார்த்துக்கொள்ளும் தன் தாயாரின் கனவை நிறைவேற்றி தான் ஒரு மருத்துவனாக வேண்டும் என்பது மட்டும்தான் அவனின் இலட்சியம். அதற்கு இடையில் காதல் கத்தரிக்காய் என எதிலும் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே பெண்களை நண்பராக்கிக்கொள்ள அவன் விரும்பவில்லை
குழந்தைப் பருவத்தில் இனிப்பின்மீது ஆசை வருவதும், வாலிபப் பருவத்தில் காதலில் வசப்படுவதும் தவிர்க்கமுடியாதவையே! சீலனும் அதற்குத் தப்பவில்லை. சாதாரண நட்பு பின்னர் நெருக்கமான நட்பாகி அதுவே காதலாகிவிட்டது.
கலாவின் காதலுக்காக எத்தனையோ சக மாணவர்கள் அலையாய் அலைந்திருக்கின்றார்கள்! அதேபோல் சீலனின் காதலைப் பெறுவதற்காகவும் பல பெண்கள் முயற்சி செய்திருக்கின்றார்கள்! ஆனால் காலமோ
காதலையே விரும்பாத இருவரையும் காதலர்களாக்கிவிட்டது.
இந்த நினைவுகளுடனேயே இருந்த சீலனை தவத்தார் ஏதாவது கேட்டு அவனுடைய எண்ணங்களை குழப்பியபடியே இருந்தார். தவத்தாருக்கு இப்பொழுது பெரும் சந்தோஷம்! தனக்கு கதைத்துக்கொண்டிருப்பதற்கு நல்லதொரு துணை கிடைத்துவிட்டதென்பதால். ஆனால் இயற்கையாகவே தனிமையை விரும்பும் சீலனுக்கு இப்பொழுது அந்த தனிமை இன்னும் அவசியாக தேவைப்பட்டது.
'அண்ணை பக்த்திலை பூங்கா ஒண்டும் இல்லையோ?' தவத்தாரின் கவனத்தை வேறுபக்கம் திருப்பி தனது தனிமைக்கான இடத்தை அவரிடம் கேட்டான் சீலன். 'ஏனில்லை கொஞ்சத் தூரம்தான் ஒரு சின் பார்க் இருக்கு நாளைக்கு கூட்டிக்கொண்டுபோய் காட்டுறன்' சாதாரணமாகப் பதில் சொன்னார் தவத்தார்.
பொதுவாகவே சீலனிடம் உள்ள நல்ல குணங்களில் ஒன்று நாளை என்று எதையும் ஒத்திவைப்பதில்லை. இது பொழுதைக் கழிப்பதற்கானதற்காகவே இருந்தாலும் அது இப்பொழுதோ அந்த தனிமை அவனுக்கு தேவையாக இருந்தது.
'இல்லை அண்ணை நீங்கள் எப்பிடிப் போகவேணும் எண்டு குறிப்பைச் சொல்லுங்கோ நான் போயிற்று வாறன்'
'தம்பி உமக்கு இந்த இடங்கள் இன்னும் பழக்ப்படேல்லை லேசிலை புடிக்கமாட்டீர்'
'அண்ணை முன்பின் வழி தெரிஞ்சே சுவிஸிற்கு வந்தனான்? பத்தாயிரம் கிலோமீற்றர் தூரத்தைத் தாண்டி வந்திட்டனாம், பக்கத்திலை இருக்கிற பார்க்கை கண்டுபிடிக்கமாட்டேனோ? நீங்கள் சொல்லுங்கோ அண்ணை நான் போயிற்று வாறன்'.
சீலனின் வார்த்தைகளில் இருந்த தன்னம்பிக்கை தவத்தாரை வியக்கவைத்தது! அவர் சொன்ன விபரங்களை மனதிற்குள் குறித்துக்கொண்டு சீலன் தனிமையைத் தேடி அறையை விட்டு வெளியேறி வீதியில் நடக்கத் தொடங்கினான்.
சிறிய பூங்காதான் ஆனால் அழகாக இருந்தது! அந்தப் பூங்காவைப் பொறுத்தவைரை ஆட்கள் கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் அமைதியாக இருந்தது! காகம் குருவிகளின் கீச்சல் சத்தங்களின்றி பூங்காவிற்கருகில் சலசலத்தோடும் நீரோடையும், தூரத்தே தெரியும் ஓங்கி நிமிர்ந்த மலை முகடுகளும், பூங்காவின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பந்தல்களில் பூத்துக் குலுங்கிக்கொண்டிருக்கும் அழகுமிகு செடிகளும், மென்மையாக வருடிக்கொடுத்த இதமான குளிர் காற்றும் அவனுக்கு ஆறதலாக இருந்தது.
அழகு படைத்த அந்தப் பூங்காவில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் எல்லாவற்றிலும் பல Nஐhடிகள் அமர்ந்திருந்தார்கள். சிலர் திருமணத்தை எதிர்நோக்கிக் காதலிப்பவர்கள்! வேறு சிலர் திருமணமாகி காதலித்துக் கொண்டிருப்பவர்கள். இன்னும் சிலரோ இரண்டுமே இல்லாமல் பொழுது போக்குக்காக காதலிப்பவர்கள்! அந்தக் காதலர் கூட்டத்திலே சீலன் மட்டும்தான் தனியொருவனாக அமர்ந்திருந்தான்.
இந்தக் காட்சிகளெல்லாம் சீலனுக்கு புதுமையான அனுபவங்கள்! ஊரில் பல்கலைக்கழக வளாகத்தினுள் மட்டும்தான் அவன் கலாவுடன் அருகருகே நின்று சுதந்திரமாக கதைத்திருக்கின்றான். வீதியில் நடக்கும்போதுகூட இருவருக்கும் இடையில் இரண்டடி இடைவெளி இருக்கும்! இங்கோ அருகில் இருப்பவர்களைப்பற்றி எந்தவிதமான அக்கறையுமின்றி ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தமிட்டுக் கொண்டிருப்பதெல்லாம் சீலனுக்கு புதுமையான அனுபவங்கள்...!
அங்கிருந்த எல்லோரும் ஆண் பெண் Nஐhடிகளாக காதலித்துக் கொண்டிருந்தார்கள். சீலன் மட்டும் தப்பித்தவறி தண்ணீருக்குள் விழுந்த வண்டு தத்தளிப்பதைப்போல ஊர் நினைவுகளை இரைமீட்டிக் கொண்டிருந்தான்.
தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை தடுக்கும் நோக்குடன் அரசாங்கம் போடுகின்ற முட்டுக்கட்டைகள்! அதை எதிர்த்து மாணவர்கள் நடாத்துகின்ற போராட்டங்கள்! இதனையே காரணமாக வைத்து அடிக்கடி இராணுவம் விசாரணை என்ற போர்வையில் மாணவர்களை கைது செய்வதும், எச்சரிக்கை செய்து விடுவிப்பதும் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் தொடர் கதையாகவே இருந்தது. மாணவர்களின் போராட்டங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது!.
....................................
அப்படித்தான் அடுத்து நடக்கவிருந்த இலங்கையின் சுதந்திரதின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முதல்நாள் இரவு ஒன்றுகூடிய மாணவர்கள் பல்கலைக் கழக வழாகம் முழுக்க கறுப்புக் கொடிகளாக தொங்கவிட்டிருந்தார்கள். மறுநாள் வளாகத்தில் மாணவர்களைவிட இரண்டு மடங்கு இராணுவத்தினர் குவிக்கப்டிருந்தனர்!
விடுதியில் தேடுதல்கள்! விசாரணைகள் என்று ஒரே அமர்க்களம்! இராணுவத்தினர் எல்லா மாணவர்களையும் விளையாட்டு மைதானதுக்கு வரவழைத்தார்கள். மனித நடமாட்டத்தைக் கண்டவுடன் புற்றுக்குள் ஒடுங்கிக்கொள்ளும் பாம்பைப்போல சீலன்; மாணவர்களின் பின்வரிசையில் தன்னை மறைத்துகொள்ள முயற்சித்தான் அதுதான் இராணுவத்தினருக்கு அவன்மேல் அதிக சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்போல... பின்வரிசையில் நின்றவர்களையும் பயந்து பயந்து நின்றவர்களை முன்வரிசைக்கு அழைத்தார்கள்... முடிவில் சந்தேகத்தின் பேரில் பத்தொன்பது மாணவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்கள்! விசாரணையின் பின்னர் பத்துப்பேர் எச்சரித்து விடுவிக்கப்பட்டார்கள்! ஒன்பதுபோர்மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு! அதில் சீலனும் ஒருவன்!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒரு மாதம்... பின்பு புரமோசன் கொடுக்கப்பட்டு ஒன்பதுபேரும் பூசா முகாமுக்கு மாற்றப்பட்டார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் வாரத்தில் ஒரு தடவை சீலனின் தாயார் வந்து பார்த்துச் செல்வார். பூசா முகாம் சென்ற பின்னர் நான்கு மாதத்திற்குப் பின் ஒருநாள் வழக்கறிஞர் ஒருவரின் துணையுடன் தாயார் வந்திருந்தார்! முன்பு பார்த்ததில் இருந்து பாதியாக தேய்ந்துவிட்டார்!
வெட்டாத தலைமுடி! முகத்தினில் தாடியோடு சீலன்! ஏதிர்காலத்தில் டாக்டராகப் பார்க்கவேண்டியவனை சிறைக்குள்ளே ஒரு பரதேசியை;போல் பார்த்தவுடன் அந்தத்தாய் பதறிவிட்டாள்! பத்து நிமிடங்களை இருவரும் அழுதே கழித்துவிட்டார்கள்! அதன்பின் சில சம்பிருதாயமான நல விசாரிப்புக்கள்! அதன்பின் வழக்கறிஞர் ஆறதலான ஒரு செய்தியைச் சொன்னார். அது 'விரைவில் வெளியில் வந்துவிடுவீர்கள்' என்பதுதான்.
ஆறுதலான செய்திதான் ஆனாலும் சீலன் அதை முழுமையாக நம்பிவிடவில்லை! நடக்கிறது நடக்கட்டும் என்று விரக்தியாகச் சிரித்துக்கொண்டான்! பார்வையிடுவதற்காக கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரம் முடிவடைந்ததால் அவர்கள் விடைபெற்றுக்கொண்டார்கள்!
அன்று இரவு முழுக்க சீலன் தூங்கவே இல்லை. தாயின் நினைவு மட்டுமல்ல? கலாவைப்பற்றிய  நினைவுகளும் அவனை தூங்க விடவில்லை!
தாயார் வந்து பார்த்துச் சென்ற இரண்டு வாரங்களிலேயே சீலனும் அவனோடு கைதுசெய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்!
அறு மாதங்கள் சீலனின் படிப்பு பாழாகிவிட்டது! இனி அடுத்த ஆண்டில் இருந்து புதிதாக ஆரம்பிக்கவேண்டும்! ஆனால் மருத்துவர் கனவையெல்லாம் சீலனின் தாயார் மறந்துவிட்டார்! மகன் மருத்துவராக வாழ்வதைவிட அவன் உயிரோடு வாழவேண்டும் என்பதே அந்தத் தாயின் இப்போதைய சிந்தனை! அதற்காக மகனை வெளிநாடொன்றிற்கு அனுப்பிவைப்பதற்காக உறவுகளிடம் எல்லாம் உதவி கேட்டாள். எதிர்பார்த்தவர்கள் எல்லாம் ஏமாற்றம் அளித்துவிட்டார்கள்.
கிடைத்த சொற்ப பணத்துடன் இருந்த நகைகளையும் தாயின் தாலிக் கொடியை  விற்றும் போதவில்லை. முடிவில் வாழ்ந்துகொண்டிருந்த வீட்டுக்காணியையும் ஈடு வைத்து எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் ஒரு வழியாக பாசத்தை தனது மனச்சிறையில் பூட்டி வைத்துவிட்டு சீலனை இலங்கையைவிட்டு நாடு கடத்திவிட்டார் அந்த அப்பாவித்தாயார்!.
இனிக்காத இரவும், சிரிக்காத பகலுமாக யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் சீலன் இருண்டு தடவைகள் கலாவை சந்தித்து பேசியிருக்கின்றான். முதல் சந்திப்பில் சிறை அனுபவங்களைப்பற்றிப் பேசியே நேரம் கரைந்துவிட்டது. இரண்டாவது சந்திப்பில் தன்னுடைய மருத்துவர் கனவுதான் இல்லாமல் ஆகிவிட்டது ஆனால் நான் மீண்டும் இலங்கைக்கு வரும்போது மருத்துவர் பத்மகலாவைத்தான் பார்க்கவேண்டும் என்று சொல்ல அவள் கண்ணீரால் விடைகொடுத்திருந்தாள். அந்தக் கண்ணீர்த் துளிகள் இன்னமும் சீலனின் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றது!.
(தொடரும் பகுதி 6)
பகுதி ஆறு 6 எழுதுபவர் நோர்வேயில் இருந்து  நோர்வே நக்கீரன் (திரு.திலீபன்)
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பகுதி 6

 

ஆசிரியர் அறிமுகம்

இயற்பெயர் திரு.திருச்செல்வம் திலீபன்

 

வாழ்விடம் - நோர்வே

புனைபெயர் - நோர்வே நக்கீரன்

 

சுமார் 13-15 கையெழுத்துப்பத்திரிகை அரசடி சனசமூகநிலையம்
ஈழநாடு வீரகேசரி இலங்கை ஒரிபரப்புக்கூட்டுத்தாபனம் கவிதை சிறுகதை
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கவிதை சிறுகதை இசையும் கதையும் அறிவிப்பாளர்.
கலைக்கோவில் நாடகமன்றம் வடலியடைப்பு- நடிகன்
கலையொளி நாடகமன்றம் இணுவில் - நடிகன்
புலத்தில்
தமிழ்நாதம் வானொலி:- அறிவிப்பாளம்;நிகழ்ச்சித்தயாரிப்பாளர் (முக்கிய நிகழ்ச்சிகள்- இலக்கியத் தென்றல் (பாடல்களில் கவிநயம்; இலக்கியநயம்;இசையும் கதையும்;சிறுகதை; கவிதை இன்னும்)
குழந்தைகளுக்கான சிரிக்கும் சிட்டுகள்
தேன்தமிழ்ஓசை சிலநிகழ்ச்சிகள்
தமிழ்சங்கம்; நோர்வே இந்துக்கலாச்சாரமன்றம்;தமிழ்நோர்வே இணைவுகூடம்;- நாடகங்கள்-எழுத்து; பாடல்; நெறியாளுகை; நடிப்பு.
4கவிதைத் தொகுப்புகள்
1)கவிமலர்கள்
2)துப்பாக்கியில் துளிர்விடும் தேசம்
3)நள்ளிரவுச் சூரியன்
4)கவிமணிகள்
என்படைப்புக்கள் வெளியான தளங்கள். ஈழநாடு வீரகேசரி  இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் ஒன்று இரண்டு;துருவக்குரல்;நம்நாடு; உதயன் யாழ்ப்பாணம்; உதயன் கனடா;சுவடுகள்;முத்துக்கமலம்;சர்வதேசத்தமிழர்;ஐரோப்பியநேரம் வானொலி;தமிழ்நாதம்;தேன்தமிழ்ஓசை;நோர்வே தமிழ்சங்கம்;துருவக்குரல்; புதியபாதை; தளிர்;காற்றுவெளி;அக்கினிச்குஞ்சுகள்; தேசம்நெட்; இனியொரு
பரிசுகள்: தங்கப்பதக்கம் உதயன்
இலக்கியப்பணிக்கான சிறப்புப் பரிசு நோர்வே தமிழ்சங்கம்

 



 தொடர்கிறது பகுதி 6, 

காதலில் விதைபட்டான்
கண்ணீரில் அடைபட்டான்
சாதலின் காதல்தனில்
சந்தோசமாய் பிடிபட்டான்
    
கண்ணினிலே கண்குத்திக் கண்மணிகள் கரைகையிலே
கண்ணீரே காதல் சொல்லும் காரிகைமனம் என்னவென்று
பெண்ணோடு பிறந்த விந்தப் பேதமைகள் மறைகையிலே
மனதோடு காதல் வந்து மார்பினிலே சாய்ந்து கொள்ளும்.


காதல் கொள் மனத்தால் கண்கள் கண்ணீர் சுமந்தன. கண்ணீர் வென்னீராகி நெஞ்சில் விழுந்து, நனைத்து பின் நெகிழந்;து எரிந்தது மனம். காதலின் சூடு சுமகானதுதான். பிரிவின் துயர் இதமாகுமா? வெற்றிபெற்றுக் குடும்பமாகி காதலில் தோல்வியடைந்த காதலைவிட காதல்பிரிவினால் உணர்வுகளில் வாழும் காதலின் சுகத்தை, இன்பத்தை இனிமையை அவன் அனுபவிக்கத் தொடங்கிவிட்டான்.

ஓம்.....தொடுகையற்ற தமிழ்காதல் உணர்வுகளில் தொடுகையால் உயிர்க்கும், உள்ளமதில் தளிர்க்கும், மனமதில் தவிக்கும், உயிரையே எடுக்கும். சுடும் நினைவுகள் சுகம் தந்தன. உடலால் ஒன்றிணைந்து உறவுகாணும் காதல் சோடிகளிடையே தனிமையில் தன்னவளின் நினைவுகளுடன் இனிமையாக சுகந்தமாக சுகம்கண்டான் சீலன். கற்பனையில் காணும் காதலின் சுகம் கண்ணெதிரே கிடைப்பதில்லை. தன்காதலி கலாவை உள்ளத்தால் உண்டு கொண்டிருந்தான். மனமெனும் மாளிகையின் உப்பரிகையில் முகர்ந்து கொண்டிருந்தான். நிமிடங்கள் நீறாயின. கணங்கள் கரைந்தோடின.

தொடர்ந்தும் கலாவின் நினைவுகள் அவனைக் கலைத்துக் கொண்டே இருந்தது. கடைசிநாள்..... கலாவைக் கடசியாகக் கண்ணுற்ற நாள்..... காதல் கண்ணீராய் கசிந்தொழுகிய அந்நாள் அவனை வதைத்துக் கொண்டே இருக்கிறது. கண்ணீரால் அவள் விடைதந்த காட்சி பசுமரத்தாணியாய்;, பாறைகளில் சிற்பமாய் உணர்வின் உயிராய் நின்று அவனை உருக்கிக் கொண்டிருந்தது.

உதிரமூட்டி வளர்த்த அந்த உன்னதத்தாயின் உணர்வுகளும் அலைமோதின. உலக வரைபடத்தில் எல்லைக் கோடுகள் வரையப்பட்ட தாயின் முகம், சுருக்கம் அவள் வாழ்வையே சுருக்கியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியது. சிறைக்குள் பிடிபட்ட சிட்டுக்குருவியான தன்மகனுக்காய் தீய்ந்துபோன காய்ந்த உடல், வேகுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. குளிவிழுந்த கண்களில் பழிவிழுந்த வாழ்வு. மகனுக்காகவே உயிர் சுமக்கும் உடல்கூடு. அவ்வெலும்புக் கூடுகளுக்குள் என்னை விட்டுவிடு விட்டுவிடு என லப் டப் லப் டப் என்று தட்டிக் கொண்டிருக்கும் இதயம். அங்கே ஒற்றையரசனாய் வீற்றிருப்பான் மகன். இதுவே அவன்தாய்.  

விமானத்தில் அவன் வானமேறும்போது கண்கள் கண்ணீரை மட்டுமல்ல காட்சிகளையும் சுமந்து அவன் இதயத்துள் எங்கே ஒரு மூலையில் பதுக்கி வைத்துக்கொண்டது. உணர்வுகளை மீட்டு அசைபோட்டுக் கொள்கிறான்.

விமானம் வானில் உயர உயர அவனை அறியாமலே மனதில் ஒரு ஏக்கம், இனம்புரியாத தாக்கம். அது என்ன என்பதை அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஏதோ ஒன்றை இழப்பது போன்ற உணர்வு. காலன் ஓய்வின்றி ஓவட்டைம் செய்யும் தேசத்தில் இவன் இழப்பதற்கு என்ன இருக்கிறது? தன்தாயையும் காதலி கலாவையும் தன்நெஞ்சுக் கூட்டில் பூட்டியபடி பயணம் செய்யும் இவனுக்கு இன்னுமொரு இனந்தெரியா ஏக்கம் அவனை ஆட்டிகொண்டுதான் இருந்தது. மண்.. மண்....மண்.

உண்டு கழித்த மண். தவழ்ந்து, உண்று, உருண்டு, புரண்ட மண்ணைப்பிரிகிறோம் என்ற உணர்வும் அவனை வாட்டத்தொடங்கியது. அவனை வாழவைக்காத மண்ணை எண்ணி எண்ணங்களில் வாழத்தொடங்குகிறான். குனிந்து பார்த்தான் தன்தாய்திருநாட்டை. அழகாக கடலில் ஒற்றைக் கண்ணாக பச்சைப்பசேல்  என்று அலைகடல் தாலாட்ட படுத்துக் கிடக்கிறாள்.  அமைதியாக, நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள் ஈழத்தாய். கொதிக்கும் எரிமலைகளையும், கொப்பளிக்கும் பூகம்பங்களையும், கொந்தளிக்கும் சுனாமிகளையும் தன்னில் அடக்கிக் கொண்டு எப்படி அவளால் அமைதிக, நிம்மதியாய்த் தூங்க முடிகிறது. தன்னையறியாலே தன்கைகளை அசைத்து விடைபெற்றுக்கொள்கிறான். விமானம் முகில்களுக்குள் மூழ்கி முக்கிக் கொள்கிறது.

மீண்டும் தான் அமர்ந்திருந்த பூங்காவுக்கே நினைவுகள் நகர்ந்து வந்தன. வெள்ளைக்காரப் பழக்கவளக்கத்தில் கொள்ளைபோன ஒரு இளம் தமிழ்பெண்ணும் அப்பூங்காவில் தன் காதலனுடன் வாயினுள் வாய்வைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தாள் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டிருந்தனர்;. அவன் அருகில் இருக்கிறான் என்பதைப்பற்றி அவள் அலட்டிக்கொள்ளவேயில்லை.

அலைபாயும் எண்ணங்கள் அவனுள் ஆர்ப்பரித்தன. இத்தமிழ் பெண்ணைப்பார்த்த கணம் அவனுக்கு தன்னுடன் ஒஸ்றியாவில் தங்கியிருந்த உடன்பிறவா ஒரு சகோதரியின் நினைவுகள் அவனை ஆட்கொண்டது. கவலைகளின் ரேகைகள் முகத்தில் கோடிட்டன. எண்ணங்கள் நெஞ்சில் பீறிட்டன.

ஒஸ்றியாவில் வந்து இறங்கிய சீலனை முகவர் ஒருதனிப்பட்ட வீட்டில் ஒருபெரிய அறைக்குள் பலருடன் இருக்க விட்டார். ஏற்கனவே பலநாட்டவர்கள் இருந்தபோதும் அவன் கண்ணில்பட்டது ஒரு தமிழ்பெண்பிள்ளை மட்டும்தான். பேச்சுக்குக் கூட ஒரு தமிழன் கிடையாது. அந்த அறைக்குள் நுழையும் போது அவளது கண்கள் அவனை விழுங்கிக் கொண்டது. பேசுவதற்கு ஒரு துணை அவசியம் இவர்களுக்குத் தேவைப்பட்டது. புன்னகைத்தபடி அவளருகில் சென்றான்.வெட்கத்துடன் மௌனமாய் கடைக்கண்ணால் அவனைப் பார்த்துச் சிரித்தாள். ஏனிந்த நாணம்?; ஏனிந்த வெட்கம்? ஆண்களுடன் பழக்கம் இல்லாதவள் போலும்.

ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடின்றி படுக்கைகளை தாறுமாறாகக் கிடந்தன. ஆடு மாடுகளை பட்டி கட்டி விட்டதுபோல் ஒரு அறை. குதிரைத் தொழுவம்போல் வியர்வை நாற்றம். மனிதவாடைகள் இத்தனையையும் உள்வாங்கியும் அசையாது இயங்கிக் கொண்டிருக்கும் சுவாசப்பைகள். உடைமாற்றக் கூட இடமில்லை. இருக்கை, உடுக்கை, படுக்கை எல்லாமே அங்குதான். அவள் அருகில் இருந்த கதிரையில் சென்று அமர்ந்தபடி

'நீங்கள் தமிழா?'
'ஓம் நீங்கள்'
'நானும் தமிழ்தான். நீங்கள் எப்போ எங்கிருந்து வந்தீர்கள்'
'என்னை ஏயென்சீ இரஸ்சியாவில் இறக்கி பின் இன்னுமொரு நாட்டுக்கு காரில் கொண்டுவந்து மீண்டும் விமானம் எடுத்து இங்கே கொண்டு வந்து விட்டார்கள். ஒரு கிழமையாக நான் இங்குதான் இருக்கிறேன்.'
'உங்களுடன் வேறுயாரும் வரவில்லையா'
'வந்தார்களே. சிலரை அங்கேயே இரஸ்சியாவிலும் மற்ற நாட்டில் சிலரையும் விட்டு விட்டு என்னை மட்டும் இங்கு கூட்டி வந்தார்கள்»
'நீங்கள் தனியத் துணிந்து வந்துவிட்டீர்களே!'
'என்ன செய்வது வேறுவழியில்லையே'
'ஏன்....' ஆவலுடன் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
' இல்லை என்னை வந்து இந்தியாவில் திருமணம் எழுதியவர் நோர்வேயில் இருக்கிறார். அவருக்கு இன்னமும் நிரந்தர வதிவிட வசதி கிட்டாததால் என்னைக் கள்ளமாக ஏயென்சி மூலம் காசுகட்டிக் கூப்பிடுகிறார்'
'அப்ப நீங்கள் திருமணம் செய்வதற்காக நோர்வே போகிறீர்கள்'
'ஆமண்ணா.... நீங்கள்...?' பதிலுக்காகக் காத்திருந்தாள்.
'எனக்கென்றொரு நாடில்லை. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வெளியே வந்திருக்கிறேன் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணதோடு'
'அப்ப நீங்கள்......போராளியா'
'போராளிதான் போராடாத போராளி'
'அது எப்படி அண்ணா'
அவன் தன்கதையை விபரமாக விளக்கிக் கூறினான்.

மௌனம் அவர்களை விழுங்கிக் கொள்கிறது. வேதனைகளை ஐPரணித்துக் கொள்ள மௌனம் தேவைப்பட்டது. மெல்ல மௌனத்தைக் கலைத்தான் சீலன்.

'உங்களின் பெயர்'
'சாந்தி'
'எப்போ உங்களை இங்கிருந்து அழைத்துப் போவார்கள். அல்லது உங்களின் அவர் இங்கே வந்து அழைத்துப்போவாரா'
'இல்லை ஏயென்சிதான் முழுக்கச் செய்வார்கள் எல்லாம் அவர் ஒழுங்கு செய்திருக்கிறார்'
'நீங்கள் காதல் திருமணமா அல்லது பேசிச்செய்ததா'
'இரண்டுந்தான் அண்ணா........(மௌனம்)...முதலிலை காதலித்தோம் பின் பெற்றோரின் சம்மதத்துடன்தான் பதிவுத்திருமணம் செய்தோம்'
'அப்ப சீதனம் இல்லாமல் சரிக்கட்டிப்போட்டியள் என்று நினைக்கிறன்'
'என்ன பகிடியா விடுகிறியள். சுளையாய் இருபதுலட்சம் கொடுத்தனாங்கள். அதோடை வீடு வளவு நகை எண்டு.... என்னை பெத்தவர்கள் சும்மா அனுப்பேல்லை.' முகத்தில் சிறுகடுப்பு.

காதலித்துச் செய்தாலும் சீதனம். அகதிக்குக் கூடச்சீதனம். எந்த நாட்டில் அகதி என்பதைப் பொறுத்து சீதனம் ஏறும் இறங்கும். அதிலும் பி ஆர் (நிந்தரவதிவிடம்) பெற்றவர்களுக்கு பத்துமடங்கு கூட. கொடுப்பதற்கு நீ நான் என்று போட்டிகளும் வேறு. பறந்த பறந்து படித்துப் பட்டம் பெற்றாலும் பட்டம் விடுவது அகதிகள்தான். அகதிக்குத் தானே சீதன அந்தஸ்து அதிகமாக இருக்;கிறது.

இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது ஒருவன் வந்து கொண்டிருந்தான். அவன்தான் தனது ஏயென்ட் என்பதை சாந்தி சுட்டிக்காட்டினாள். அவன் சீலனை அழைத்துவந்த முகவன் அல்ல. இவர்கள் ஒரு குழுக்களாகச் செயற்படுகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டான்.

'உங்களுக்கு அவனைத் தெரியுமா? எந்த நாட்டவன்?'
'அவர்; இலங்கையைச் சேர்ந்தவர் பெயர் கனீபா.இவர்கள் தமிழ் சிங்களப் பக்கங்களின் தொடர்புகளைக் கொண்டவர்கள். நன்றாக சிங்களம் தமிழ் இரண்டும் பேசுவான். என்னை எனக்குப்பக்கத்தில் இருந்து இடித்து இடித்துப் பேசிக் கொண்டு வந்தான்'
'இதை உங்களின் அவரிடம் சொன்னீர்களா?'
'இல்லை எனது மொபில் பாஸ்போட் எல்லாத்தையும் வாங்கி வைத்திருக்கிறான்.'
'இதைப் பார்க்கப்போனால் பலர் கூட்டாகச் சேர்ந்துதான் கடத்தல்களை நடத்துகிறார்கள். என்னை அழைத்து வந்தவர்கள் இருவர் ஒருவர் பெயர் சந்திரன் மற்றவர் பெயர் என்னை அப்புகாமி என்று ஒரு சிங்களப ;பெயரில்தான் அழைத்துவந்தார்கள்;. அது உண்மையில் அப்புகாமி என்பவரின் பாஸ்போட்டுத்தான் அதில் எனது படம் ஒட்டப்பட்டிருந்தது.'

இவர்கள் பேசிப் கொண்டிருப்பது சாந்தியின் ஏயென்ட்டுக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ அவர்களை நோக்கி வந்தான்.  

தொடர் தொடரும் 7 இல் விழுதல் என்பது.......
 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 7

 

திரு.நோர்வே நக்கீரன் எழுதிய தொடர் 6 இன் மிகுதி  தொடர் 7 ஆக தொடர்கிறது

'சாந்தி உனது சாமான்களை ஆயத்தம் செய் நாளை நாங்கள் புறப்படவேண்டும். இப்ப உடன் எனது அறைக்கு வா. பாஸ்போட் பற்றிக் கதைக்கவேணும்.'

தன் காதலனை, எதிர்ககலக் கணவனை கனவுகளை அடையப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் புள்ளிமான் போல் துள்ளி ஒடினாள் சாந்தி. அவளைப் பார்த்து இரசித்தவண்ணமே விறைத்துப்போய் நின்றான் சீலன்

காதலின் வலுவையும் சக்தியையும் அறிந்தவன் அவன். அழைத்துச் செல்லப்பட்ட சாந்தி ஒரு அறையில் அமரவைக்கப்பட்டாள்.

'சாந்தி கோப்பி ரீ சோடா என்ன வேண்டும்'
'எனக்கு ஒன்றும் வேண்டாம் என்னை அவருடன் சேர்ப்பித்துவிடுங்கள் அது போதும்'
'நாங்கள்  என்ன மாட்டம் என்றா சொல்லுறம். அதுக்குக் கால நேரம் எல்லாம் கூடித்தானே வரவேணும். அதோடை உன்ரை அவர் முழுக்காசும் கட்டேல்லை' இப்படியே கதைத்தபடி சென்று கதவைத் உள்ளே பூட்டித் துறப்பை சட்டைப்பைக்குள் வைத்துக் கொள்கிறான்.
'ஏனண்ணா கதவைப் பூட்டுகிறியள். இவர் சொன்னவர்தானே நான் நோர்வேக்கு வந்து சேர்ந்தவுடன் மீதி அரைவாசிக் காசையும் தருவதாக'
'அதிலை எனக்கு நம்பிக்கை இல்லை டியர்' என்றபடி அவளின் கைகளை விரல்களால் வருடினான்.
'என்னடா பண்ணுறாய் பன்றி. நான் கல்யாணம் கட்டப்போகிறவள். நீ என்னை பாஸ்போட் பற்றிக் கதைக்க என்றே கூட்டிவந்தாய். நீ என்னை அந்த மாதிரிப் பெண் என்று எண்ணிவிடாதே. நான் நெருப்பு எட்ட நில்லடா'
'நீ நெருப்பாரு கொதி கூத்தாடு இங்கே யாரும் வரப்போறதில்லை. இது எனது சாம்ராட்சியம். நான் உன்னை கொன்று போட்டாலும் கேட்பதற்கு நாதியில்லை'
'தயவுசெய்து என்னை விட்டிவிடு நீ பெண் சகோதரங்களுடன் பிறக்க வில்லையா?'
'பாவம் பார்த்தால் நாம் எதையும் சாப்பிட ஏலாது பிள்ளை. கத்தரிக்காய் வெண்டிக்காயுடன் வயிறு கழுவவேண்டியதுதான். நீ பெரிதாக ஒன்றுமே செய்யவேண்டாம் மிரண்டு பிடிக்காமல் இருந்தால்சரி'
'டேய் நான் பூசைக்காக எழுத்துவரப்பட்ட புஸ்பமடா என்னை விட்டுவிடு'
'நான் இல்லை என்று சொல்லவில்லையே. பூசையை இங்கேயே முடி என்றுதான் சொல்கிறேன். இங்கே நடந்தது யாருக்கும் தெரியாது உன்னையும் என்னையும் தவிர. கணவனுடன் போய் கம் என்று சத்தம் சந்தடி இல்லாமல் யாலியாக வாழ். யார் வேண்டாம் என்றார்?'
'நான் என்னவருக்காக எத்தனை காலமாகத் குண்டு மழைக்குள் தவம் கிடந்தேன் தெரியுமா?'
'மயிலே மயிலே என்றால் இறகு போடாது. அதைப் பிடுங்கித்தான் எடுக்க வேணும் என்றால் எடுத்துத்தான் ஆகணும்'.

எட்டி அவள் கையைப் பிடித்தான்.அறையைச்சுற்றி ஓடத் தொடங்கிளாள். மான்வேட்டை ஆரம்பமாகிவிட்டது. ஆண்டவன் கொடுத்து ஆயுதங்களான பல் நகங்களை பயன்படுத்தனாள். பீதி அச்சம் புதிய இடம் மொழி தெரியாத் தேசம் உதவியற்ற கையறுநிலை, இருப்பினும் இறுதிவரை போராடினாள். இறுதியில் மயங்கிப்போனாள்.

பலமணி நேரமாகியும்; போனவளைக் காணவில்லை. சாந்திக்கு என்ன நடந்திருக்கும் என்ற ஏக்கத்துடன் காத்திருந்தான் சீலன். மனம் கொள்ளவில்லை எழுந்து சென்று அவள் உள்நுழைந்த அறையைத் தட்டினாள். நிசப்தம் ...... நிசப்தம். எங்கு போயிருப்பாள் என்ற எண்ணத்துடன் மீண்டும் வரமுயலும் போது கிளாஸ் ஒன்று விழுந்து நொருங்கிய சத்தம் கேட்டு நின்று நிதானித்தான்.

'ஓ' யாரோ உள்ளே இருக்கிறார்கள்;' அமைதியாக நின்று நிதானித்து மீண்டும் கதவைத் தட்டினான். அங்கே மீண்டும் அமைதி

அமைதி இழந்தவனாக தன் இருக்கைக்கு வந்தான். அப்போது பிற்பகல் மூன்று மணி. கதவு திறபடும் சத்தம் அவனைத் திரும்பச் செய்தது. கலைந்த கூந்தலும், கண்ணீர் வடித்த முகமும் கசங்கிய உடையுடன் உடலிலே சக்தி இல்லாதவளாக தள்ளாடியபடி பொதுவறையில் சீலன் இருந்த அறையினுள் நுழைகிறாள். அங்கிருந்த அனைவரும் அவளையே உற்று நோக்கினர். சீலனைக் கண்டதும்
'அண்ணா அண்ணா என்னைக் கெடுத்துப்போட்டான் அண்ணா'
என்றபடி ஓடிவந்தவள் அவனின் தோழில் சாய்ந்ததும் மயங்கிப்போனாள். அனைவரும் அவனையே பார்த்தபடி தமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கேள்விகளை கணைகளாக எறிந்தனர். அங்கிருந்த வேறுநாட்டுப் பெண்கள் மட்டும் நிலமையைப் புரிந்து கொண்டார்;கள். எழுந்து வந்து உதவ முயன்றும் மொழி அவர்களை விலக்கி வைத்தது.

சீலன் சமையலறைக்குள் சென்று தண்ணீர் எடுத்துவந்து முகத்தில் தெளித்து குடிக்கவும் கொடுத்தான். அவள் மேற்கொண்ட எதுவுமே பேசவில்லை. அதற்கு அவளிடம் சக்தியில்லை. மெதுவாக அவளை வாங்கொன்றில் படுக்கவைத்துவிட்டு விசிறிக்கொண்டிருந்தான் சீலன். உணவு வந்தது ஊட்டிவிட்டான். தென்பு பெற்றவள் நடந்ததை விபரித்தாள்.

'இனி நான் வாழ்ந்து பிரயோசனமில்லை. யாருக்காக, எவருக்காக, எதற்காக புதிய புஸ்பமாக இத்தனை தவங்களின் பின்பு இங்கே வந்தேனோ அது பறிக்கப்பட்ட பின் வாழ்ந்து என்ன பிரயோசனம் அண்ணா'
'அப்படிச் சொல்லாதை அம்மா. இவ்வளவு பணத்தைக் கட்டிவிட்டு உனக்காகக் காத்திருக்கும் உன்னவரை நீ போய் அடையத்தான் வேண்டும். இது நீ விரும்பித் தெரிந்து செய்த தவறில்லை. விபத்து...ஒரு விபத்து. இதை ஒரு கனவாக மறந்து நோர்வேக்குப் போ. உன்னை அனுப்பிவிட்டு மடியிலை நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பார்கள் உன் பெற்றோர். தயவு செய்து இப்படிப் பேசாதே.'
'இந்த நிலையில் அவருடன் போய் வாழச் சொல்கிறீர்களா? இது பாவம் இல்லையா? நான் செய்யும் துரோகமில்லையா?'

குற்றம் செய்தது யாரோ தண்டனை அனுபவிப்பது இவளா? அனுபவித்தது யாரோ அழுவது, அவலப்படுவது இவளா? படைப்பில் கூட இத்தனை முரண்பாடுகளா? தண்டிக்கப்படவேண்டியவன் பிரமனே. நீதியற்ற சமநிலையற்ற படைப்பு இதைப் போலவே சமூகமும். பெண்களுக்கு உலகில் எங்கே விடுதலை உண்டு? இயற்கை கூடப் பெண்ணுக்குத் தண்டனை கொடுக்கிறதே தவிர எங்கே விடுதலை கொடுதத்து. வெறுத்துப்போகிறான் சீலன்.

'அண்ணா! மனச்சாட்சியைக் கொன்று விட்டு வாழச் சொல்கிறீர்களா? ஒவ்வொரு முறையும் அவர் என்னருகில் வரும் போது இந்தக ;காடையனின் நினைவுதானே வரும். நான் அப்பவும் சொன்னனான் நான் வேறு யாரோடையும் வெளிநாடு வரமாட்டன் எண்டு. கேட்டாரோ.... இல்லையே அண்ணா.'

சீலனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பற்களை நறுநறு என்று கடித்துக் கொண்டான். வேகமாக எழுந்தான்
'தமிழ்பேசும் ஒருநாய் பன்றி இப்படி நடந்து கொண்டானே. பொறுக்கி உன்னை விடமாட்டேனடா' என்றபடி சமையல் அறையில் கிடந்த பொல்லென்றை தூக்க ஓடினான். சாந்தி அவனை இழுத்து மறித்தாள்.

'அண்ணா எனக்காக நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம். நீங்கள் ஊரில் பட்ட அவலம் போதும். பெரும்பணத்தைப் புரட்டி கடன் வாங்கித் தந்த காத்துக் கொண்டிருப்பார் உங்கள் அம்மா. எனது பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன். இவன் தமிழனே இல்லை. இவனைவிட சிங்ளவர்;கள் எவ்வளவோ மேல். கூடவிருந்து குழிபறிக்கும் கொச்சைக் கூட்டம் இருக்கும் வரை எமக்கு மனித இனத்துக்கே விடுதலை கிடையாது அண்ணா'

தான் பாவிக்கப்பட்ட பொருள் போல் தன்னை உணர்ந்தாள், வெட்கப்பட்டாள், வேதனைப்பட்டாள், ஆத்திரப்பட்டாள், பெண் பேதையால் என்னதான் செய்வாள்.

அவள் கூறியதில் நியாயம் இருந்தது. இருப்பினும் மனச்சாட்சி, இனவுணர்வு மனிதநேயம் சீலனுள் எழுந்து சம்காரம் செய்தது. கடமை அவனை முடமையாக்கியது. பாசம் உணர்வுக்குப் பாடைகட்டியது. காதல் அவனைக் கட்டிப்போட்டது

'தங்கைச்சி நீ வேறு எந்தத்தப்பான முடிவுக்கும் வரமாட்டாயே'
'இல்லையண்ணா. ஆனாலும் அவனை என்னால் மன்னிக்க முடியாது. ஏதாவது அவனுக்குச் செய்யவேணும். நான் தமிழிச்சி என்பதை காட்டவேண்டும். ஓர்; மயிர் நீர்த்தாலும் உயிர்வாழாது இக்கவரிமான்'
'தங்கைச்சி இப்பதான் சொன்னாய் ஒன்று செய்யமாட்டேன் என்று உயிர் நீர்ப்பதைப் பற்றிப் பேசுகிறாய் பயமாக இருக்கிறது சகோதரி.'
'அண்ணை ஒன்றுக்கும் பயப்படாதையுங்கோ. பயந்தால் வெளிநாடு வெளிக்கிடக் கூடாது. வெளிக்கிட்டா எல்லாத்துக்கும் தயாராக இருக்கு வேணும். நான் ரெடி அண்ணை'

வாய்க்கு வாய் அண்ணை அண்ணை என்றவள் அழுகையை நிறுத்திக் கொண்டு எதற்கோ, எதற்கும் தயாராகிவிட்டாள். அவளின் துணிவில் அவள் தற்கொலை செய்யமாட்டாள் என்பது மட்டும் உறுதியாகி விட்டது.

'தங்கைச்சி! இதையெல்லாம் பெரிசு படுத்தாது ஒரு கனவுபோல் மறந்து எதிர்காலத்தை கணவனுடன் களிப்பாக மகிழ்ச்சியா நடத்து. இதை உன் கணவர் கூட அறியமாட்டார். நீ சொல்லாதவரை'
'பெண்ணாக இருந்தால் தான் என் நிலைபற்றிப் புரியமுடியும். அண்ணை என்னைத் துரோகம் செய்யச் சொல்கிறீர்களா? எனக்கும் மனச்சாட்சி இருக்கண்ணை. நான் கற்பிழந்தவள். நான் கற்பிழந்தவள். பறிக்கப்பட்டவள் பயன்படுத்தப்பட்டவள்'

'நீ கற்பிழந்தவள் இல்லை பறிக்கப்பட்டவள். கற்பு என்பது உடலுக்குரியது அல்ல. உள்ளத்துக்குரியது. மனதளவில் நீ உன் கணவனுக்காக கற்புடன்தான் இப்பவும் இருக்கிறாய். இதில் சந்தேகமே இல்லை. கற்பெனப்படுவது சொற்திறப்பாமை என்று இலக்கியங்களிலும் சொல்லியிருக்கிறார்கள். நீ உன்கணவருக்குக் கொடுத்து வாக்குப்படியே நடக்கப்பார். கண்டபடி மனதை அலைபாயவிடாது நோர்வேக்கு போகும் வழியைப் பார்த்துக்கொள்'.

'நீங்கள் படித்தவர் வரைவிலக்கணம் எல்லாம் அழகாகச் சொல்கிறீர்கள். எனக்கு என் நெஞ்சுக்கு வஞ்சகமா நடக்க முடியாது. என்னைக் கெடுத்தவனையும் சும்மா விட இயலாது.'
'அப்போ என்ன செய்யப்போகிறாய்?'
'என்னால் என்ன செய்யமுடியும், பெண்ணாகப்பிறந்து விட்டேனே. இந்த எழியவனை நம்பி வந்துவிட்டேனே. என்தலைவிதி...என்தலைவிதி யாரைத்தான் நோவது' மீண்டும் அழத் தொடங்கினாள். சீலன் அவளைத் தேற்றிக் கொண்டிருந்தான். சாந்தியை இழந்த சாந்திக்காக சீலனின் இதயம் கீலம் கீலம் ஆனது. இருந்தும் மனதில் ஒருபயம் இவள் ஏதாவது செய்து விடுவாளோ என்ற எண்ணம் மனதில் ஓடிமறைந்து கொண்டிருந்தது.

இரவுணவு வந்தது சாந்தி சாப்பிட மறுத்தாள்.
'சாப்பிடாமல் இருந்து சாகவா போகிறாய் சாப்பிடம்மா. தென்பாக இருந்தால்தான் நாளைக்கு நோர்வே போறதுக்கான ஆயத்தங்களைச் செய்யலாம். பிடி சாப்பிடம்மா' சீலன் ஊட்டி விட்டான்.
'எனக்கொரு அண்ணை இருந்தால் உங்களை மாதிரித்தான் இருந்திருப்பான். அண்ணா உங்களை விட்டுப்பிரிய மனமில்லை அண்ணா. நாளைக்கு என்னை நோர்வேக்கு அழைத்துப் போவதாகத்தான் கூறினான். கள்ளவிசா சரிக்கட்டியிருந்ததையும் காட்டினான். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அண்ணா' வீறிட்டு அழுதாள். அனைவரும் திரும்பிப்பார்த்தனர்

அவளைத் தேற்றிக் கொண்டிருந்த சீலன்
'நீ எப்பாடு பட்டாவது இந்த ஏயென்டுடன் நோர்வே போய் சேர். இதுவே உனக்கு உசிதமானது. அதன்பின் இதை நீ உன் கணவனுக்கு சொல்ல ஏதாவது செய்ய இயலுமா என்று பார். சொல்லாமலே விட்டாலும் யாருக்கும் தெரியப்போவதில்லை'
'யாருக்குத் தெரிவது தெரியாதது இல்லையண்ணா பிரச்சனை. என்னுணர்வுக்கு என்னிதயத்துக்கு என்மனச்சாட்சிக்கு நான் பதில் சொல்ல வேணுமண்ணா. ஒரு ஆணுக்கு இது இலகுவாக இருக்கலாம். இது என்னுடல் சம்பந்தமானது. உணர்வு சம்பந்தமானது. சரியண்ணா! எனக்கு நித்திரை வருகிறது தூக்கம் தூக்கமாக வருகிறது' போராடிய களைப்பு, மனதில் ஏற்பட்ட இளைப்பு, பெண்மையின் பொறுப்பு பயன்படுத்தப் பட்டோம் எனும் வெறுப்பு, உடல் உள்ள வேதனைகள், அவமானம், மானபங்கள் என அவளினுள் ஒரு குருசோத்திரமே நடந்து கொண்டிருந்தது.
'சரி நாளைக்குக் கதைப்பம்' ஓம் என்று தலையாட்டிவிட்டு சீலனின் அருகே இருந்த கட்டிலில் சாய்ந்து கொண்டாள். தூக்கம் கண்களைத் தழுவிக் கொண்டது. எப்படி இவளால் இத்தனைக்குப் பின்னும் தூங்க முடிகிறது?. இப்பதான் வல்லுறவுக்கு உள்ளானவள் எப்படித் தூங்குகிறாள்?

மனதின்காயம், அதிர்ச்சி, அனைத்தும் அவளின் உணர்வுகளுக்கு தடைவிதித்திருக்குமோ? அனைத்தையும் மறப்பதற்கு இயற்கை கொடுத்த மருந்தா தூக்கம்? உண்மையில் தூங்குகிறாளா என்பதை மெல்லிய வெளிச்சத்தில் பார்க்கிறான். இருந்தாலும் அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. உழன்று கொண்டான் மாறிமாறிப் புரண்டு படுத்தான். தூக்கம் அவனைத் தூக்கவில்லை. இருந்தாற்போல் சீலன் தன்னையறியாமலே தூங்கிவிட்டான்

இரவு 11மணி தூங்குவது போல் நடித்தவள் சமையல் அறைக்குச் சென்று நீர் குடித்துவிட்டு அங்கிருந்த ஒரு கத்தியையும் எடுத்து வந்த தன் தலையணை அடியில் சொருகிக் கொண்டாள். அவன் மீண்டும் வருவான் என்று உள்மனம் உரைத்திருக்க வேண்டும். ருசிகண்ட பூனை சும்மாவா இருக்கும்? அவளை நோர்வே அனுப்புவதற்கு முன் அவளைத் தின்று, உணர்வுகளைக் கொன்று விடவேண்டும் என்று எண்ணியவன் சும்மாய் இருப்பானா? அவள் எதிர்பார்த்தது போல் ஏயென்சிக்காரன் இரவு 11:30 மணிபோல் மெல்ல மெல்ல மம்மல் இருளில் வருவது அவளுக்குத் தெரிந்தது. எதிர்பார்த்திருந்தவள் தயாரானாள். சீலன் உலகையும் தன்னையும் மறந்து தூக்கிக் கொண்டிருந்தான்.

அவளருகில் வந்த ஏயென்சிக்காரன்

'சாந்தி....சாந்தி ..... சாந்தி கோலுக்கு வெளியே வா. நான் ஒன்றும் செய்யமாட்டேன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். மனச்சாட்சி குத்துகிறது, நாளை எட்டுமணிக்கு நோர்வேக்கு வெளிக்கிடவேணும்' என்று மெல்லிய தாழ்ந்த குரலி;ல் பேசினான். சாந்தியும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு ஆரளவம் கேட்காதவாறு நகர்ந்து அவனுடன் இணங்குவதுபோல் சென்றாள். அவன் அவளை 7ம் மாடியில் இருந்து 8ம் மாடிக்கு அழைத்துச் சென்றான். அது  அவனின் படுக்கையறை. பழைய குருடி கதவைத்திறவடி என்பது போலனது. இந்தமுறை அவன் கதவை தாழிட்டபோது சாந்தி சங்கடப்படவே இல்லை.

'ஏன் என்னை இங்கே அழைத்து வந்தாய்? நீ என்னை ஒருதடவை கெடுத்தது போதாதா? நாங்களும் மனிதப்பிறப்புகளாடா கேவலம் கெட்ட பிண்டமே'
'ஒருதடவை கெட்டால் என்ன ஒன்பது தடவை கெட்டால் என்ன ஒன்றுதானே. முடிந்தது முடிந்துபோச்சு இன்னும் ஒருதடவை... ஒரே ஒரு தடவை உன் சம்மத்துடன்...முரண்டு பிடிக்காதை சாந்தி. இஞ்சை பார் பாஸ்போட்டை உன்படத்துடன்...விசா...அதுவும் செங்கன் விசா குத்தி வைத்திருக்கிறன். போனாலும் போனாய் என்னை ஒருதரம் சந்தோசப்படுத்திவிட்டு போவேன். மாதக்கணக்கில் வெளிநாடுகளில் நிற்காமல் உன்னை அனுப்புவதற்கு எவ்வளவு சிரமப்பட்டு காசுகளை விட்டெறிந்து விசா எடுத்தனான் தெரியுமோ'

விசாவுக்காக விபச்சாரம் செய்யக் கேட்கிறானா? என்று எண்ணிக் கொண்டவள், அனைத்தையும் அவதானமாகக் கேட்டுக் கொண்டு பேசாது நின்றாள் சாந்தி. சாந்தி சாந்தமாகவே நின்றாள். அவளை நெருங்கி அணைக்க வந்தவனை இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியால் குத்து குத்து எனக் குத்திக் குதறினாள். சத்தம் வராதவாறு குரல்வளையை அறுத்தாள். தன் ஆத்திரம் தீரும்வரை தன்னை நாசம் செய்தவனுக்கு நாராசமானாள். எதை தன்னாயுதமாகப் பாவித்தானோ அதைத் துண்டாடினாள். மெல்ல எழுந்து இரத்தத்தை அங்கிருந்த துடைதாளினால் துடைத்துவிட்டு மெல்ல நிதானமாக நடந்தாள் அந்த அறையை விட்டு... மிக நிதானமாக அமைதியாக எந்தப்பதட்டமும் இன்றி ஆளரவம் கேட்டாது 7ம் மாடியிலுள்ள தன்கோலுக்கு வந்தாள். சீலன் தன்னையறியாமலே தூங்கிக் கொண்டிருந்தான்.

கறைபடிந்தவளாகத் தன்னை உணர்ந்தவள் இரத்தக்கறைபடிந்த கரங்களுடன் புனிதமானாள். மெதுவாக வந்தவள் சீலனின் கால்களை தொட்டுக் கும்பிட்டு விட்டு தன்னுள்

'அண்ணா....அண்ணா....அண்ணா....என்னை மன்னித்துவிடுங்கள். சீலன் அண்ணா நான் தூயமலராக புத்தம் புதுப்புஸ்பமாகவே என்னைச் சமர்ப்பிக்க வந்தேன். இக்கறையை வைத்துக் கொண்டு என்னால் காலம் பூராகக் கலங்கப்பட்டவளாக  செத்துச் செத்து வாழ இயலாது என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணா. எங்கிருந்தாலும் என் ஆத்மா உங்களை வாழ்த்திக் கொண்டே இருக்கும். உங்கள் ஆசீர்வாதத்துடன் நான் போகிறேன் அண்ணா. விடைதாருங்கள்'

அவளின் கண்ணீர் சீலனின் பாதத்தை நனைத்தது. திடுக்கிட்டு எழுந்தவன் கண்களைக் கசக்கி விழிப்பதற்கு முன் எட்டி ஒரு கால்வைத்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு 7ம் மாடியில் இருந்து சாந்தி பாய்ந்து விட்டாள். பாயும் போது கூட
'சீலணண்ணா சீலண்ணா என்னை மன்னித்து விடுங்கள்'

அகிலம் அடங்கியது ஆத்மா அலறிது அதிர்ச்சியே அதிர்ந்து போனது. அவளின் அலறல் சுவர்களில் முட்டிமோதி எங்கும் வியாபித்திருந்தது. சூனியம் அங்கு சூழ்ந்து கொண்டது. உயிர்போகும் போது கூட அணண்ணாய் வரிந்து கொண்டவனை எண்ணிக்கொண்டல்லவா உயிரை விடத்துணிந்துள்ளாள். உண்மையண்ணனாய் அன்பு அண்ணனாய்; சீலனை சிந்தையில் ஏற்று சாகும் வேளை கூட அண்ணனின் நினைவுடன் தானே பாய்ந்திருக்கிறாள்.

அனைவரும் எழுந்து விட்டார்கள் என்ன நடந்தது என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவரை ஒருவர் விசாரித்துப் பரபரப்படையும் வேளை சீலனின் மனதில் சூனியம்.... சூனியம். சாந்தி பாய்ந்த கண்ணாடி யன்னலூடாக கீழே எட்டிப்பார்;த்தான். கைகள் கால்கள், உடல் உதறியடங்க நிட்டி நிமிர்ந்தபடி கிடந்தஅவளின் அவள் உடலில் இருந்து ஆத்மா அடங்கிக் கொண்டிருந்தது.

பூசைக்கு பூத்தமலர் பூசிக்காது போனது- மிருகத்தின்
ஆசைக்கு அகப்பட்டும் அடிபணியாது சாய்ந்தது.
வழிமேல் விழிவைத்துக் காதலன் காத்திருக்க
பழிமேல் விதிசமைத்து வானுலகம் வென்றாளே.


எழுதியவர் நோர்வே நக்கீரா (நக்கீரன், நக்கீரனார்)


தொடர் 8 தொடரும் இதை எழுதுகிறார் திரு.கே.எஸ். சுதாகர் அவர்கள்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 8

 

தொடர் 8 எழுதியவர்: கே.எஸ்.சுதாகர் அவர்கள் அறிமுகம்

1983 இல் இருந்து சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் எழுதி வருகின்றார். முதல் சிறுகதை ஈழநாடு வாரமலரில் 'இனி ஒரு விதி செய்வேம்' வந்தது.

சுருதி, கதிரொளியான் இவரது புனைபெயர்கள்.

இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர்.

இலங்கையில் ஈழநாடு, முரசொலி, சிந்தாமணி, வீரகேசரி, தினக்குரல், தினகரன் போன்ற பத்திரிகைகளிலும் மல்லிகை, ஞானம், ஜீவநதி போன்ற சஞ்சிகைகளிலும் - யுகமாயினி, செம்மலர் வெற்றிமணி (ஜேர்மனி), பாலம் (நியூசிலாந்து), கலப்பை (அவுஸ்திரேலியா), சிவத்தமிழ் (ஜேர்மனி), தென்றல் (அமெரிக்கா), காற்றுவெளி, தளம் என்பவற்றில் இவரது படைப்புகள் வந்துள்ளன.

மரத்தடி, திண்ணை, திசைகள், பதிவுகள், கீற்று, ஈழநேசன், வல்லினம், அப்பால் தமிழ், அக்கினிக்குஞ்சு, தமிழ்முரசு, எதுவரை? வல்லமை, மலைகள் போன்ற இணையத்தளங்களிலும் படைப்புகள் வந்துள்ளன.

'எங்கே போகின்றோம்' (அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்க வெளியீடுஇ குமரன் பதிப்பகம்)இ 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்' (அக்கினிக்குஞ்சு வெளியீடுஇ மித்ர பதிப்பகம்) என இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் வந்துள்ளன.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், ஞானம் சஞ்சிகை, நோர்வே தமிழ்ச்சங்கம், ஈழம் தமிழ்ச்சங்கம் (அவுஸ்திரேலியா), பூபாள ராகங்கள் (இலண்டன்), மரத்தடி இணையம், தென்றல் (அமெரிக்கா), தாய்த் தமிழ்ப்பள்ளி (அவுஸ்திரேலியா) உட்பட இருபதிற்கும் மேற்பட்ட சிறுகதைப்போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்.




தொடர் 8 எழுதியவர்: கே.எஸ்.சுதாகர்

நினைவுகளால் அலைக்கழிக்கப்பட்ட சீலன் நேரம் போனது தெரியாமல் வானத்தை வெறித்துப் பார்த்தபடி இருந்தான். இருட்டிவிட்டதால் பூங்காவில் இருந்தவர்கள் மெல்ல மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
'என்ன தம்பி... பத்மகலாவைப் பார்க்கிலை தேடுகிறீரோ?'  என்றபடியே தோளில் கை பதித்தார் தவம். இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்ட தவம், சீலனின் கண்கள் கலங்கியிருந்ததைக் கண்டுகொண்டார். சாந்தியின் தற்கொலையை தவம் அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். சாந்தியைப் பற்றி சீலன் வாய் திறக்கவில்லை. சில சம்பவங்களை எப்பவும் மூடித்தான் வைக்கவேண்டும். உலையிலே மூடி கொதித்துக் கூத்தாடும்போது, மூடியைத் திறந்து ஆவியை வெளியேற்றிவிட்டு மீண்டும் மூடித்தானே வைக்கின்றோம்.
சீலனின் நினைவுகளைத் திசைதிருப்ப நினைத்தார் தவம்.
'அது ஏன் தமிழன்கள் தங்கட பெயரை இரண்டு இரண்டா வைச்சிருக்கிறான்கள்?'  சீலனைப் பார்த்துக் கேட்டார் தவம். தவம் சொன்னது தன்னையும் பத்மகலாவையும்தான் என்பதை சீலன் புரிந்து கொண்டான். வலிந்து சிரிப்பை வரவழைத்துக் கொண்டே 'உங்கடை முழுப்பேர் என்ன?' என்றான். 'சொல்லமாட்டேனே!' என்றார் தவராசா என்ற தவம்.
இருவரும் இருளிற்குள் அகதிமுகாம் நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். தவம் வந்திருக்காவிடில் தான் முகாமிற்குப் போவதற்கு கஸ்டப்பட்டிருப்பான் என்பதை சீலன் உணர்ந்து கொண்டான்.
தவம் இரவு உணைவை, சீலனுக்கும் சேர்த்து ஏற்கனவே செய்திருந்தார். நேரம் தாமதித்தால் குசினிக்குள் கூத்தாட வேண்டும் என்பதை அவர் அறிவார். அறைக்குள் நுழைந்ததும் அங்கிருந்த ஏனைய நண்பர்கள் சீலனைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு சீலனை அறிமுகம் செய்து வைத்தார் தவம். மேசை மீது இருந்த ஒரு விறுமாண்டி, எதையுமே சட்டை செய்யாது ஏதோ எழுதிக் கொண்டிருந்தான்.
'இன்றைக்கு சீலன் அமைதியாக உறங்கட்டும். பிறகு எல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்கின்றோம்' சொல்லிக் கொண்ட அவர்கள் தங்களின் அன்றாட காரியங்களைப் பார்க்கத் தொடங்கினார்கள். ஒரு மனிதனின் கவலையைக் கூட்டுவதற்கு அதன் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் விரும்புவதில்லை.
விறுமாண்டிக்குப் பக்கத்தில் இருந்த கதிரையில் இருந்து, காவல்நிலையத்தில் சொன்ன எல்லாவற்றையும் மறக்காமல் ஒரு பேப்பரில் குறித்து வைத்துக் கொண்டான்  சீலன். சில ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு அம்மாவுக்கும் தங்கைக்கும் கடிதம் எழுதிக் கொண்டான்.
சீலனின் கட்டில் தவத்திற்கும் விறுமாண்டிக்கும் இடையில் இருந்தது. விறுமாண்டிக்கும் சீலனுக்கும் இடையே இரண்டு அலுமாரிகள் இருந்தன. இரவு நெடுநேரம் சீலனும் தவமும் கட்டிலில் படுத்தபடியே கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் உரையாடல் நாட்டுப்பிரச்சினை குடும்பம் ஊர் இளமைப்பராயம் பள்ளிவாழ்க்கை காதல் என்று போய்க் கொண்டிருந்தது.
'அண்ணை உங்களுக்கும் ஒரு தங்கைச்சி, எனக்கும் ஒரு தங்கை. இரண்டு பேருக்கும் அப்பா இல்லை. உங்களுக்கும் ஒரு காதலி இருக்கின்றாள். என்ன ஒரு ஒற்றுமை!' சொல்லிக்கொண்டே கட்டிலின் மறுபுறம் திரும்பினான் சீலன். அங்கே விறுமாண்டி சீலனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
'காதலி... காதலி' என்று சொல்லிக் கொண்டே சீலனின் கட்டிலுக்கு அருகில் வந்து சம்மாணமிட்டு அமர்ந்தான் அந்த ஆப்பிரிக்கன். இவர்களின் கட்டில்களுக்கு மேலே இருந்த மூவரும் கொல் என்று சிரித்தார்கள். 'காதலி' என்ற தமிழ்ச்சொல்லை அவன் அறுத்துறுத்துச் சொல்லியதில் இருந்து தவத்தின் காதல் பற்றிய பிரசித்தம் தெரிந்தது. தவம் தன் இருகண்களையும் இறுக மூடிக் கொண்டார். விறுமாண்டி எரித்திரியா நாட்டைச் சேர்ந்தவன். ஐசாக் என்பது அவன் பெயர். அவன் தன் கதையைச் சொல்லத் தொடங்கினான். அவனுக்கும் ஒரு காதலி....
அதன் பிறகு விரைவுப் பாதை வழியே ஓடிக்கொண்டிருந்த வாகனங்களின் சத்தம் மாத்திரம் தொடர்ந்து அங்கு கேட்டது. அந்த வாகன்ங்களின் வேகத்திற்கு ஈடாக மூன்று பேர்களின் மனதினுள்ளும் 'காதல் வாகனம்' ஓடிக் கொண்டிருந்தது.

வாழ்க்கை என்றுமே சீராக ஓடிக் கொண்டிருப்பதில்லை. சீரழிந்த வாழ்க்கையிலும் மேடு பள்ளங்கள் உண்டு. அடுத்து வந்த இரண்டு வாரங்களில் நடந்த சம்பவங்கள் சீலனின் மனநிலையை மேலும் புரட்டிப் போட்டன.
|விடுமுறைக்காக மட்டக்களைப்பிற்குச் சென்ற கலா மீண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திரும்பவில்லை|
|தவம் விதிவிட அனுமதியைப் பெற்றுக் கொண்டு அகதி முகாமை விட்டு வெளியேறியமை|
ஒன்று பேரிடி. மற்றது தவத்தைப் பொறுத்தவரை நன்மைதான் என்றாலும் சீலனுக்கு ஒரு கை ஒடிந்தது போல.
இனி வேலை தேட வேண்டும். பிறகு அம்மாவையும் தங்கையையும் கூப்பிட வேண்டும். அதன் பின்புதான் திருமணம் என்பது தவத்தின் திட்டம்.
'சீலன் நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை. நீ இந்த வாழ்க்கையைப் படிக்கும் வரை என்னாலான உதவிகளை வந்து செய்து தருவன்' அகதிமுகாமை விட்டு வெளியேறும்போது தவம் சீலனுக்கு உறுதியளித்தார். என்னதான் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினாலும் எல்லா நேரங்களிலும் எல்லா உதவிகளையும் தவத்தினால் செய்ய முடியவில்லை. அப்பொழுதுதான் ஐசாக் கை கொடுத்தான். அவனும் சீலனைப் போல ஆங்கிலம் கதைப்பான். அங்கிருந்த நான்கு ஆபிரிக்கர்களில் ஐசாக்தான் நல்லவன் என்பதைப் போகப் போக தெரிந்து கொண்டான் சீலன்.
தவத்தின் இடம் தொடர்ந்தும் வெற்றிடமாக இருந்தது. அதற்கு தமிழ் கதைக்கக்கூடிய ஒருவன் வந்தால் நன்றாக இருக்கும் என்று சீலன் எண்ணிக் கொண்டான். அகதிகளுக்கென ஒழுங்கு செய்யப்பட்டிருந்த 'டொச்' மொழி வகுப்பிற்கு தினமும் போய் வந்து கொண்டிருந்தான். அவனுடன் சூடானியர்கள், எரித்திரியர்கள், சேர்பியர்கள் என்று மேலும் பலர் அங்கே இருந்தார்கள். குளிர் இன்னமும் வாட்டி வதைத்தது. போகப் போக எல்லாம் பழக்கத்திற்கு வந்துவிடும்.
கலா யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த முகவரிக்கு இரண்டு கடிதங்கள் எழுதிக் கொண்டான். மட்டக்களப்பு முகவரி அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. கடிதங்களைப் போடுவதற்காக அதிகாலை தெருவில் இறங்கி தபால் கந்தோர் நோக்கி நடந்தான். முதன் முதலாக தனியே புறப்பட்டிருந்தான். கடும் குளிர். பனிப்புகாரினுள், அவனை எதிர்த்தால்போல் பள்ளிக்குச் செல்லும் சுவிஸ் நாட்டுப்பிள்ளைகள் வந்து கொண்டிருந்தார்கள். சீலனைக் கடக்கும்போது ஏதோ ஒரு குரலில் கேலி செய்து கத்திவிட்டுச் சென்றார்கள். அவர்களின் அந்தச் செய்கை சீலனுக்குச் சங்கடத்தை உண்டாக்கியது. தபால் கந்தோரில் முத்திரை கேட்டு வாங்குவதற்குள் போதும் என்று ஆகிவிட்டது. தவம் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.
அன்று சீலனுக்கொரு கடிதம் அகதிகள் திணைக்களத்திலிருந்து வந்திருந்தது. அகதி அந்தஸ்து வழங்கும் அதிகாரியைச் சந்திப்பதற்கான கடிதம் அது. இரண்டாம்கட்ட விசாரணை. ஆனால் சீலன் அதற்கு இன்னமும் தயாரில்லை. மருத்துவம் படித்தது, பல்கலைக்கழகத்தில் வைத்து அவனை இராணுவம் பிடித்தது, யாழ்ப்பாணம், பூசா சிறைகளில் இருந்ததற்கான ஆதாரங்களை நாட்டு நிலமைகள் காரணமாக எடுப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆதாரங்கள் எல்லாம் அகதி அந்தஸ்து கிடைக்க போதுமானவைதானா? சந்தேகம் மனதில் எழ, சீலன் பல குழப்பமான சிந்தனைகளுக்கு ஆட்பட்டான்.
தவம் அகதி முகாமை விட்டுபோய் மூன்றாம் நாள்---ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் வந்திருந்தார். சீலனை தான் இருக்கும் வீட்டிற்குக் கூட்டிச் சென்றார். போகும் வழியில் மீண்டும் அம்மாவுடன் சீலன் கதைத்தான். அடுத்தமுறை ரெலிபோன் கதைக்க வரும்போது தங்கைச்சியையும் கூட்டி வரும்படி சொன்னான். கலாவின் மீதான காதல் தங்கைச்சிக்குத் தெரிந்தே இருந்தது.  அம்மாவிற்குத் தெரிந்திருந்தால் எப்போதே கொன்று போட்டிருப்பார்.
தவம் இருக்கும் வீடு ஐந்து நிமிட பஸ் ஓட்டத்தில் இருந்தது. பஸ்சில் போய் வருவதற்கான வழிமுறைகளை தவம் சீலனுக்குக் கற்றுக் கொடுத்தார். கலாவைப்பற்றி சீலனிடம் எதுவும் பேசவில்லை. ஏதாவது தெரிந்தால் அவனாகவே சொல்லுவான் என்பது தவத்திற்குத் தெரியும்.
'எப்ப பாத்தாலும் ஒரே கேள்வி ஒரே பதில். சொல்லிச் சொல்லியே வாழ்க்கை சலிச்சுப் போச்சு. காம்ப் வாழ்க்கை கழிஞ்சதே பெரிய கண்டம் கழிஞ்சமாதிரி. இப்பதான் சுவிஸ் நீரோட்டத்திலை கலந்திருக்கிறன். றெஸ்ற்ரோறண்ட் ஒண்டிலை வேலை கிடைச்சிருக்கு. கொஞ்சம் தூரம்தான். தூரத்தைப் பாத்தா ஒண்டும் செய்யேலாது. பத்து மணித்தியால வேலை' சொல்லிக் கொண்டே விசுக்கு விசுக்கென்று நடந்தார் தவம். பச்சைப் புல்வெளியையும் இயற்கைக் காட்சிகளையும் ரசித்தபடியே அவரின் பின்னால் விரைந்தான் சீலன்.
'வேலைக்குப் போன இடத்திலைதான் உன்னைப் போல ஒரு நண்பன் கிடைச்சான். சின்னப் பெடியன்தான். இப்ப அவன்ரை வீட்டிலைதான் இருக்கிறன். அவன்ரை அப்பாவும் தங்கைச்சியும் அங்கை கூட இருக்கினம்.'
வீட்டிற்குச் சென்று சப்பாத்துக்களைக் கழற்றிக் கொண்டிருக்கும்போது, வீட்டோடு சேர்ந்திருந்த டெக் ஒன்றினுள் இருந்த மனிதர் ஒருவர் கை தட்டி அங்கே வரும்படி கூப்பிட்டார்.
'அங்கிள்... அங்கிள்... வரச்சொல்லிக் கூப்பிடுகிறார். என்ரை ஃபிறண்டின்ரை அப்பா...' தவம் சொல்லிக் கொண்டே மேலுக்கு ஏறத் தொடங்கினார்.
'தவம்... சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வாரும். தம்பிக்கும் எடுத்துக்கொண்டு வாரும். தம்பி.... நீர் இஞ்சை வாரும். தவம் எல்லாம் உம்மைப்பற்றிச் சொல்லிப் போட்டான். என்ரை பெயர் ராமலிங்கம். உம்முடைய பெயர் சீலன்.' தொடக்கமே சீலனுக்கு கலகலப்பாக இருந்தது.
தொடரும் 9 ..............
 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தொடர் 9 எழுதியவர்: கே.எஸ்.சுதாகர்

தொடர்கிறது விழுதல் என்பது……
தவத்திற்கு ஏற்ற ஆள்தான் அவர் என்று முடிவெடுத்தான் சீலன். வயது அறுபது மட்டிடலாம். அவருக்குப் பக்கத்தில் சாப்பாட்டுக் கோப்பைää பாதி காலியான ’சுவாஸ் ரீகல்’ போத்தல்ää ஒரு றேடியோப்பெட்டி. சீலன் அங்கிருந்த இருக்கையில் அமரும் முன்னே கதையைத் தொடங்கிவிட்டார் அவர். அரசியல்ää இனக்கலவரம்ää போர்ää இயக்கம்ää வதைகள்ää கொலைகள்...
“அப்பா.... இப்பதான் அவர் வந்திருக்கிறார். அதுக்கிடையிலை அவரைப் போட்டு அறுக்காதையுங்கோ!” கதவைத் திறந்து எட்டிப் பார்த்துச் சொன்னாள் ஒரு சின்னப்பெண்.
“உவள் என்ரை கடைசிப்பிள்ளை நிரோஜா. வேலை செய்துகொண்டு இப்ப கொம்பியூட்டரும் படிக்கிறாள். கெதியிலை கலியாணம் நடக்கப் போகுது. மாப்பிள்ளை ஒரு டொக்ரர் பொடியன். மகன் உதிலை பிள்ளையின்ரை கலியாண அலுவலாத்தான் போயிருக்கிறான். வந்திடுவான். எனக்குக் கொஞ்சம் மறதிக்குணம். இப்பவே சொல்லிப்போட்டன். தவத்தோடை நீரும் கலியாணவீட்டுக்கு வாறீர்ää என்யொய் பண்ணிறீர்” சொல்லிக் கொண்டிருக்கும் போதே தவம் இரண்டு பிளேற்றுகளில் சாப்பாட்டைப் போட்டு எடுத்து வந்துகொண்டிருந்தார். மகள் தண்ணீர் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனாள்.
“சரி....  நான் இனிக் குழப்பேல்லை. இரண்டுபேரும் வடிவாச் சாப்பிடுங்கோ” சொல்லிக் கொண்டே ரேடியோவை முறுக்கினார் ராமலிங்கம். அதிலிருந்து இரைச்சல்தான் வந்தது. அதைத் தலைகீழாகத் தூக்கிப் பிடித்தார். சரித்துப் பிடித்தார். பின்னர் மேசையிலை தொப்பெண்டு போட்டார். சீலன் சாப்பாட்டின் ஒரு கவளத்தை எடுத்து வாயிற்குள் வைத்திருக்கமாட்டான்.
“உது எல்லாத்துக்கும் காரணம் அந்தக் கிழவன் தான். கிழவனாலை வந்த வினை” என்றார் இராமலிங்கம். தவத்திற்கு புரைக்கடித்தது. சீலனுக்கு சாப்பாடு மேலுக்கும் போகாமல் கீழுக்கும் போகாமல் நடுவில் தொண்டைக்குழிக்குள் நின்றது. ”இந்தச் சொல்லை நான் ஐம்பது தரத்துக்கு மேலை கேட்டிட்டன்” ராமலிங்கத்திற்குக் கேட்காதவாறுää சீலனின் காதிற்குள் குனிந்து தவம் சொன்னார்.
“தவம் அண்ணை... உவரின்ரை கூத்தைப் பாருங்கோ.... குடியிலை நேற்று அம்மாவின்ரை துவசத்தை மறந்து போட்டார்” மீண்டும் மகள் எட்டிப் பார்த்து சொல்லிவிட்டு கதவுடன் ஒட்டி நின்றாள்.
“நான் ஒண்டும் மறந்து போகேல்லை. சைவச்சாப்பாட்டைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்கு மரத்துப் போச்சு தம்பி” அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ‘சுவாஸ் ரீகல்’ மணம் காற்றில் தவழ்ந்து வந்தது. மகள் உள்ளே போனதும் தவம் அவருக்கு அருகே போய் அமர்ந்தார்.
“ஏன் அங்கிள் அப்பிடிச் செய்தனியள்?”
“தம்பி.... நான் ஆவிகளை அதிகம் என்ரரெயின்ற் பண்ணுறேல்லை” அவரின் பதிலில் சீலன் உதட்டை விரித்துச் சிரித்தான். சாப்பாடு வெளியே சிந்தியது. சீலன் சுவிற்சலாந்து வந்து மகிழ்ச்சியாக இருந்தது இன்றுதான். ராமலிங்கத்தின் மகன் சற்று நேரத்தில் வந்துவிட்டான்.
”என்ன மணவறை சரிவந்திட்டுதோ?”
“ஓம்...ஓம்... இஞ்சை நான் படுகிற கஸ்டம் உங்களுக்கு எங்கை தெரியப்போகுது. ஜென்ரில்மன் மாதிரி உதிலை இருங்கோ” தகப்பனின் கேள்விக்கு மகன் சலித்தான்.
”நான் ஜென்ரில்மன் தான். பின்னை உங்களைப்போல அகதியாவே வந்தனான். அதிதியா நேர்வழியிலை பயப்பிடாமல் வந்தனான்.”
“இஞ்சை பாருங்கோ தவம் அண்ணை. நான் அகதியா வந்து எவ்வளவு கஸ்டப்பட்டு உவரையும் தங்கைச்சியையும் கூப்பிட்டனான். உவரோடை கதைச்சுப் பிரயோசனமில்லை” மகன் அவ்விட்த்தைவிட்டு எழுந்து போய்விட்டான்.
மூன்று மணியளவில் திரும்பவும் சீலனை அகதி முகாமிற்குக் கொண்டுவந்து விட்டுச் சென்றார் தவம்.
சீலன் தினம்தோறும் அம்மாவின் கடிதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆறுமாதத்திற்கான தற்காலிக வதிவிட அனுமதி கரைந்து கொண்டிருந்தது. அகதிமுகாமில் மேலும் சில தமிழர்களைச் சந்தித்துக் கொண்டான். மொழியைப் படிப்பதில் தீவிரமாக இருந்தான். படிப்பதில் சிரமம் இருக்கவில்லை. ஒன்றரை மாதங்களில் சிறிய கட்டுரை எழுதுமளவிற்குத் தேர்ச்சி பெற்றுவிட்டான். அவனது கட்டுரை ஒன்று புகைப்படத்துடன் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளிவந்திருந்தது.
ராமலிங்கம் வீட்டுக் கலியாணவீட்டு ஆராவாரத்தினால் தவம் சீலனிடம் வருவது குறைந்திருந்தது. இடையில் இரண்டொரு தடவைகள் தான் இருக்கும் வீட்டிற்குக் கூட்டிச் சென்றார். அப்பொழுது மாப்பிள்ளை இலங்கையிலிருந்து வந்துவிட்டதாகச் சொன்னார்.
மாலை வகுப்பு முடிவடைந்து ஷொப்பிங் செய்துவிட்டு இருப்பிடம் நோக்கி வந்து கொண்டிருந்தான் சீலன். முகாமின் கேற்றின் முன்பாக சிறுவர்கள் ஒரு பந்துக்காக அடிபட்டுக்கொண்டு நின்றார்கள். ஒரு தமிழ்ச்சிறுவனும் இன்னொரு சிறுமியும் கட்டிப்புரண்டு பந்துடன் மல்லுக்கட்டினார்கள். அவர்களிற்குக் கிட்டவாக நின்ற சுவிஷ் பிரஜைகள் சிலர் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றனர்.
“கேற்றுக்கு உள்ளுக்கை போய் நிண்டு விளையாடுங்கோ. வெளியிலை வரப்படாது” சிறுவர்களைக் கலைத்தான் சீலன். உள்ளே ஓடியவர்கள் பனிக்குவியல்களை அள்ளி எறிந்து விளையாடத் தொடங்கினார்கள். அந்தச் சிறுமி பந்தை நெஞ்சோடு இறுக அணைத்தபடி கேற்றுக்கு உட்புறமாக ஒளிந்து நின்று “இல்லை... இல்லை... என்ரை என்ரை” என்று தமிழில் கத்தினாள். அப்போதுதான் சீலன் அந்தச்சிறுமியைக் கவனித்தான். அவள் தமிழ்ச்சிறுமியே அல்ல! ஒரு பொஸ்னியப் பெண்ணாகவோ அல்லது சேர்பியப் பெண்ணாகவோ இருக்க வேண்டும். அந்தச் சம்பவம் சீலனை நெகிழ வைத்தது. சிந்தனையைத் தூண்டியது. சீலனின் வாழ்க்கை அவனுடையதும் பலருடையதுமான சம்பவங்களாக விரிந்து செல்கின்றது.
இராமலிங்கம் வீட்டுக் கலியாண்வீட்டிற்குப் போயிருந்தான் சீலன். சிறிய ஹோல். நூறுபேர் வரையில் இருந்தார்கள். தவம் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார். தாலி கட்டியாயிற்று. மணமக்களுக்கு அட்சதை போடுவதற்காக பலர் வரிசையில் நின்றார்கள். அவர்களை வாழ்த்துவதற்காக தவம் சீலனைத் தன்னுடன் வரும்படி கூப்பிட்டார். மணமகனுக்கு சீலன் கை குடுத்தான். அவன் சிரித்தான்.
“என்னடாப்பா... இஞ்சை நீ நிக்கிறாய்?”
அவனை சீலனால் அடையாளம் காணமுடியவில்லை.
“என்னை உனக்குத் தெரியாதுதான். நான் அப்ப கடைசி வருஷத்திலை இருந்தேன். நீ முதல் வருஷம். பூசா கீசா எண்டெல்லாம் கலக்கிய தேசத்தொண்டன் அல்லவா நீ. எப்படி இருக்கிறீர்? அது சரி ... என்னமாதிரி... பத்மகலா கனடா போய்ச் சேர்ந்திட்டாவோ?” சீலன் அடியும் நுனியும் புரியாமல் மலங்க முழித்தான்.
“உனக்கு ஒண்டுமே தெரியாது போல. கொழும்பிலை நான் நிக்கேக்கை ஒருநாள் பத்மகலாவை வெள்ளவத்தையிலை சந்திச்சனான். அப்பதான் தான் கனடா போகப் போறதாகச் சொன்னா”
எல்லாவற்ரையும் கேட்டுக்கொண்டே மணப்பெண் தலை குனிந்து நின்றாள்.
“சீலன் லைன்லை கனபேர் நிக்கினம். உனக்குக் கலா கிடைச்சிட்டாள்தானே! பிறகு மாப்பிள்ளையோடை கதைப்பம். அவர் ஒண்டும் ஓடிப் போகமாட்டார்தானே” என்று சொன்ன தவத்தை நிமிர்ந்து பார்த்தாள் மணப்பெண். தவம் அவளுக்குக் கையைக் காட்டிக் கண் சிமிட்டினார்.
சீலனுக்குக் அந்தக் கட்டடமே சுழல்வதுபோல இருந்தது. மறைவாக இருந்த ஒரு கதிரையில் இருந்துகொண்டான். சாப்பாடு ‘ரெடி’ என்று சத்தமிட்டார்கள். வேண்டா வெறுப்பாக ஒரு பிளேற்றில் சிறிதளவைப் போட்டுக்கொண்டு ஓரமாக ஒதுங்கினான்.
மாலை நேரம். சீலன் தவத்துடன் ஹோலில் இருந்து ராமலிங்கம் வீட்டிற்கு வந்திருந்தான். மணமகனின் உறவினர்கள்ää உணவு விடுதிகளில் வேலை செய்பவர்கள் என வீடு மகிழ்ச்சியில் கரைபுரண்டது.  அந்த மகிழ்ச்சியில் ஒன்றினைய முடியாமல் சீலன் தவித்தான். வீட்டின் மத்தியில் கம்பளம் விரிக்கப்பட்ட செற்றியில் மணமக்கள் நடுநாயகமாக வீற்றிருந்தார்கள். அவர்கள் கதைத்ததையோ சிரித்துக் கழித்ததையோ காண முடியவில்லை. மீண்டும் ஒருதடவை கலாவைப்பற்றி மாப்பிள்ளையிடம் விசாரித்தான். அவன் சொன்னதையே மீண்டும் சொன்னான். வேறு எந்த விபரமும் தனக்குத் தெரியாது என்று கையை விரித்தான். மாப்பிள்ளையுடன் கதைத்துக் கொண்டிருக்கும்போது மணமகள் கைத்தொலைபேசியில் யாருக்கோ செய்தி அனுப்பிக் கொண்டிருந்தாள். திருமண விருந்துபசாரத்திற்கு வந்தவர்கள் மெல்லக் கலைந்து போய்க்கொண்டிருக்கும் தருணத்தில் அவள் எழுந்து தனது றூமுக்குள் நுழைந்தாள். மாப்பிள்ளை சுற்று முற்றும் பார்த்துவிட்டு அவளைத் தொடர்ந்து உள்ளே போய் கதவைச் சாத்தினார்.
சற்று நேரத்தில் உள்ளே ஏதோ சத்தம் கேட்டது. மணப்பெண் டெக் பக்கம் இருந்த கதவினூடாக வெளியே பாய்ந்தாள். தன் குதியுயர்ந்த செருப்புகள் இரண்டையும் கழற்றிப் புல்வெளிக்குள் எறிந்தாள். டெக்கினுள் காட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தவர்களும்ää அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராமலிங்கமும் திகைத்து விடுபடமுன் வீட்டு வாசலை நோக்கி ஓடினாள். சடுதியாக ஒரு கார் கிரீச்சிட்டு வாசலில் வந்து நின்றது. ஒரு ஆபிரிக்கன் காருக்குள் இருந்து இறங்கி அவளின் கையைக் கோர்த்தான். இருவரும் பாய்ந்து காருக்குள் ஏறினார்கள். வாசலை நோக்கி ஓடிவந்தவர்களுக்குää இருவரும் கையைக் காட்டியபடியே பறந்தோடினார்கள்.
“என்ன தம்பி... என்ன நடந்தது?” மாப்பிள்ளையைப் பார்த்துக் கேட்டார் ராமலிங்கம்.
“நான் ஒண்டும் செய்யேல்லை மாமா! கத்தி ஒண்டை நீட்டினபடி – கிட்ட வராதைää தொடாதைää குத்துவன் எண்டாள். பிறகு கதவைத் திறந்து ஓடீட்டாள்” திகைப்பில் இருந்து நீங்காதவராக மாப்பிள்ளை நின்றார்.
”சீலன் நீ இனியும் இஞ்சை இருப்பது நல்லதல்ல. வா போவம்” என்றார் தவம்.
“அண்ணை... இந்த நேரத்திலை நீங்கள் இஞ்சை இருக்கவேணும். எனக்கு இப்ப தனியப் போகத் தெரியும்” வீட்டைவிட்டு வெளியேறினான் சீலன். வீட்டு வளவிற்குள் போன தவம்ää திரும்ப ஏதோ நினைத்தவராக சீலனைக் கூப்பிட்டபடி பின்னால் ஓடி வந்தார்.
”சீலன் ஒண்டுக்கும் ஜோசியாதை. மின்னாமல் முழங்காமல் எண்டு சொல்லிறது இதைத்தான்” சொல்லிவிட்டு திரும்பி நடந்தார் தவம். தவம் சொன்னது மணப் பெண்ணைத்தான் என்றாலும் அது கலாவுக்கும் பொருந்தி வருவதாகவே சீலன் உணர்ந்தான்.
பேருந்து நிலையத்தை நோக்கி எட்டி நடை வைத்தான். நேரத்திற்குப் போகாவிட்டால் முகாம் பொறுப்பாளரின் கோபத்திற்கு ஆளாகலாம். ஆனால் எங்கும் ஒரே இருளாக இருந்தது.இராமலிங்கத்தின் மகள் நிரோஜா தந்தைக்குச் செய்தது பெரிய துரோகம். தான் ஒரு ஆபிரிக்கனை காதலிப்பதை எப்படியாவது தந்தைக்குத் தெரிவித்து அதை  முதலில் தந்தை மறுத்தாலும் அவரைச் சம்மதிக்க வைத்திருக்க வேண்டும். தனக்கு திருமணம் பேசும் போதே வேண்டாம் என்று சொல்லியிருக்க வேண்டும். கொழும்பிலிருந்து வந்தவரை பலபேருக்கு முன்னால் தலைகுனிய வைக்க  வேண்டிய அவசியமே வந்திருக்காது. படித்தவள் அதுவும் இளந்தலைமுறையினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்ட நாட்டில் வாழ்பவள். ச்சே இபபடி நடந்து கொண்டு விட்டாளே.....

திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு தாலி கட்டிய பிறகு நிரோஜா இப்படிச் செய்திருக்கவே கூடாது. எனக்கோ தவமண்ணைக்கோ முதலில் தெரிந்திருந்தால் இராமலிங்கத்தை சமாதானப்படுததி கொழும்பலிருந்த வந்த மாப்பிள்ளைக்கு நிலைமையை விளங்கப்படுத்தி அந்த மணவறையிலேயே; ) ஆபிரிக்க காதலனுக்கு திருமணத்தை செய்து வைத்திருக்கலாம் நிரோஜா  எல்லோரையும் அவமானப்படுத்தியிருக்கக்கூடாது என்று எண்ணியவாறே  நடந்து கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு கார் அவனருகில் வந்து நின்றது.கார் கதவு திறக்கப்பட்டதுääஅதிலிருந்து.......... ( தொடரும் 10 )

தொடர்10 எழுதுபவர் பண்ணாகம் திரு.இ.க.கிருட்ணமூர்த்தி அவர்கள் யேர்மனியில் இருந்து எழுதுகிறார்.


பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி அவர்களின் அறிமுகம்

- 1976 இல் முதன்முதலாக வட்டுக்கோட்டைத் தொகுதியில் பண்ணாகம் என்னும் இடத்தில் நடைபெற்ற தமிழ் மகாநாட்டில் மாணவ தொண்டனாக பொது சேவையில் அடி எடுத்து வைத்தது.  

- பல பொதுசேவை அமைப்புகளின் நிர்வாகத்திலும் அங்கத்தவராகவும்ää கலைää நாடகத்துறை இயக்குனராக கடமையாற்றியபோது எழுதி இயக்கிய ’’வேலையாள் வேண்டும்’;’ என்ற நாடகம் பெண்களின் நடிப்பில் யாழில் நாடக போட்டியில் 2 இடம் பெற்றது. யேர்மனியில் 15 சிறு நகைச்சுவை சமூக நாடகங்கள் எழுதி இயக்கியது அத்துடன் சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார்

- வெளிவாரி பல்கலைக்கழக வத்தகமானி பட்டப்படிப்பை கற்றுவந்த காலத்தில் பொது சேவையால் கவரப்பட்டு வெளியேறியமை. யாழ் - ஆணையாளர் திரு.போஜன் தலமையில் சென்யோன்ஸ் அன்புலன் காங்கேசன்துறைப் பிரிவில் 1983இல் ’’கோப்பிறல்’’; பதவியில் கடமையாற்றியது. 1983 இன கலவரத்தால் கொழும்பிலிருந்து கப்பிலில் அழைத்து வரப்பட்ட தமிழர்களை  நடேஸ்வராக் கல்லுரியில் வைத்து பாதுகாப்பாக மருத்துவ உதவிகள் வழங்கியமை. 1988 இல் ’’முதல் உதவிப்’’ பயிற்சி ஆசிரியராக வடமாராட்சியில் கடமையாற்றியது.

1991 யேர்மனியில் ஐரோப்பிய தமிழ் வாசகர் வட்டம் எனனும் அமைப்பின் இயக்குனராக  இருந்து ஐரோப்பாவில் தமிழ்த்தாகத்தால்  கையெழுத்து. தட்டச்சு ஒருசில கணணி பிரதிகளாக வெளிவந்த 18 சஞ்சிகளை ஒருங்கிணைத்த பெருமையும்  முதன் முதலாக ஓடியோவில் சோலை என்னும் ஒரு சஞ்சிகையை உருவாக்கி வெளியிட்டது இதற்கு திரு.இராசகருணா இணைந்ததும் குறிப்பிடத்தக்கது.

- யாழ் ’’ஈழமுரசு’’ பத்திரிகையின் செய்தியாளராகவும்ää யேர்மனியில் எழுத்தாளர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்ட ’’நமது இலக்கு’’ பத்திரிகையின் முதன்மை ஆசிரியராகவும்ää ’’பண்ணாகம் இணையத்தளம்’’ பிரதம ஆசிரியராகவும்ää யேர்மனியில் தமிழ்பாடசாலையில் ஆசிரியராகவும் செயற்படுகிறார். மற்றும் சமய சமூக ஆர்வலரும் ஆவார்.

தொடர் தொடர்கிறது  10 எழுதுபவர் பண்ணாகம் இக.கிருஸ்ணமூர்த்தி

 

ஆனால் எங்கும் ஒரே இருளாக இருந்தது.இராமலிங்கத்தின் மகள் நிரோஜா தந்தைக்குச் செய்தது பெரிய துரோகம். தான் ஒரு ஆபிரிக்கனை காதலிப்பதை எப்படியாவது தந்தைக்குத் தெரிவித்து அதை  முதலில் தந்தை மறுத்தாலும் அவரைச் சம்மதிக்க வைத்திருக்க வேண்டும். தனக்கு திருமணம் பேசும் போதே வேண்டாம் என்று சொல்லியிருக்க வேண்டும்.
கொழும்பிலிருந்து வந்தவரை பலபேருக்கு முன்னால் தலைகுனிய வைக்க  வேண்டிய அவசியமே வந்திருக்காது.
படித்தவள் அதுவும் இளந்தலைமுறையினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்ட நாட்டில் வாழ்பவள்.
ச்சே.... இப்படி நடந்து கொண்டு விட்டாளே.....
திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு தாலி கட்டிய பிறகு நிரோஜா இப்படிச் செய்திருக்கவே கூடாது. எனக்கோ தவமண்ணைக்கோ முதலில் சொல்லியிருந்தால் இராமலிங்கத்தை சமாதானப்படுததி கொழும்பலிருந்த வந்த மாப்பிள்ளைக்கு நிலைமையை விளங்கப்படுத்தி அந்த மணவறையிலேயே ஆபிரிக்க காதலனுக்கு திருமணத்தை செய்து வைத்திருக்கலாம். நிரோஜா  எல்லோரையும் அவமானப்படுத்தியிருக்கக்கூடாது என்று எண்ணியவாறே என்று நடந்து கொண்டிருந்தான்.
அப்பொழுது ஒரு கார் அவனருகில் வந்து நின்றது.கார் கதவு திறக்கப்பட்டதுääஅதிலிருந்துஆபிரிக்கக்; காதலனான நிக்சனுடன்  நிரோஜாவும் காரில் இருந்து இறங்குவதைக் கண்ட சீலன் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
கார்க் கதவை அப்படியே விட்டு விட்டு அவசர அவசரமா இறங்கிய நிரோஜா சீலனை நோக்கி ஓடிவந்தாள் அவளின் பின்னால் நிக்சனும் வந்தான். அண்ணா அண்ணா எங்கள் வீட்டிலிருந்தா வருகிறீர்கள்? என்று கேட்ட நிரோஜா சீலனை பேசவிடாத தொடர்ந்தாள்.
அப்பா எப்படி இருக்கார்? அண்ணா என்ன சொன்னார்? முரளி பாவம் அவரை நான் எமாற்றிப் போட்டேன்  எல்லம் பயத்தினால் தான் அப்பா அண்ணாவிடம் முதலில் நிக்சனை காதலிப்பதாக  செல்லவில்லை என  மூச்சு விடாமல் செல்லிமுடித்தாள்.
சீலன் என்ன சொல்வது என நினைக்கும் போது
கலோ பிறதர் என நிக்சன் சீலனுடன் கதைப்பதற்கு வந்தான்.
சீலன் தன்னை சுதாகரித்துக்கொண்டு கலோ என்றான்.
நானும் நிரோஜாவும் ஒரே இடத்தில் வேலை செய்கின்றோம் நான் எஞ்சினியாக இருக்கிறேன். எனது அப்பா சுவீஸ்காரர் அம்மா ஆபிரிக்கா இங்கு தான் இருக்கிறார்கள் நாங்கள் 2வருடமாக காதலிக்கின்றோம்  தற்போது அவளுக்கு திருமணம் என்றதும் என்னசெய்வதென்று தெரியாமல் தான் வீட்டைவிட்டு கூட்டிப்போக நினைச்சேன் என ஆங்கிலத்தில் கூறினான்.
சீலனுக்கு அவன் பேச்சு அவன் நல்ல பண்பானவன் என்ற எண்ணம் வந்தது. ஆதனால் எமது தமிழ் கலாசாரத்தை எமது பண்பாட்டை நிக்சனுக்கு எடுத்தக் கூறினான.; நிக்சன்! இப்ப அவள் ஒரு வருடைய மனைவியாகிவிட்டவள் திருமணமாக முதல் இதுபற்றி கதைத்திருந்தால் வேறு முடிவெடுத்திருக்கலாம்
இப்ப நீங்கள் எடுத்த முடிவு அவசரத்தில் எடுத்த முடிவு இதனால் அந்த குடுமத்பத்தில் எல்லோரது சந்தோசத்தையும் அழித்து விட்டீர்கள்.
இதற்கு என்ன செய்யலாம் சீலன் நீங்கள் தான் நல்ல ஒரு வழி சொல்லுங்கள். என்னால் நிரோசாவை விட்டு பிரியமுடியாது. என்றான் நிக்சன்.
நீங்கள் இருவரும் முதலில் நிரோசா வீட்டுக்கு போய் அங்கு அவர்களுடன் பேசி அவர்களை அவர்களின் சம்மதத்துடனும் இதற்கு நல்ல முடிவெடுக்கலாம் நான் தவத்துடன் கதைக்கிறேன்.
உனது தொலைபேசியை தா என வாங்கி தவத்தாருடன் நடந்தவற்றை கதைத்து இவர்கள இருவரும்; வீடு செல்ல இராமலிங்த்தின் சம்மதத்தை பெற்று அவர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தான் சீலன்.
அவர்கள் காரில் ஏறிச் செல்வதைபார்த்த சீலனுக்கு தான் ஏதோ சாதித்துவிட்டேன் என்ற பெருமிதத்துடன் பஸ்க்கு காத்திராமல் சந்தோசமாக முகாமை நோக்கி நடக்கலானான்.
முகாம் சென்றவுடன் தவத்தாருடன் அங்குள்ள பெதுத்தொலைபேசில் தொடர்பு கொண்டு இராமலிங்கம் வீட்டு நிலவரம் பற்றிக் கேட்டான்.
தவம் பெருமிதத்துடன்  „நன்றி சீலன்“ என்றார்
„என்னத்திற்கு நன்றி தவம் அண்ணை“ என்ற சீலனிடம்
„உன்னைமாதிரி தான் மாப்பிளை முரளியும் இங்கு இவர்களை பெரும் சிரப்பட்டு சம்மதிக்கவைத்தார்“ என்றார் தவம்
உன்மையில் கதலின் மகத்தும் தெரிந்தவர் முரளி தனக்கு அவமானம் என எண்ணாது நிரோஜாவுக்காக கதைத்து அவளது அண்ணனையும் சம்ததிக்கவைத்து விட்டான.;
இனி என்ன அவர்கள் சேந்து வாழலாம் என மாப்பிளை முரளியும் ஒதுங்கிவிட்டார். .
ஒரு பெரிய பிரச்சினையை தடுத்து நல்லகாரியம் செய்த திருப்தியோடு சீலன் படுக்கையில் சாய்ந்தான் அப்படியே தூங்கிவிட்டான்.
…………………………..
காலை 6.00 மணியாகியது சீலன் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
சிறிலங்கா  சிறிலங்கா என கூவிக்ககொண்டு விறுமாண்டி என அழைக்கும் ஆபிரிக்கன் ஜக்சன்  ஓடிவந்து சீலனை உலுக்கி எழுப்பினான்.
சீலன் என்னவென்று தெரியாது எழுந்து திருதிரு என விழித்தான்.
விறுமாண்டி தனது காதில் கைவிரல்களை வைத்து தொலைபேசி என கூறினான.;
முகாமில் ஒரு பொது தொலைபேசி உள்ளது அதில் சீலனுக்கு சிறிலங்காவில் இருந்து ஒரு அழைப்பு வந்திருக்கிறது.
அவசர அவசரமாக கீழே இறங்கி ஓடிச்சென்று  தொலைபேசியை தூக்கி
நான் சீலன் கதைக்கிறன் என்றான்
மறுமுனையில் இருந்து ஐயோ! ஐயோ! கடவுளே! என சீலனின் சித்தி பார்வதி பதட்டத்துடன் கத்தி அழுவது கேட்டது
சீலன் என்ன ஏது என தெரியாது குழம்பியபோதும்  மறுமுனையில் கதைப்பது தனது சித்தி பார்வதி என உறுதிப்படுத்திய போது  பதட்டம் மேலும் அதிகரித்தது. பலகாலம் தம்மை எதிரிகள் போல் பொறாமையில் கதைக்காமல் திரிந்தவர் இன்று தொலைபேசி எடுத்து கதைப்பது….
யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் யாருக்கும் ஏதும் என பயந்து எண்ண…..
பார்வதி தொடர்ந்து பேசினாள்

„சீலன் உனது மச்சான் குணா பிரான்சில் இறந்தவிட்டாராம்.“
„ஐயோ ஐயோ எனது மகளின் வாழ்க்கை போய்விட்டுதே“ என தொலைபேசியில் சீலனை பேசவிடாமல் புலம்பிக் கொண்டிருந்தாள் சித்தி பார்வதி
„சித்தி.... சித்தி... எப்ப நடந்ததாம்? யார்? உங்;களுக்கு சொன்னது“ என வினாவினான்
„பிரான்சில் இருந்து சின்னத்தம்பியின் மகன் தான் கூறினான் உனது நண்பன் குமரனுக்கு தெரியாதா அவன் உன்னுடன் கதைத்தவனா. „
„அவர்களுக்கு எனது இந்த நம்பர் தெரியாது.“
„அவர்கள் நம்பர் உன்னிடம் இருக்கா? இல்லாவிட்டால் நான்தாறன் எழுது.“
„நம்பர் இல்லை அதனால் தான் கதைக்கில்லை தாருங்கோ“ என்று சொன்ன சீலன் அருகில் நின்ற விறுமாண்டியிடம் சைகை மூலம் எழுதுவதற்கு ஏதாவது தரும்படி காட்ட அவனும் தன்னிடமிருந்த பேனையையும் கைதுடைக்கும் பேப்பர் ஒன்றையும் கொடுத்தான்.
„சொல்லுங்கோ சித்தி „என நம்பரை எழுதினான்
„எப்படி என்னடாலும்  பிரான்சில் உன் அக்கா கமலாவுடன் தொடர்பு கொள் அவழுக்கு ஆறுதலாக இரு“ என்றார்.
„ஓம் சித்தி நீங்கள் கவலைப்படாதேங்கோ நான் பார்க்கிறன்“ என்றான்
„சரி உன்னை நம்பித்தான நிம்மதியாக இருக்கிறன்“ என்று தொலைபேசி தொடர்பை துன்டித்தா பார்வதி
சித்தி வீட்டாரால் தனக்கு ஏற்பட்ட இழப்புää ஏமாற்றங்கள் எல்லாவற்றையம் மறந்து பிரான்சில்  மச்சான் இறந்ததை எண்ணி கவலைப்பட்டவனாக தமக்கைக்கு ஆறுதலாக இருக்கவேண்டும் என அவன் மனம் ஏங்கியவாறு தன் நிலைமைக் கவலைகளை மறந்தான்.
பிரன்சுக்கு எப்படி தொடர்பு கொள்ளலாம் என யோசித்தவாறு தனது அறைக்கு திரும்பினான்.
தொடரும். 11
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 11

 

தொடர் 11  தொடர்கிறது.

 

எழுதியவர். பண்ணாகம் திரு.இ.க.கிருட்ணமூர்த்தி யேர்மனி
நேரம் காலை 8 மணியானது அந்த நேரம் தவத்தாரும் இராமலிங்கமும் சீலன் அறைக்குள் நுழைந்தார்கள்.
„வாருங்கோ அண்ணை' என சீலன் அவர்களை வரவேற்றான்.
என்ன செய்கிறீர் தம்பி என இராமலிங்கம் விசாரித்தபடி  தம்பிக்கு நன்றி செல்லுவம் என்டு இதாலை கடைக்கு போகேக்கை வந்தனாங்கள்
இதற்கு என்ன நன்றி அண்ணை
தம்பி மகளின்ர இந்த விடயம் மற்றவர்களுக்கு தெரியாமல் உடனடியாக ஒரு முடிவுக்கு வர உங்கட செயல்தான் எனக்கு பெரிசா தெரியுது.
சீலன் இன்று என்ன செய்யபோகிறாய் என தவத்தார் கேட்டார்.
அண்ணை பிரான்சில்  எனது மச்சான் ஒருவர் இறந்ததாக காலை சித்தி கூறிய கதையை சீலன் சொன்னான்
தம்பி உதுக்கேன் யோசிக்கிறாய் இந்தாரும்  போன் என தனது கைத் தெலைபேசியை நீட்டினார்.
வேண்டாம் அண்ணை இதுக்கு காசு கூhடவாக இருக்கும் என்று மறுக்க, „தம்பி காசு ஒன்டும் வேண்டாம் முதலில் நீர் கதைத்து அந்த அலுவலைப்பாரும் இதென்ன பெரியகாசு உன்ர நல்ல மனசுக்கு முன்னால்' என்றார் இரமலிங்கம் . தவத்தாரும் சைகையில் வாங்கு எனக் காட்டினார்.

சீலன் தயக்கமாக போனை வாங்கி தனத நண்பன் குமரன் நம்பரை அழுத்தியவன் மனம் நண்பனைப்பற்றி சிந்தனையில் தள்ளப்பட்டது.
குமரன் சீலனின் பாலிய நண்பண் அவனது கவலை ,சந்தோசம் எல்லாவற்றிலும் பங்கெடுத்த உயிர் நண்பன் என்று கூறலாம். அவன் பிரான்சுக்கு தனது குடும்பத்தாருடன் வந்து 10 வருடங்களுக்கு மேலாகி விட்டது.
சீலனுடன் படித்த காலத்தில் படிப்பபை இடைநிறுத்திதான்; குமரன் பிரான்சுக்கு வந்தான். குமரன் வருவதற்கு 8 வருடங்கள் முன்பே மச்சான் குணா பிரான்சில்  வந்து சேர்ந்தார்.
அவர் வந்து சேர்ந்த  சில வருடங்களில் குடிக்கு அடிமையாகியவர்  ஊரில் உள்ளவர்களுடன்  தொடர்பை துண்டித்தார். சித்தியும்  மனைவி கமலாவும்  பல கடிதங்கள் எழுதியும் குணா எந்தவித பதிலும் போடுவதில்லை அவர் இருக்கிறாரா? இல்லையா? எனக் கூட தெரியாத நிலையில் தான் கமலா சீலனிடம் தனக்கு நண்பன் குமரனிடம் உதவி செய்யும்படி சீலனை கேட்கும்படி கேட்டாள்.   
என்ன நிலையில் இருக்கிறார் என அறிய நண்பன் குமரனிடம் சீலன் உதவி கேட்டான் நண்பன் கேட்டதற்காக குமரன் பலசிரமங்களுக்கு மத்தியில் பலநாட் தேடலின் பின் ஒரு தமிழர் விழாவில் கண்டு பிடிக்க முடிந்தது. அங்கு அவர் தனது கூட்டாளிகளுடன் குடிபோதையில்தான் இருப்பதை அறிந்த குமரன் தனது நண்பன் மூலம் அடையாளம் கண்டுபிடித்தான.;
மிகுந்த சிரமப்பட்டு அவரை தன்னுடன் அழைத்து அவரை மெல்ல மெல்ல குடிப்பழக்கத்தில் இருந்து மீட்ட பின்புதான் கமலாவும் பிரான்;ஸ்  வர முடிந்தது. இதற்கெல்லாம் குமரனுக்கு சீலன் பலமுறை நன்றி சொல்லியிப்பான். ஆனால் பிரானஸ் சென்ற கமலா சீலனை முற்றாக மறந்து எதுவித தொடர்பு மற்று பல வருடங்களாகிவிட்டது
தற்போது மீண்டும் ஒரு உதவிக்காகவே சித்தி சீலனை அனுகியிப்பதும் அதனால் மீண்டும் குமரனிடம் உதவி கேட்பது சீலனுக்கு வெட்கமாக இருந்தது இருந்தாலும் அவனை விட்டால் அவனுக்கு தெரிந்தவர்கள் சிலர் இருந்தாலும் உதவி செய்பவனாக குமரன்தான் இருக்கிறான்.

„என்ன சீலன் யோசனை கதையும'; என தவத்தார் சீலனின் சிந்தனையை கலைத்தார்.
„ஓம் அண்ணை கதைக்கிறன'.; தொடர்பு எண்ணை அழுத்தி குமரனுடன் கதைத்தான்
குமரனிடம் தனது மச்சான் குணா இறந்தையும் கமலாவிற்கு உதவி செய்யும்படியும் கேட்டான்.
குமரன் என்ன குணா இறந்துவிட்டாரா? என ஆச்சரியப்பட்டான். பல வருடம் தெடர்பு இல்லாததால் கமலாவின் புதிய முகவரி பெற்று உதவிக்கு விரைந்தான்.
சீலன் கமலாவிற்கும் தொலைபேசியில் கதைத்து ஆறுதல் கூறி குமரன் உதவிக்கு வருவதாக கூறினான.; அப்போது தான் கமலா தனது எல்லலை மீறிய கவலையை சீலனிடம் கூறி ஓவென அழுதாள்.
குடிக்கு அடிமையாகிய எமது உறவுகள் பல உயிர் பாதுகாப்பு தேடிவந்து இடத்தில் உயிரை வெகு விரைவில் இழந்து விடுகிறார்களே என தனக்குள் நொந்து கொண்டான் சீலன்.
தம்பி நாங்கள் போட்டு வாறம் என இராமலிங்கமும் தவத்தாரும் சென்றார்கள்.

----------
நாட்கள் கிழமைகளாக ,மாதங்களாக ஓடியது
ஒரு நாள் சீலனுக்கு ஒரு கடிதம் வந்ததாக முகாம் பெறுப்பாளர் கொடுத்தார்.

சீலன் ஒரு பல்லலைக்கழக மானவண் என்றதாலும் வயதில் குறைந்தவன் என்பதாலும் அவனது சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாலும் அவனை அகதியாக ஏற்று அனுமதி வழங்கிய கடிதம் வந்திருந்தது அதை அவனே வாசித்து விளங்கி கொள்ளும் அளவுக்கு டொச் மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தான்.
தனது வாழ்வில் ஒரு திருப்பம் வந்ததாக சீலன் உணர்ந்தான் தன்னைச் சுற்றியிருந்த பல தடைகள் உடைபட்ட உணர்வுபெற்றான்.
உடனடியாக தனது தாயார் தங்கைக்கு தொலைபேசியில்  அந்த  செய்தியை  சொல்லி இனிக் கவலையில்லையம்மா இங்கே ஒரு நல்ல வேலை வாய்ப்பும் பெறலாம் என்ற நல்லொரு செய்தியும் கேட்டு அந்த தாயின் மனம் குளிரச் செய்தது.
பல நாட்களுக்கு பின் இந்த செய்தியை சொல்லவென தவத்தார் விட்டிற்கு சென்றான் சீலன்
அங்கு தவத்தார் இருக்கவில்லை. என்ன செய்வது என யோசித்தவேளை தம்பி சீலன் என இராமலிங்கம் கூப்பிட்டுக் கொண்டு சீலன் அருகில் வந்து,
'யாரைத் தேடுகிறீர?; தவத்தையோ'
'ஒம் அண்ணை'
'அவர் இப்ப இஞ்சை இல்லத் தம்பி  முரளியுடன் வேறு வீட்டில் இருக்கிறார்கள'; என்னறார்.
'அப்படியா?  எனக்கு தெரியாது'.
'இப்ப மூன்று கிழமைதான் தம்பி'
'சரியண்ணை அவர்கள் விலாசம் இருக்கோ'
இராமலிங்கம் முகவரி சொல்ல சீலன் மிக ஆர்வமாக தவம் வீடு நோக்கி சென்றான். வீட்டை ஓருவாறு கண்டு பிடித்து அழைப்பு மணியை அடித்தான்.
முரளி புன்னகையுடன் கலோ சீலன் என்ன இந்தப்பக்கம்  வாரும் உள்ளளே வாரும் என வரவேற்றான்.
'எப்பிடி முகாம் வாழ்க்கை போகுது அங்கு நல்ல வசதியோ? '
'இல்லை முரளி ஏதோ வநதுவிட்டம் சமாளிக்கதானே வேண்டும.;  அது சரி தவத்தார் எங்கே பேய்விட்டார்?'
'ஏன் எங்களுடன் கதைக்கமாட்டியளோ'  
'அப்படி இல்லை முரளி'
'அவர் ஓரு சின்ன வேலை ஒன்று செய்கிறார் இப்ப வருவார்' என்றான் முரளி
'அது சரி முரளி இனி என்ன செய்வதாக ஐடியா'
கனடா போவம் என்று யோசிக்கிறன் அங்கு எனது தம்பி ஒருவன் இருக்கிறான். அங்கு வரும்படி கேட்கிறான்  நானும் அது நல்லது என நினைக்கிறன்.
'அது நல்லதுதான் இங்கே இருந்தால் அந்த திருமண நினைவு உங்களை டிஸ்ரொப் செய்யும் தானே அங்கு சென்றால் காலப் போக்கில் மறந்துவிடலாம';.
'சீலன் என்னுடைய தம்பி சொன்னான் உன்னுடைய  பத்மகலா இப்ப கனடாவில்தான் இருக்கிறதாக என்னைப் பற்றி விசாரித்து தம்பியிடம் கேட்டு எனது நம்பர் பெற்று என்னுடன் சென்ற கிழமை கதைத்தவ அப்பொழுது  உங்களை பற்றி நான் சொன்னேன் ஒரு நிமிடம் அப்படியே கதைக்காமல் நின்றவா'.
'....................................'

'என்ன நான் கதைக்கிறன் எந்தவித றீஅக்சனும் இல்லாமல் இருக்கிறீங்கள';.
'நான் என் சொல்ல.... விழுதல் என்பது.... மனித இயல்பு'
'கலா கனடா எப்படி வந்தவ என தெரியாது தானே?'
சீலன் எதவும் பேச விரும்பாதவனாக மௌனமாக இருந்தான். அது ஒரு பெரிய கதையாம்.
'தவம் அண்ணை இப்ப வருவாரோ' கதையை திசை திருப்பினான் சீலன்.
'இப்ப  முகாம்  நம்பரில் உங்களுடன் கதைக்கலாம் தானே?'
'அதே நம்பர்தான் ஆனால் சிலவேளை மிக சினமாக இருக்கும் மற்றைய நாட்டுக்காரர் எப்பவும் போன் தான் பிறீயா விடாதுகள்.'
'அம்மா பலதடவை போன் எடுத்து என்னுடன் கதைக்க முடியவில்லையாம். ஆதனால் நான் எடுத்துதான் கதைக்கிறனான'; என்றான்.
அப்போது தவம் சில கடைச் சாமான்களுடன் உள்ளே நுழைந்தார்.
'தம்பி சீலன் எப்படி வந்தாய் இங்கு  நான் உனக்கு வீடுமாறியதை சொல்லலாம் என்னால் இந்த வேலையால் முடியவில்லை மன்னித்துக் கொள்' என்றார்.
'அதொல்லாம் என்ன மன்னிப்பு கேட்கிறது அங்கே போய் இராமலிங்கம் சொல்லி இங்க வந்தனான்'
'என்னவிசயம்'
'அண்ணை எனக்கு அக்சப்பண்ணிட்டாங்கள் நேற்று கடிதம் வந்தது'.
'ஓ...! இது பெரிய விசயம் தம்பி உம்மட நல்ல மனசுக்க எல்லாம் நல்லபடியாக நடக்கும'; என சீலனுக்கு வாழ்த்துக்கூறினார்.
'அப்ப இன்டைக்கு இங்கு புட்டவித்து பாட்டி கொண்டாடுவம்'  என்று முரளி கூறினான.;
'என்ன பார்ட்டியோ?'
„அதுதான் தம்பி ரீ பாட்டி நான் புட்டவித்து ஒரு கோழிக்குழம்பு வைக்கிறன் சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேனும்' என்றார் தவத்தார்.
„சரியண்ணை உங்கள் விருப்பம்' என்றான் சீலன்.
என்ன ஒரு நல்ல மனசு என் சந்தேசத்தை தங்கள் சந்தோசமாக நினைக்கிறார்கள் என மனதுக்குள் பெருமைப்பட்டான் சீலன்.
--------------
மாலை 5 மணி முகாம் முன்பகுதியில் சீலன் தான் இன்று தமிழ்கடையில் வாங்கிவந்த குமுதம் புத்தகத்தை வாசித்துக்ககொண்டிருந்தான்   மற்றவர்கள் தங்கள் தங்கள் மொழியில் சத்தமாக கதைத்தக்கொண்டிருந்தார்கள்.
முகாம் பொதுத் தொலைபேசி அலறியது ஆனால் சீலன் காதில் அது ஒரு நல்ல இசை போன்று கேட்டது திரும்பிப்பார்த்தான்.

விளையாடிக் கொண்டிருந்த ஒரு அரேபிய சிறுமி தொலைபேசியை எடுத்து கலோ என்றாள் அவளுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதால் மறுமுனையில் கதைத்தது விளங்கியது உடனே சீலன் பக்கம் திரும்பி  கலோ சிறீலங்கா கலோ சிறீலங்கா என்றாள்
அங்கு சீலனைத்தவிர சிறீலங்கவை சேர்ந்த யாரும் இல்லாததால் தனக்குத்தான் என சீலன் எழுந்து சென்று போனைப் பெற்று காதில் வைத்து கலோ என்றான்.
மறுமுனையில்  'மிஸ்டர் சீலன் பிளீஸ்' ஒரு பெண்குரல்
யாராக இருக்கும் என சீலன் மனம் ஏங்க
„நான் சீலன்தான் நீங்கள்'
மௌனம் ஆனால் பெருமூச்சு கேட்டது. „கலோ யாரது நீங்கள்.'
மீண்டும் மௌனம்....
„கலோ யாரது சொல்லுங்க இல்லை.... நான் வைக்கட்டுமா'
„இல்லை இல்லை'
„நான்..... நான் ... உங்கள் பத்மகலா கனடாவில் இருந்து கதைக்கிறன்';
ஓரு கணம் அதிர்ச்சியில் உறைந்தான் சீலன்.

 

தொடரும்...  பகுதி 12  

பகுதி 12 எழுதுபவர்  திரு.குரு. அரவிந்தன்  கனடா
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறுமுறை பதியப்பட்டுவிட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழுதல் என்பது ...  தொடர் - 12

 

எழுதியவர்  திரு. குரு அரவிந்தன் - கனடா அவர்பற்றிய அறிமுகம்
எழுத்தாளர் குரு அரவிந்தன்   (மரசர யுசயஎiவொயn)


ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் இன்று அதிக வாசகர்களைக் கொண்ட எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழும் குரு அரவிந்தன் காங்கேயன்துறையைச் சேர்ந்த மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.  இவர் நடேஸ்வராக்கல்லூரிஇ மகாஜனாக்கல்லூரிஇ பட்டயக்கணக்காளர் நிறுவனம் போன்றவற்றின் பழைய மாணவராவார். மகாராஜா நிறுவனத்தின் முன்னாள் நிதிக்கட்டுப்பாட்டாளர். இலக்கிய ஈடுபாடும்இ பன்முக ஆளுமையும் கொண்ட இவர் தற்சமயம் புலம்பெயர்ந்து குடும்பத்துடன் கனடாவில் வசிக்கின்றார். கணக்காளராகவும்இ பகுதி நேர ஆசிரியாகவும் ரொறன்ரோவில் கடமையாற்றுகின்றார்.

இவரது படைப்புகள் வெளிவந்த ஊடகங்கள்;:

விகடன் தீபாவளி மலர்இ விகடன் பவளவிழா மலர்இ ஆனந்தவிகடன்இ கலைமகள்இ கல்கிஇ குமுதம்இ யுகமாயினி (தமிழ்நாடு)இ தாய்வீடுஇ தூறல்இ உதயன்இ தமிழர் தகவல் (கனடா);இ தினக்குரல்இ வீரகேசரிஇ வெற்றிமணி(யேர்மனி)இ புதினம்(லண்டன்)இ உயிர்நிழல்(பாரிஸ்)இ வல்லினம் (மலேசியா)இ காற்றுவெளி (லண்டன்)இ பதிவுகள்(இணையம்) திண்ணை(இணையம்) தமிழ் ஆதேஸ்(இணையம்)

விருதுகள் - பரிசுகள்:

தங்கப் பதக்க விருது: உதயன் சிறுகதைப்போட்டி - கனடா
சிறந்த சிறுகதை விருது: வீரகேசரி மிலேனியம் இதழ் (2000)
சிறுகதைபோட்டி - முதற்பரிசு: 'சுமை' கனேடிய தமிழ் வானொலி-2007
சிறுகதை சிறப்புப் பரிசு: கந்தர்வன் நினைவுப் போட்டி-2008 (தமிழ்நாடு)
குறுநாவல் போட்டி: 'அம்மாவின் பிள்ளைகள்' (சிறப்புப்பரிசு) - யுகமாயினி-2009 (தமிழ்நாடு)
ஓன்ராறியோ முதல்வர் விருது : 10 வருட தன்னார்வத் தொண்டர் விருது - 2010 (கனடா)
குறுநாவல் போட்டி கலைமகள் விருது:(தமிழ்நாடு)'தாயுமானவர்' - ராமரத்தினம் நினைவுப் பரிசு-2011
'புனைகதை வித்தகன்': சிறப்புக் கௌரவம் - கனடா பீல் தமிழர் அமைப்பு-2011
பாரிஸ்; கல்வி நிலைய வெள்ளிவிழா சிறுகதைப் போட்டி- 'கனகலிங்கம் சுருட்டு' (சிறப்புப்பரிசு) -2012
தமிழர் தகவல் கனடிய இலக்கிய விருது – 2012 கனடா.
ஞானம் சிறுகதைப் போட்டி சிறப்புப் பரிசு (பரியாரிமாமி)- 2013
ஓன்ராறியோ முதல்வர் விருது : தன்னார்வத் தொண்டர் விருது - 2013 (ஒன்ராறியோ)

வெளிவந்த நூல்கள்: தமிழகத்தில் மணிமேகலைப் பிரசுரவெளியீடுகள்:
சிறுகதை தொகுப்புக்கள்  இதுதான் பாசம் என்பதா? (2002இ 2005)   என் காதலி ஒரு கண்ணகி (2001)  நின்னையே நிழல் என்று! (2006)
நாவல்கள்:

ஒலிப்புத்தகங்கள்: (மூன்று ஒலிப்புத்தங்கள் - குறும்தட்டு)

திரைப்படம் - கதைஇ திரைக் கதை வசனகர்த்தா.
(இந்திய-கனடிய கூட்டுறவு தயாரிப்பு)
மேடையேறிய நாடகம்: (கதைஇ வசனம்இ நெறியாள்கை)
அன்னைக்கொருவடிவம்இ (சித்தங்கேணி ஒன்றிய ஆண்டுவிழா)
மனசுக்குள் மனசு. (மாகஜனக்கல்லூரி நூற்றான்டு விழா – மொன்றியல்இ ரொறன்ரோ)

மேடையேறிய சிறுவர் நாடகம்: (கதைஇ வசனம்இ நெறியாள்கை)

சிறுவர் இலக்கியம்:

ஆனந்தவிகடன் பவழவிழா மலரில் 25 பக்கங்களில் வெளிவந்த இவரது நீர் மூழ்கி.. நீரில் மூழ்கி.. என்ற பெரியகதைக்குத் தமிழகத்தின் முன்னணி ஓவியர்கள் ஐவர் படம் வரைந்திருப்பது இதுவரை எந்த ஒரு எழுத்தாளருக்கும் கிடைக்காத பாக்கியமாகும்.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உபதலைவராகக் கடமையாற்றும் இவர் பீல் பிரஜைகள் சங்கத்தின்  உபதலைவராகவும்இ ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவராகவும் இருக்கின்றார். இவரது முள்வேலி என்ற கதை வேலி என்ற பெயரிலும்இ சொல்லடி உன் மனம் கல்லோடி என்ற நாவல் சிவரஞ்சனி என்ற பெயரிலும் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. இவரது பல கதைகள் பிறமொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
தகவல்
திரு.இக.கிருட்ணமூர்த்தி


தொடர்கிறது
ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போனான் சீலன்.
சற்றும் எதிர்பார்க்காத ஆனந்த அதிர்ச்சியைத் தந்தது மறுபக்கம் கேட்ட அந்த இனிய குரல்.
'நான்.. நான்.. உங்கள் பத்மகலா கனடாவில் இருந்து கதைக்கிறன்.' அவனால் நம்பமுடியாமல் இருந்தது.
கலாவா, எப்படி இவ்வளவு இன்னல்களையும் தாங்கிக் கொண்டு அவள் கனடாவிற்கு வந்தாள் என்பதைக் கூட சிந்திக்காமல் 'உங்கள் பத்மகலா' என்ற அவளது வார்த்தைகள்தான் அவனைக் குளிர வைத்தது. அந்த இரண்டு வார்த்தைகள் மட்டும் செவிகளில் விழுந்து அவனது உயிரை வருடிச் சென்று உச்சியைக் குளிரவைத்தது. இவ்வளவு காலமும் அவள் எங்கிருக்கிறாள் என்று அறிய முடியாத துடிப்பு அந்தக் குரலைக் கேட்டதும் பேசமுடியாது வாயை அடைத்துக் கொண்டது. இப்படி ஒரு வார்த்தைக்காகத்தானே இத்தனை காலமும் அவன் ஏங்கிக் கொண்டிருந்தான். கற்பனையில் பறந்து கொண்டிருந்த இவனது மௌனம் மறுபக்கத்தில் அவளை அமைதி இழக்க வைத்தது.
'சீலன் நீங்கள்தானே, ஏன் மௌனமாக இருக்கிறீங்க, கதையுங்களேன்..!'
'ஓம்.. ஓம்.. கலா நான் தான். என்னால நம்பமுடியவில்லை. நீ எப்படி இருக்கிறாய்?' தன்னைத் தானே சுதாரித்துக் கொண்டு உரிமையோடு அழைப்பது போல் ஒருமையில் அழைத்தான்.
'நல்லாய் இருக்கிறேன், நீங்கள் எப்படி இருக்கிறீங்கள்?'
'நலம், நலமறிய ஆவல்.'
'கேட்கவில்லை, என்ன சொன்னீங்க?' வேண்டுமென்றே கேட்டாள்.
'நீ இங்கு சுகமே.. நான் அங்கு சுகமா..?' அவன் வாய்க்குள் மெல்ல அந்தப் பாடலை முணுமுணுத்த போது இருவரும் தங்களை அறியாமல் சிரித்து விட்டு சிறிது நேரம் பழைய நினைவுகளில் மூழ்கிப் போயிருந்தனர்.
பத்மகலாவைப் போலவே சீலனும் நன்றாகப் பாடக்கூடியவன். மருத்துவக்கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்காக இருவரும் முதன் முதலாக மேடையில் பாடிய பாட்டு அதுதான் என்பதால் அவர்களால் அந்தப் பாடலை மறக்க முடியாமல் இருந்தது. எப்பொழுதுமே முதற்பார்வை,  முதல் சந்திப்பு, முதற்தொடுகை என்று எல்லாமே காதலர்களுக்கு இனிமையானதுதான். ஏனென்றால் காதலர்கள், காதலர்களாய் இருக்கும்வரை எப்பொழுதும் நல்ல பக்கத்தையே பார்த்துப் பழகுவதுண்டு, மறுபக்கம் பார்ப்பதில்லை. அதனால்தான் காலாகாலமாய்த் தொடரும் காதலைப்பற்றி 'காதலுக்குக் கண்ணில்லை' என்று நம் முன்னோர்கள் தங்கள் அனுபவத்தைக் கொண்டு சொல்லியிருக்கலாம்.
'எப்போ கனடா வந்தாய்? அங்கே யாருடன் தங்கியிருக்கின்றாய் கலா..?' படபடவென்று கேள்விகளை அடுக்கினான் சீலன்.
'அக்கா குடும்பத்தோடுதான் தங்கியிருக்கின்றேன். அக்கா, அத்தான், பிள்ளைகள் எல்லோருமே ரொம்ப பாசமாய் இருக்கிறாங்கள்' என்றாள் கலா.
'அப்படியா? படிப்பெல்லாம் எப்படிப் போகிறது கலா, முடிஞ்சுதா? டாக்டர் ஆகிவிட்டாயா?' என்றான் சீலன்.
கலாவிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. மௌனம் சற்று நீடித்தது.
'கலா என்ன மௌனமாகிவிட்டாய்... ஏன் என்னாச்சு?' ஆவலுடன் கேட்டான்.
'இல்லை சீலன், நாட்டு நிலமை தெரிந்ததுதானே! மேற்கொண்டு அங்கே என்னால் படிக்க முடியவில்லை, டாக்டர் ஆகவேண்டும் என்ற என்னுடைய கனவுகளை எல்லாம் அவங்கதான் கலைச்சிட்டாங்களே.'
சீலனிடம் இருந்து நீண்ட பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.
'உண்மைதான் கலா, உன்னுடைய கனவுகள் மட்டுமல்ல, ஒவ்வொருவரின் கனவுகளையும் திட்டமிட்டே கலைத்து விட்டார்கள். சுருங்கச் சொன்னால் சொந்த பந்தத்தை மட்டுமல்ல, நாங்கள் வாழ்க்கையையும் தொலைத்து விட்டு திக்குத்திக்காய் இன்று அகதிகளாய் நிற்கின்றோம்.' உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னான் சீலன்.
'ஓம் சீலன், இங்கேயும் அதே நிலைதான். என்ன இருந்தாலும் தஞ்சம் தந்த புகுந்த நாட்டை மறக்க முடியாதல்லவா? அவர்களுக்கு ஏற்றமாதிரி நாங்களும் அனுசரித்துப் போவது நல்லதல்லவா?'
'நிச்சயமாக, கடைசிவரை இவர்களுக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம். உலகமெல்லாம் இன்று தமிழர்கள் பரந்து வாழ்வதற்குக் காரணம் இந்த உள்நாட்டுப் போர்தான். தீமைகள் இருந்தாலும் அதில் சில நன்மைகளும் உண்டு. சரி கலா.., இனிமேல் என்ன செய்வதாக யோசனை?'
'பாதியில் விட்ட படிப்பைத்தான் இனித் தொடர வேண்டும். இங்கே மருத்துவக்கல்லூரயில் இடம் எடுப்பது என்பது மிகவும் கஸ்டம். ஆனால் மேற்கிந்திய தீவுகளில் உள்ள அமெரிக்க வைத்திய கல்லூரியில் தொடர்ந்து மிகுதியைப் படித்து முடிக்கலாம் என்று சொன்னார்கள். விண்ணப்பித்திருக்கின்றேன், செலவுதான் கொஞ்சம் அதிகமாகுமாம், அதுதான் யோசனையாக இருக்கின்றது.' அவள் குரலில் எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மை தெரிந்தது.
'கலா இந்த நிலையில் உனக்கு உதவி செய்ய முடியவில்லையே என்றுதான் எனக்கு வருத்தமாக இருக்கின்றது.' வேலையற்ற நிலையில், அவளது லட்சியத்தை நிறைவேற்றத் தன்னால் முடியவில்லையே என்ற ஆதங்கம் அவனுக்கிருந்தது.
'நான் இப்ப உங்களை உதவி செய்யுங்க என்று கேட்டேனா?'
'இல்லை கலா, உதவிகூடச் செய்ய முடியாத நிலைக்குப் போயிட்டேனே என்று நினைக்கத்தான் மனசுக்கு வேதனையாக இருக்கிறது'
'இல்லை சீலன் மனதைத் தளரவிடாதையுங்கோ, எனக்குத் தெரியும் உங்களால எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இன்றைக்கு இல்லாவிட்டாலும் உங்கடை நல்ல மனசுக்கு ஒரு நாள் நீங்க நல்லா இருப்பீங்க, புகுந்த மண்ணில் அதற்கான எல்லா வழிகளும் திறந்தே இருக்கிறது, உங்களால் முடியும் சீலன்..!'
அவள் கொடுத்த நம்பிக்கை அவனுக்குள் உற்சாக ஊற்றை வரவழைத்தது. இந்த வயதில் பிடித்தமான ஒரு பெண்ணின் வார்த்தைகள் எப்பொழுதும் ஒருவனுக்கு உயிரூட்டுவதாகவே இருக்கும். அதுவே சில சமயங்களில் அவனது எதிர் காலத்தை நிர்ணயிப்பதாகவும் இருக்கலாம்.
'நான் காத்திருப்பேன் சீலன்..!'
'உண்மையாகத்தான் சொல்கிறாயா கலா..?' மீண்டும் வார்த்தைகளால் அவனது மனதைத் தொட்டாள் பத்மகலா. சீலன் அப்படியே உருகிப்போனான். ஒரு காதலியின் வார்த்தைகளுக்கு எவ்வளவு பலம் இருக்கிறது என்பதைக் காலாகாலமாய் சரித்திரம் சொல்லிக் கொண்டுதானே இருக்கிறது. சீலனும் அதற்கு விதிவிலகல்லவே..!
'நீங்கதானே அடிக்கடி சொல்லுவீங்க, விழுகிறது ஒன்றும் தப்பில்லை விழுந்தவங்க எழும்பாமல் இருக்கிறதுதான் பெரிய தப்பு என்று, அது உங்களுக்கும் பொருந்தும் தானே?
தொடரும் பகுதி 13

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 13 எழுதியவர் கனடா திரு.குரு அரவிந்தன் அவர்கள்

 

தொடர்கிறது விழுதல் என்பது...............

 

'நிச்சயமாய், நான் விழுந்து கிடக்கமாட்டேன் சீக்கிரம் எழுந்து காட்டுவேன் கலா..!' வார்த்தைகளில் உறுதி தெரிந்தது. அடுத்த வாரம் மீண்டும் தொலைபேசியில் அழைப்பதாகச் சொல்லிப் பத்மகலா விடை பெற்றாள்.  யாரிடமிருந்து தனது தொலைபேசி ,லக்கத்தைப் பெற்றுக் கொண்டாள் என்பதைக் கேட்க மறந்து விட்டதைப் பின்புதான் சீலன் நினைத்துப் பார்த்தான்.
முதலில் வேலை ஒன்று தேடவேண்டும், அப்புறம் கொஞ்சமாவது பணம் சேகரித்து பத்மகலாவிற்கு அவளது படிப்புச் செலவிற்காவது அனுப்ப வேண்டும். ஊருக்குப் பணம் அனுப்பி காணியை மீட்டெடுக்க வேண்டும். தங்கையின் திருமணம், பெரிய பொறுப்புத்தான் ஆனால் திட்மிட்டு ஒவ்வொன்றாகச் செய்து முடிக்க வேண்டும். அந்த நிமிடமே தனது எதிர்காலம் பற்றி அவன் தனக்குள் முடிவெடுத்துக் கொண்டான்.
முரளியின் மாமனார் குடும்பத்தினர் கனடாவில் ,ருந்தார்கள். பத்மகலாவின் அக்காவின் குடும்பமும் அவர்களின் குடும்பமும் ஏற்கனவே ஒருவரை ஒருவர் அறிந்திருந்தனர். முரளியின் திருமணம் ஏமாற்றத்தில் முடிந்ததை ,வர்கள் அறிந்திருந்தனர். அன்;று வெள்ளிக்கிழமை, றிச்மன்கில் விநாயகர் ஆலயத்திற்கு கலாவின் அத்தான் குமார் சென்ற போது அங்கே மாமாவின் குடும்பத்தை சந்தித்துக் கொண்டார். வாராவாரம் சந்திப்பதற்கு ஏற்ற பொது ,டமாகக் கோயில்தான் ,ருந்தது. பூசை முடிந்து பிரசாதம் எடுப்பதற்காக நிலவறைக்குச் சென்றபோது மாமா குடும்பத்தவர்களும் அங்கே நின்றிருந்தார்கள். என்னதான் தொலை பேசியில் மணித்தியாலக் கணக்காகப் கதைத்தாலும் நேரேபார்த்துக் கதைப்பதுபோல வராதல்லவா? எனவே வசதியான நேரம் பார்த்து வீட்டிற்கு வரும்படி மாமா குடும்பத்தினருக்கு குமார்  அழைப்பு விடுத்திருந்தார்.
அவர்கள் சொன்ன நேரத்தில் ,ருந்து சற்றுத் தாமதமாகவே மாமா குடும்பத்தினர் வந்திருந்தனர்.
'சொறி, 401 நெடுஞ்சாலையில் ஒரு விபத்து, அதுதான் கொஞ்சம் தாமதமாய்போச்சு,' தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டனர்.
'401 எப்பவுமே ,ப்படித்தான். அதை நம்பித் திட்டம் போட்டு எதையுமே செய்ய முடியாது.'
'407 ,ல வந்திருக்கலாம், ஆனால் அது காசைத் திண்டிடும்'
போக்குவரத்து பற்றிய கதை சுகதுக்கம் விசாரிப்பதில் முடிந்தது. பத்மநிலா என்று கலாவின் அக்கா தன்னைத்தானே அறிமுகப் படுத்திக் கொண்டாள். கலாவைப் போலவே அவளும் அழகாக ,ருந்தாள்.
'வீட்டிலே அப்படித்தான் கூப்பிடுவாங்களா?' முரளியின் மாமியார் கேட்டார்.
',ல்லை, நீங்கள் நிலா என்றே என்னைக் கூப்பிடலாம்' என்று தனது பெயரைச் சுருக்கிச் சொல்லிக் கொண்டாள்.
மருமகன் முரளி வைத்திய கலாநிதிக்குப் படித்துவிட்டு வேலை ,ல்லாமல் ,ருப்பதாகவும், தற்சமயம் சுவிஸில் நிற்பதாகவும், விரைவில் கனடாவிற்கு வரவிருப்பதாகவும் சொன்னார்கள்.
சொன்னது போலவே பத்மகலா அடுத்தவாரம் தொலைபேசியில் அழைத்திருந்தாள். சீலன் அவளிடம் கேட்க நினைத்ததை உடனேயே கேட்டுவிட்டான்.
'அதுசரி, உனக்கு எப்படி என்னுடைய போன் நம்பர் கிடைச்சுது?' ஆவலுடன் கேட்டான் சீலன்.
'அதுவா, எங்களுடைய சீனியர் முரளியை ஞாபகம் ,ருக்கா, அவர் அங்கேதானே ,ருக்கிறார், அவர்தான் கொடுத்தார்.' என்றாள் கலா.
'முரளியா?' சீலனின் மனதில் காரணமில்லாமல் ,னம் தெரியாத பயம் பிடித்துக் கொண்டது.
'முரளியின் மாமா குடும்பத்தினர் ,ங்கே கனடாவில்தான் ,ருக்கிறார்கள். அவற்ரை தம்பியும் அவையோடதான் ,ருக்கிறாராம். எங்கட அத்தான் குமாருக்கு அவர்களை ஏற்கனவே தெரியும். ,ப்போ எங்க குடும்ப நண்பராகி விட்டார்கள். போன கிழமை எங்க வீட்டிற்கு வந்திருந்தார்கள். முரளியின் கலியாணம் நின்று போனதைப் பற்றி எல்லாம் கதைத்தார்கள்.'
'அப்படியா, வேறை என்ன கதைச்சினம்?'
'வேண்டாம் சீலன், அவை கதைத்ததை நான் கணக்கில் எடுக்கவில்லை, விட்டிடுங்கோ'
'நீ எதையோ சொல்லத் தயங்குகிறாய் கலா, என்ன என்று சொல்லேன் பிளீஸ்..!'
மறுபக்கத்தில் கலா தயங்கினாள்.
சொன்னால் சீலனின் மனம் நோகும், சொல்லாவிட்டால் எதையோ நான் மறைப்பதாக அவன் தப்பாக நினைக்கலாம். என்ன செய்வது என்பதில்தான் அவளது தயக்கம் ,ருந்தது.
'நான் தப்பாய் நினைக்க மாட்டேன், சொல்லு கலா.'
'முரளிக்குக் கனடாவில்தான் பெண் பார்க்கிறாங்களாம். அதுவும் டாக்டருக்கு ஒரு டாக்டர் பெண் என்றால் நல்லதென்றும் அக்காவிடம் சொன்னாங்கள்.' தயக்கத்தோடு சொன்னாள் கலா.
'அப்படி என்றால்..?'
'மறைமுகமாக எதையோ கேட்கத்தான் ,ங்கே வந்திருந்தாங்கள் போல எனக்குத் தெரிஞ்சுது.'
சீலனுக்குச் சில விசயங்கள் புரிய ஆரம்பமாச்சு. 'டாக்டருக்கு டாக்டர்தான் மாச்சாகுமாம்' என்ற திருமணத்திற்கான புதிய அடைமொழி சீலனைச் சிந்திக்க வைத்தது.
,ந்த முரளி நல்லவன் ,ல்லை என்பதை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போதே சீலன் அறிந்து கொண்டான். சீலனுக்கு முரளியைத் தெரியாது என்று முரளி நினைத்தாலும், சீலன் அவனை நன்கு அறிந்தே வைத்திருந்தான். சிலபேரை சிறிது நேரம் பழகிய உடனேயே அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதைச் சிலரால் புரிந்து கொள்ள முடியும். சரியோ பிழையோ ஒருவரின் குணத்தைப் பற்றி ஓரளவு ஊகித்து வைக்கும் அந்தத் திறமை சீலனிடம் ,ருந்தது. வெளியிலே நண்பன் போலச் சிரித்துச் சிரித்து கதைத்து சந்தர்ப்பம் பார்த்து முதுகிலே குத்தக் கூடியவன் முரளி என்பதைச் சீலன் பல தடவைகளில் அவதானித்து ,ருக்கின்றான். முரளி ஏன் அவசியமில்லாமல் பத்மகலாவின் வாழ்க்கைக்குள் மூக்கை நுழைக்கின்றான் என்பதுதான் சீலனுக்கப் புரியாமல் ,ருந்தது.
கடைசியாக பத்மகலாவைச் சந்தித்த நிகழ்வு மனக் கண்முன்னால் நிழலாடியது. அவனது படிப்பு பாதியில் கலைந்து விட்டாலும் பத்மகலாவின் லட்சியமாவது நிறைவேற வேண்டும் என்று அப்போது வேண்டிக் கொண்டான். 'அடுத்த முறை உன்னைச் சந்திக்கும் போது உன்னை ஒரு டாக்டராகவே பார்க்க வேண்டும்' என்று அவன் தனது விருப்பத்தை அவளிடம் அப்போது தெரிவித்திருந்தான். விருப்பங்கள் எதுவுமே நிறைவேறாதபடி யார் போட்ட சாபமோ, எல்லாமே நிலை குலைந்து போயிருந்தது. திக்குத் திக்காய் உறவுகளைச் சொந்த பந்தங்களைப் பிரித்துப் போட்டு விட்டு விதி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அகதி என்ற பெயர் சுமந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நாடுநாடாய் ஓடவேண்டிய அவலநிலை ஈழத்தமிழனுக்கு வந்தது. அந்த அவலத்திலும் சில நன்மைகள் கிடைத்தன. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதற்காகச் சிலர் கிடைத்த சந்தர்ப்பத்தை நன்கு பயன் படுத்திக் கொண்டனர்.
மருத்துவக்கல்லூரி ,றுதியாண்டு மாணவனான முரளிக்கு முதலாம் ஆண்டு மாணவியான பத்மகலாவில் ஒரு கண் ,ருந்தது. அவளது அழகும் அடக்கமும் அவனையும் கவர்ந்ததில் வியப்பில்லை. முதலாம் ஆண்டு மாணவர்களான சீலனும் பத்மகலாவும் அடிக்கடி ஒன்றாகத் திரிவதை முரளி அவதானித்துக் கொண்டே ,ருந்தான். அவர்களுடன் நட்போடு பழகுது போல நடித்தாலும் சீலனை அவளிடம் ,ருந்து தனிமைப்படுத்தவே சந்தர்ப்பத்தைப் பார்த்துக் காத்திருந்தான். எத்தனையோ வழிகளில் அவன் முயன்றாலும் அது பலன் தரவில்லை. சீலனோ மாணவர் தலைவனாக ,ருந்ததால் எல்லா மாணவர்களுடனும் அன்பாகப் பழகினான். சீலன் மீது ,னம்புரியாத ஏதோ ஒருவித வெறுப்பு முரளிக்கு ,ருந்தது. ஒரே பெண்ணையோ அல்லது ஆணையோ ,ருவர் விரும்பும்போது அவர்களுக்குள் ,த்தகைய பொறாமை ஏற்படுவது சகஜம்தான். சிலர் அடிதடிக்குப் போவார்கள், சிலர் மௌனமாக ,ருந்து  சாதிப்பார்கள். முரளியோ ,ரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவன். அதனால் சீலனை எப்படியாவது ஓரம் கட்டவேண்டும் என்று முரளி நினைத்தான். எப்படியாவது சீலனை மாட்டி விடுவதற்கு ஏதாவது காரணம் கிடைக்குமா என்று எதிர் பார்த்திருந்த போதுதான் அவனுக்கு எதிர்பாராத ஒரு சந்தர்பம் கிடைத்தது. அது எவ்வளவு தவறான முடிவு என்று அவனது மனச்சாட்சி சொன்னாலும் பத்மகலாமீது வைத்திருந்த அவனது ஒருதலைக் காதல் அந்தத் தவற்றைச் செய்ய அவனைத் தூண்டியது. 'சொல்லாத காதல் ஒருபோதும் கனிவதில்லை' என்பார்கள். உண்மைதான், பத்மகலா மீது கொண்ட ஒருதலைக் காதலால் முரளி தனது மனச்சாட்சியின் கண்களை ,றுக மூடிக்கொண்டு செயலாற்றினான்.
,லங்கையில் ,யக்கச் சண்டைகள் காரணமாக ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்த காலமது. பல்கலைக் கழகத்திலும் அது ஒரு தொற்று நோய் போல பரவிக் கொண்டது. பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டவர்கள் எப்பொழுதும், எங்கேயும் ,ருப்பார்கள் என்பதைப் பல தடவைகள் கண்முன்னால் நிரூபித்த நிகழ்ச்சிகள் பல அங்கே அரங்கேறின. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் சீலன் பொலிசாரிடம் மாட்டிக் கொண்டான். சீலன் அப்படி ,யக்கம் ஒன்றிலும் பெரிதாக ஈடுபாடு கொள்ளாவிட்டாலும் மாணவத் தலைவனாக ,ருந்ததால் வலிய மாட்டிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. சீலன் வலிய மாட்டிக் கொண்டான் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள், ஆனால் அப்படி மாட்டிக் கொள்வதற்குத் தகவல் கொடுத்தது வேறுயாருமல்ல முரளிதான் என்பது எவருக்குமே தெரியவில்லை. தகவலைப் புலன் விசாரனை அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு எதுவுமே தெரியாதது போல முரளி நடந்து கொண்டான். வழமைபோல எல்லோரிடமும் அவன் கலகலப்பாகப் பேசி நடித்ததால் யாருமே அவன் மீது சந்தேகம் கொள்ளவில்லை. சீலன் ,ல்லாத காலத்தில் நட்போடு பழகுவது போலப் பழகிப் பத்மகலாவை அடைய முரளி எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தான். எதுவுமே பலன் தரவில்லை. பத்மகலாவோ எட்டாத கனியாகவே அவனுக்கு ,ருந்தாள். அதனால் மனசுக்குள் வெகுண்டெழுந்தவன், தனக்குக் கிடைக்காவிட்டாலும் பத்மகலா சீலனுக்குக் கிடைக்கக் கூடாது என்பதில் கவனமாக ,ருந்தான். சீலன் சிறைக்குச் சென்றதால் பத்மகலாவிடம் ,ருந்து பிரிய வேண்டிய சூழ்நிலை வந்தது. சாதாரண பிரிவல்ல, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சீலன் கைது செய்யப்பட்டதால், அவனுடன் தொடர்பு கொள்ள எல்லோரும் தயங்கினார்கள். சீலனை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதைக் கூட அறிந்து கொள்வது கடினமாக ,ருந்தது. உண்மையான காதல் என்றால் பிரிவு என்பது காதலர்களை மேலும் மேலும் ஒன்றாகச் சேர வைத்திருக்கும் அனால் வெறும் போலியான காதல் என்றால் பிரிவு அவர்களைப் பிரித்து விடும். காதல் என்று அடம் பிடித்த எத்தனையோ காதலர்களைப் பெற்றோர்கள் ,ப்படித்தான் பிரித்து வைத்து நிரந்தரமாகவே அந்தக் காதலுக்குச் சமாதி கட்டிய கதைகள் பல உண்டு. உண்மையைச் சொன்னால் அது காதலே அல்ல, ஒருவரின் உடல் மீது கொண்ட வெறும் மோகம் அதாவது ,ன்பாக்சுவேஷன் என்று தான் அதைச் சொல்லவேண்டும்.
சீலன் சென்ற ,டமெல்லாம் முரளி தொடர்ந்து கொண்டேயிருந்தான். உத்தியோகம் புருஷலட்சணம் என்பது போலப் படிப்பும் பதவியும் ,ருந்தால்தான் ,ந்த உலகம் மதிக்கும் என்ற நவீன தத்துவத்தை எதிர்கொள்ளச் சீலன் தயாரானான். ',ருக்குமிடத்தில் ,ருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே' என்பதைப் புரிந்து கொண்டு கடின உழைப்பிற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டான் சீலன். ஆனால் காலம் அவனுக்காகக் காத்திருக்கத் தயாராக ,ல்லை, சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று அவனுக்காகப் பத்மகலாவிடம் ,ருந்தது  

 

 

 தொடரும் 14



 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விழுதல் என்பது எழுகையே.... தொடர் 14
எழுதியவர் டென்மார்க் துரை அவர்களின் அறிமுகத்துடன் தொடர்கிறது.
அலைகள் டென்மார்க் துரை

கடந்த 45 வருடங்களாக எழுதி வருகிறார்.. சமீபத்தய இருபது வருடங்களாக தினசரி எழுதுவதும் பல நூறு பக்கங்கள் படிப்பதும், மொழி பெயர்த்து தமிழில் எழுதுவதும் தினசரி ஐந்து மணி நேர வாழ்வியற் கடமை..

109 மேடை நாடகங்கள் ... எழுதி இயக்கியது.. இவருடைய நூறாவது நாடகத்தில் நடித்தவர்கள் எண்ணிக்கை 100.

11 நூல்கள் வெளியாகியுள்ளன.. நாவல்கள் 3 சிறுகதைத் தொகுப்பு 1, கவிதை 1, மற்றையவை கட்டுரை நூல்கள்.

மூன்று திரைப்படங்களை தயாரித்து திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். பூக்கள், இளம்புயல், உயிர்வரை இனித்தாய்.

அலைகள் இணையத்தின் ஆசிரியர், ஐ.பி.சி டென்மார்க் செய்தியாளர்..

பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர், சமுதாயவியல் உதவியாளர்.
தகவல்
திரு.இக.கிருட்ணமூர்த்தி
வி.எ.எ வெளியீட்டு இணைப்பாளர்
-------------------------------------
கதை தொடர்கிறது...
கனடாவுக்கு தொலைபேசியில் கதைத்த பின்பு எதிலுமே பிடிப்பில்லாமல் நடந்து கொண்டிருந்தான் சீலன்.
அவன் முன் சொர்க்கத்தின் பிம்பமாக சுவிற்சலாந்து...
வாழ்க்கைப் பாரம் தோள்களை அழுத்தியதால் அந்த மூட்டையை சுமக்க மனமின்றி இயற்கையை அவதானித்தன கண்கள்..
நீர் சுனைகளில் இருந்து விசுறும் தண்ணீர்.. ஆகாயத்தை நோக்கி பொழியும் மழையல்லவா...
நீரைக்கிழித்தோடும் வண்ண வண்ணமான இயந்திரப்படகுகள், பாற்குடம் பொங்கியது போல பொங்கிச் சிரிக்கும் குளிர்நாட்டில் பிறந்த குமரிகள்.. நல்ல மனம்போல பூத்து காற்றில் கன்னத்தோடு கன்னம் உரசும் மலர்க் கொத்துக்கள்...
பூமிப்பந்தில் கோடை வரைந்த ஓவியமாய் சுவிஸ் நாடே பூப்படைந்திருந்தது..
தூரத்தே தெரியும் அழகான அல்ப்ஸ் மலையின் கூரிய சிகரங்கள்தான் அந்த இயற்கை மகளின் மார்பகங்களோ...
அவனுக்காக பருவமெய்தி நிற்கும் அந்த அழகியைப் பார்க்காது அன்றாடப் பிரச்சனை என்னும் சின்னச்சின்னப் பிணங்களை மனதில் சுமந்து குருடனாகிவிட்டான் சீலன்..
சுவிஸ் மண்ணில் கால்வைத்த பின் இப்படியொரு கற்பனை வராவிட்டால் அவன் மனித ஜடம்.. என்று நோர்வேஜிய கவிஞன் ஒருவன் சொன்னது நினைவில் வந்தது..
திருக்கை வாலினால் யாரோ அவன் முதுகில் குறியிழுப்பது போன்ற வலியொன்று குருவி வாணமாய் ஓடி மறைந்தது..
ஒரு யாழ்ப்பாணத்து கிடுகு வேலிக்குள் செருகிவைத்த கொக்கச் சத்தகம்போல அவன் மனதும் வளைந்து கிடப்பது அந்த இயற்கையின் வெளிச்சத்தில் தெரியாமல் தெரிந்தது.
இதுதான் சுவிஸ் மண்ணில் கால் வைத்த பின் அவனுக்குத் தெரிந்த முதல் வெளிச்சம்..
பத்மகலா, வில்லனான முரளி, காதல், பறிபோன செல்லாக்காசு டாக்டர் படிப்பு, பல்கலைக்கழகம், காட்டிக்கொடுப்பு, சிறை, போராட்டம், புலப் பெயர்வு என்று இதுவரை சுழன்றுவிட்ட தனது வாழ்வை ஒரு தடவை ஒரே அச்சாணியில் கோர்த்து கடகடவெனச் சுழலவிட்டான்..
செக்குமாடொன்று சுத்தோ சுத்தென்று சுற்றுவது தெரிந்தது.. இப்படியே விட்டால் இந்த மாடு திரும்பத்திரும்ப இதே வழியில்தான் சுற்றும்...
புலம் பெயர்ந்தும் தோள்களை அழுத்தம் செக்கிலிருந்து வாழ்வை விடுவிப்பதே சரியென்று மனதில் கேட்டது ஓர் ஒலி...
வெறுமையாகக்கிடந்த ஒரு வீதியோர வாங்கில் அமர்ந்து தன்னை மறந்துவிட்டான்..
எல்லாம் நின்றுவிட்டது போன்ற பிரமை.. ஒன்றுமே இல்லாத வெற்றிடத்தில் நின்று மனது வாழ்வைப் பார்த்தது...
சாப்பாட்டு மேசையில் விரித்திருக்கும் கறி கொட்டிய கடாதாசியை சுருட்டிக் குப்பையில் வீசியதைப்போல மனது இதுவரை நடந்த அனைத்தையும் சுருட்டிக் குப்பையில் வீசிவிட்டு.. ஒரே நொடியில் புத்தம்புதுப் பளிங்கு மேசை போல பளபளத்தபடி சரேலெனச் சுழன்றது...
எல்லாம் தொலைந்தது.. பாரமில்லாத தேகம் பஞ்சு போல இருந்தது.. இனி வீடு போகலாமா..?
பனம்பழம் விழப்போகும் நேரம் பார்த்து பறந்துவரும் காகம்போல அவன் வீட்டுக்குப் போக நினைக்கவும் பேருந்து வண்டி ஒன்று ஏன் அவன் முன்னால் நின்றது..?
வரவேண்டிய வண்டி வந்துவிட்டது.. பாய்ந்து ஏறி.. உள்ளே நடந்தான்..
ஆங்காங்கு வெள்ளை நிற மனிதர்கள், கிழவிகள்.. கிழவர்கள்... நடுத்தர வயது.. இளம் பெண்கள் சிலர்..
தனியாக இருக்க விரும்பினான்... ஆசனங்கள் எதுவும் இல்லை...
யாரோ ஒருவரின் பக்கத்தில் அமரத்தான் வேண்டும்... அவனை ஒரு இளம் பெண் கடைக்கண்ணால் பார்த்தாள்..
அவள் விழிகள் கண்டிப்பாக அவன் தனக்கு அருகில்தான் இருக்கப்போகிறான் என்று கணக்குப்போட்டிருக்க வேண்டும்...
அவளுக்கு அடுத்த ஆசனத்தில் தலையில் தொப்பி, குறுந்தாடியுடன் அவனைப்போலவே ஒருவர்.. தமிழராக இருக்கலாம்... ஆவலை அடக்கி, அவளை ஓர் எட்டுத்தாண்டி அவருக்குப் பக்கத்தில் இருந்தான்...
எதிரே வந்த பச்சை விளக்கில் வண்டி வலது பக்கமாகத் திரும்பியது...
அப்போதுதான் அந்த மனிதரைத் திரும்பிப் பார்க்க வசதியாக இருந்தது..
இப்படி எத்தனை திருப்பங்கள் வாழ்வில்...
எங்கோ பார்த்தபோலவும்... பார்க்காதது போலவும் இருந்தது... நினைவுக்கதிர்களால் உருவத்தைப் பற்ற முடியவில்லை... உருகிய பனிக்கட்டியாய் வழுகியது.
இப்போது பேருந்து மறுபக்கமாகத் திரும்பியது...
இது அந்த மனிதர் அவனைப் பார்க்க வேண்டிய திருப்பம்... பார்த்தார்... அவரின் நினைவுக்கதிர்களும் ஒரு படி முன்னே நகர்ந்தது.. பிடிக்க முடியவில்லை..
இப்படிப் பல திருப்பங்கள் இங்கும் அங்குமாக... இருவருக்குமே தெரிகிறது ஆனால் பற்றிக்கொள்ள இயலவில்லை.
தீர்க்கமான கண்கள்.. காலத்தைத் துழாவி ஓடும் திறப்பண அலகுகள் போன்ற முன்னேறும் பார்வை... கட்டையும், நெட்டையுமில்லா உருவம்... திராவிட நாசி.. இந்த மனிதரை எங்கோ பார்த்திருக்கிறேனே..
அவர் முந்திக்கொண்டார்... நீ சீலன்தானே... ஜப்னா யூனிவர்சிட்டி மெடிக்கல் பக்கல்டி..
அதற்குமேல் தாமதிக்க வேண்டியதில்லை அவருடைய குரலை வைத்து பிடித்துவிட்டான்.. சேர் நீங்கள் புரொபெசர் குமாரவேல்தானே...
இதே சீன் யாழ்ப்பாணத்து 751 இலக்க பஸ்சில நடந்திருந்தா ஆளையாள் அடையாளம் கண்டிருப்பம்.. மனிதர்கள் ஒன்று பேருந்துகள் வேறு.. கொய்யாப்பழம் மாமரத்தில தொங்கினா அடையாளம் காண சிரமாத்தான் இருக்கும்.
நீங்கள்...
சுவீடன் உப்சலா பல்கலைக்கழகத்தில ஒரு வாரம் அதிதி பேராசிரியரா பணியாற்றிவிட்டு போனவாரம் சுவிற்சலாந்து வந்தனான்.. நாளைக்கு சுவிஸ் அல்ப்ஸ் மலை.. அடுத்த நாள் கனடா பயணம்..
அப்ப நீங்கள் தங்கியிருக்;கிறது...
ஹோட்டல் அல்ப்ஸ்.. நான் எப்ப யூரோப் வந்தாலும் இந்த அழகான நாட்டை ஒரு தடவை பார்க்காமல் போறதில்லை..
பாற்கடலிலை இருக்கிற மீனுக்கு தான் சாகா வரம் தரும் பாலுக்குள்ள இருக்கிற ரகசியம் தெரியாது.. அருகில இருக்கிற பாசியைக் கடிச்சு ஒரு நாள் செத்து மிதக்கும்.. அதுபோலதான் சுவிசிலை இருந்தும் அதன் அழகோடு சேர்ந்து வாழத்தெரியாத ஒரு ஜென்மம் நான்.. சீலன் வரட்சியாகச் சிரித்தான்.
ஆனாலும் அன்றொருநாள் அவர் சொன்ன சித்தாந்தக் கருத்தையே மறந்துவிடாமல் இன்றைக்கு சீலன் உதாரணமாக சொன்னது அவருக்கு திருப்தியாக இருந்தது..
உதாரணம் நல்லாயிருக்கு...
இருந்தாலும் இண்டைக்குத்தான் இந்த நாட்டின் அழகு என்னுடைய கண்களுக்குத் தெரிந்து.. மனதலில் ஒரு விடுதலை கிடைத்தது.. அந்த நேரம் பார்த்து நீங்கள் வந்திருக்கிறியள்...
பனம்பழம் கனிந்து விழப்போக... அந்த நேரம் பார்த்து அதிலிருக்க காகம் பறந்துவரும் அது இயற்கை..
சேர் தற்செயலா உங்களைப் பார்த்த உடனே அதையும் நான் நினைத்தனான்...
இதுதான் விழுதல் என்பது... இதைப்பற்றிப் பேசப்புறப்பட்டால் ஒரு நாள் போதாது.. நாளைக்கு அல்பஸ் மலையைப் பார்க்கப்போறன்.. எப்பிடி உனக்கு நேரம்..
உங்களைப் பார்த்தாப்பிறகு ஏது நேரம்..? இந்த நொடியில இருந்து இந்த நாட்டைவிட்டு நீங்கள் புறப்படும்வரை உங்களோடைதான்..
எவ்வளவோ கதைக்க வேண்டியிருந்தது..
தன் வாழ்வில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை சொல்லி அவரிடம் யோசனை கேட்கவேண்டும் போல மனது துடித்தது சீலனுக்கு.
அடுத்தநாள் காலையில் அல்ப்ஸ் மலையின் உச்சி நோக்கி போவதற்காக தொங்கும் காரில் ஏறிப்புறப்பட்டபோதுதான் அவனுள் கிடந்த முட்டு மெல்ல மெல்ல அவிழ ஆரம்பித்தது..
இதுவரை அவனுடைய வாழ்க்கையென்ற ஆகாயத்தை மறைத்துக்கிடந்த முகில்களை விலக்கிக் கொண்டு வானமாம் மாமலையைக் கண்கள் பரவசத்துடன் பார்த்தன..
மறுபடியும் கீழே பார்த்தான் மலையடிவாரம் பாதளம்போல பயம் காட்டியது..
சுவிஸ் அல்ப்சின் உச்சிப்பகுதிக்கு வந்து சிறிது மூச்சு விட்டபோது சிகரட் குடித்தது போல வாயில் இருந்து மெல்லிய புகை..
யாருமே இல்லாத முகடு.. அங்கே தனியாக இருவர்..
தொடரும் பகுதி 15
 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் 15 எழுதியவர் திரு. டென்மார்க் துரை
தொடர்கிறது விழுதல் என்பது எழுகையே....
சீலன் இப்ப நான் உன்னைத் தள்ளிவிட்டால் என்ன செய்வாய்...?
மௌனம்...
இல்லை நீ என்னைத் தள்ளிவிட்டால்...?
சீலன் அதற்கும் பதில் சொல்லவில்லை...
இந்த மௌனம்தான் நம்பிக்கை.. உன்னை நானும் என்னை நீயும் தள்ளிவிடமாட்டம் என்ற நம்பிக்கையிலதான் இந்தளவு உயரத்திற்கு வந்திருக்கிறம்..
உனது காதலி பத்மகலா.. இந்த நாட்டு அகதி வாழ்வு.. தாயகம் என்று ஆங்கங்கு சிதறிக்கிடக்கும் சிக்கல்களை வெற்றிகொள்ள உனக்கும் இப்படியொரு நம்பிக்கைதான் அவசியம்..
வா கொஞ்சம் நடப்பம்... இந்த உச்சிப்பகுதியைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமோ..?
இல்லை..
அருகில் இருந்த குன்றில் இருந்து கொண்டு.. நெடு நேரம் ஆகாயத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
சீலன் றிச்சாட் பெய்ன்மானை எதாவது கேள்விப்பட்டிருக்கிறியா..?
தெரியாது..
உன்னைப்போலத்தான் அவனும் ஒரு புலம் பெயர்ந்த மனிதன்.. அமெரிக்க யூதன்.. உலகப்புகழ் பெற்ற வேதியல் விஞ்ஞானி.. பல கண்டுபிடிப்புக்களுக்கு சொந்தக்காரன்.. நோபல் பரிசு பெற்றவன்.. இப்பிடி அவன் புகழை அடுக்கிக்கொண்டே போகலாம்...
சேர் நான் மெடிக்கல் பக்கல்டி... பயோ சயன்ஸ்.. உங்களுக்கும் தெரியும்தானே...
அதுதான் என்னுடைய கவலை... நீ என் டாக்டருக்கு படிக்க வேணும்.. டாக்டராகவேணுமெண்டு விருப்பமா..?
இல்லை.. பெற்றோருக்காக.. சமூகத்துக்காக..
ஏன் குடும்பத்துக்கு ஒரு பெருமை தேட என்று உண்மையைச் சொல்ல மறுக்கிறாய்...?
நல்லவேளை ஆரோ ஒருதன் உன்னைக் காட்டிக்கொடுத்து பூஸா முகாமுக்கு அனுப்பினது.. இல்லாவிட்டால்.. போலிக் கௌரவத்திற்கான ஒரு தப்பான டாக்டர் இந்த சமுதாயத்திற்கு வந்திருப்பான்.. ஒப்புக் கொள்கிறாயா..?
ஓம்..
உண்மை... மகிழ்ச்சி தருது... தாங்ஸ்... நீ டாக்டரா வாறதைவிட வேறு ஏதோவா வரப்போகிறாய்.. காலம் அதுக்குத்தான் வழி காட்டுது... சிறையில் இருந்தபோதாவது சிந்தித்துப் பார்த்தியா..?
சீலன் அமைதியாக இருந்தான்..
ஓ..கே.. இந்தப் புலம் பெயர் வாழ்வு பற்றி நீ என்ன நினைக்கிறாய்...?
எல்லாரும் சொல்கிறார்கள்... இது அவலமான வாழ்வென்று.. அடிமை வாழ்வென்று... எங்களுடைய அழகான தேசத்தை இழந்துவிட்டோம்.. அங்கை இருந்தா நாம் எவ்வளவு சந்தோஷமா இருந்திருப்பம்... இதுதான் இதுவரை நான் கேட்ட புலம் பெயர் ஒலி..
எல்லோரும் சொல்வதாலை ஒரு கருத்து உண்மையாகிவிடாது... உன்னுடைய கருத்தென்ன..
மௌனம்..
இதை அவலமாக பார்க்கிறதைவிட இந்த வாழ்வை வெற்றியாக மாத்த வேண்டுமென்று யாராவது சிந்திக்கிறார்களா..?
நான் சந்திக்கவில்லை...
அப்பிடி ஒருதனை நான் சந்திக்க ஆசைப்படுறன்... ஏன் அவன் நீயாக இருக்கக்கூடாது..
சேர் பத்மகலா..
புண்ணாக்கு.. முதல்ல முதுகில இருக்கிற பழைய மூட்டைகளை உருட்டிவிடு..
இந்த வாழ்வை நம்பிக்கையுள்ள வாழ்வாக மாற்றலாம் என்ற இரகசியத்தை கண்டு பிடித்து ஒரு புது விளக்கை ஏற்றும் மானிடன் தேவை.. அவனுக்கான வெற்றிடம் காலியாக இருக்குது.. ஏன் நீ அவனாக இருக்கக்கூடாது..?
சீலன் திடுக்கிட்டான்... தொங்கும் வண்டியொன்று புதிதாக வந்து நிற்க யாரோ இரண்டுபேர் இறங்கினார்கள்... அவர்கள் தமிழர்கள் அல்ல..
வா.. இன்னம் கொஞ்சம் நடப்பம்..
சேர் றிச்சாட் பெயின்மானைபற்றி ஏதோ சொல்ல வந்தியள்.. சொல்ல இல்லை..
உனக்கு ஆர்வம் இருந்தால் கேட்பாய்... அதுதான் வெயிட்பண்ணி நடந்தனான்.. உனக்கு ஏதோ ஒரு பிரகாசமான வாழ்விருக்கு அதுதான் அதை அறிய ஏதோ ஆவல் வந்திருக்கு.. பலபேருக்கு வாறதில்லை..
சீலன் ஒரு சுவீங்கத்தை வாயில் போட்டுக்கொண்டான்... அல்ப்ஸ் காற்றோடு சுவீங்கத்தை குழைத்து சப்ப இனம்புரியாத புதிய சுகமாக இருந்தது.. கதை கேட்க தயாரானான்.
அமெரிக்காவின் சலஞ்சர் ராக்கட்டுக்கள் பல தடவைகள் ஆகாயத்தில் வெடித்துச் சிதறியதைக் பேப்பரிலை படிச்சிருப்பாய்..
ஓம்...
அதந்த ராக்கட்டுக்கள் புவியீர்ப்பை தாண்டும்போது ஏன் வெடிக்கின்றன என்ற காரணத்தை கண்டு பிடித்துத் தரவேண்டுமென றிச்சாட் பெய்மனிடம் கையேந்தி நின்றார் அமெரிக்க முன்னாள் அதிபர் றொனாட் றேகன்.. அது தெரியுமோ..
இல்லை..
ஒரு நாட்டு அதிபரே தன் வீடு தேடிவந்து உதவி கேட்குமளவுக்கு புலம் பெயர் வாழ்வை சிகரங்களுக்குக் கொண்டுபோக முடியுமெண்டு காட்டியது அவன்தான்..
இவையெல்லாம் தெரியாது அருகில் இருக்கும் மனிதர்களுடன் சேர்ந்து கண்ணீர்க்கடலில் பாய்ந்து நீச்சலடித்ததை நினைக்க சீலனுக்கு சிறிது நாணமாக இருந்தது.
இதையேன் சொல்லுறன் தெரியுமோ.. புலம் பெயர் வாழ்வால் சிகரங்களைத் தொடலாம்..
குமாரவேல் கதையைத் தொடர்ந்தார்...
அப்போது றிச்சாட் பெயின்மான் றொனால்ட் றேகனைப் பார்த்து சிரித்தான்..
ஏன்...?
அவன் இறப்பதற்கான நாட்கள் குறிக்கப்பட்டுவிட்டன.. புற்றுநோய் அவன் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க மேலும் சில தினங்களே இருந்தன... இது றேகனுக்குத் தெரியாது... அதுதான் சிரித்தான்..
நான் இறக்கப்போகிறேன்... மனைவி பிள்ளைகளுடன் இறுதி நாட்களை கழிக்கப் போகிறேன்... பிளீஸ் வேறு யாரையாவது பாருங்கள் என்று அவன் சொன்னானா.. இல்லை... கண்டு பிடித்தான்.. அதுதான் றிச்சாட் பெயின்மான்..
சேர் ராக்கட் ஏன் வெடித்தது...?
ராக்கட்டுக்களின் எரிபொருள் தாங்கி சதுரவடிவில் அமைக்கப்பட்டிருந்தது.. ராக்கட் இரட்டிப்பு வேகம் எடுக்க விளிம்புப்பகுதிகளில் ஏற்படும் உராய்வு காரணமாக வெப்பம் அதிகரித்து பெற்றோல் ராங் வெடித்துச் சிதறுகிறது.. ராங்கின் வடிவத்தை மாற்றியமைக்க வேண்டும்... இதுவே அவனுடைய கண்டு பிடிப்பு..
மனிதன் ஆபத்தின்றி ஆகாயத்தைக் கடக்க உதவியதே அவன் வாழ்வில் எஞ்சியிருந்த ஒரு சில நாட்கள்தான்.
சீலனின் தேகம் புல்லரிப்பது போன்ற உணர்வு...
கண்டு பிடித்ததும் அவன் இதே மலை உச்சிக்குத்தான் மனைவி பிள்ளைகளுடன் வந்தான்... இந்த ஆகாயத்தைப் பார்த்துச் சிரித்தான்.. தான் ஒரு சில நாட்களில் இறக்கப்போகும் இரகசியத்தை இந்த மலை உச்சியில் வைத்துத்தான் அவர்களிடம் முதல் தடவையாகச் சொன்னான்..
சேர் அவன் தப்பியிட்டான்தானே..? சீலனில் சிறிய பதட்டம்..
நோ.. இது உபகதை இல்லை.. உண்மைக்கதை.. சொன்னபடியே அவன் சில தினங்களில் இறந்து போனான்..
சில நொடிகள் நிசப்தம்...
அவனுடைய சிரிப்பும், நம்பிக்கையும் இந்த மலை உச்சியிலைதான் கலந்திருக்கு அதுதான் உன்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்து இந்தக் கதையைச் சொன்னனான்..
இந்தக் காற்றைச் சுவாசி.. அப்பதான் உன்னுடைய விடிவை இன்னொருவனின் கையில் கொடுத்துவிட்டு வெளிநாட்டில் நின்று அழும் உனக்கும் ஒரு புது நம்பிக்கை பிறக்கும்..
அல்ப்ஸ் மலையில் முட்டி மோதிய அந்த விஞ்ஞானியின் குரல் எங்கோ எதிரொலிப்பது போன்ற பிரமை..
சீலன் வாழ்க்கை முடியப்போற கடைசி நிமிடத்தில கூட அவன் இந்த வாழ்க்கையைப்பற்றி கண்ணீர் விட்டானா..?
இல்லை...
ஏன்...?
இருக்கிற நாளை சரியாகப் பயன்படுத்தத்தான் இந்த வாழ்க்கை நாட்கள் தரப்பட்டிருக்கு.. மற்றவர் உயிர் கொடுத்து தேடும் விடிவு என்றோ வரும் என்ற காத்திருத்தலுக்காக இல்லை..
வெளிநாடு வந்தும் அதே செக்குமாட்டு வாழ்வை வாழ்ந்து அதே பழைய கண்ணீரைத்தான் விட வேண்டுமென்றால் உன் வாழ்க்கைக்கு அர்த்தமென்ன.. அந்தமான் தீவில நின்று நீ அழுதிருக்கலாமே..?
வருமானம்...?
நல்ல வருமானமும் வேணும்.. இடைக்கிடை அழவும் வேணும்.. தாய்நாட்டுக்கு விடிவும் வேணும்.. இப்ப விளங்குதோ பிழை எங்கை இருக்கெண்டு...?
தெரியுது.. நல்லவேளை உங்களைச் சந்தித்திருக்காவிட்டால் கண்டுபிடித்திருப்பனோ தெரியாது..
சரி பத்மகலாவை என்ன செய்யப்போறாய்...? அவளைக்காப்பாற்றத்தான் நீ பிறந்திருக்கிறாயா.. இப்படி உலகம் முழுதும் எத்தனை பத்மகலாக்கள்.. இவர்களை காப்பாற்றியவர்கள் இறுதியில் எட்டித்தொட்ட இலக்குகள் என்ன..? அவர்கள் எல்லாம் இப்போது எங்கே..?
சீலனுக்கு சிறிது வெட்கமாக இருந்தது, சமாளித்துக்கொண்டான்.. எல்லோராலையும் சாதிக்க முடியாது.. பத்மகலாக்களும், சீலன்களுமாக நிறைந்து கிடப்பதுதானே இந்த வாழ்க்கை..?
சபாஷ்.. நீ அப்படிப்பட்ட ஒரு சாதாரண சீலனா.. இல்லை அதிலிருந்து வேறுபட்ட ஒருவனா.. முதலில் அந்தக் கேள்விக்கு விடை தேடு.. தற்ஸ்சோல்... புறப்படலாமா..?
மலை உச்சிக்கு வந்த ரயில் பெட்டி ஒன்று கீழே இறங்கத்தயாரானது.. இருவரும் ஏறிக்கொண்டனர்...
சீலனைப்பிடித்திருந்த எல்லாச் சுமைகளும் அல்ப்ஸ் மலையில் இருந்து ஒவ்வொன்றாகக் கீழே விழுந்து கொண்டிருந்தன..
மலையடிவாரத்தைத் தொட முன்னரே சீலன் முற்றாகவே மாறிப்போயிருந்தான்...
சேர்..
சொல்லு...
நான் செக்கு மாடில்லை வித்தியாசமானவன்...
நீங்க அடுத்த முறை சுவிஸ் வரும்போது என்னில அந்த மாற்றம் தெரியும்..
ஆயிரத்தில் ஒருவனால்தான் இயல்பு வாழ்வில் இருந்து புதுமை வாழ்வை முன்னெடுக்க முடியும்.. உனக்குள் அந்த வரம் மறைந்திருக்கிறது.. கண்டுபிடி..
நன்றி சேர்..
சீலன் நான் இரவு கனடாவுக்கு பிளைட் எடுக்கிறன்.. பத்ம கலாவுக்கு ஏதாவது எழுத்தித்தாறதெண்டால் தா.. அவளையும் உனக்காக ஒரு தடவை சந்தித்துப் பேசுறன்..
சீலனின் கண்களில் ஒரு சொட்டு நீர்..
கண்ணீரைத்துடை... நீ கடிதத்தை எழுது.. நான் குளித்து பிளைட்டுக்கு ரெடியாகிறன்..
விமான நிலையம்... பிரியும் நேரம்..
சீலன் காதல் என்றால் உன்னுடைய கரத்தை அவள் பிடிக்க வேணும்.. அவளுடைய கரத்தை நீ பிடிக்க வேணும்..
அவள் சமுதாயத்திற்கும், குடும்பத்துக்கும் பயந்து கோழையா இருக்க நீ மட்டும் படாதபாடுபட்டு அவளுடைய கரத்தைப் பற்றினால் அது காதல் இல்லை.. பத்மகலாவுக்கு முகவரியிட்ட கடிதத்தை வாங்கிக் கொண்டார்.
காதலை வெல்வதல்ல வாழ்க்கை... வாழ்க்கையை வெல்வதால் காதலுக்கு மகுடம் சூடுவதே வாழ்க்கை.. குட் பாய்..
நேரமிருந்தால் முருகன் ஓர் உழவன் என்ற நாவலிலை நிலாவொளியும் தத்துவ விசாரணையும் என்றொரு அத்தியம் இருக்கு படிச்சுப்பார்..
குமாரவேல் அவனை அன்போடு கட்டித்தழுவினார்.. திருவருள் குரு வடிவில் அவனை அணைத்துவிட்டது போன்ற பிரமை..
விழுதல் ஆரம்பித்ததோ என்னவோ சூரியன் பொத்தென விழுந்தது..
நாளைய காலை ஒரு புதிய சீலனைப் பார்க்கப்போகிறேன் என்ற அவசரத்தில்தான் அப்படி விழுந்ததோ..?
தொடரும்...

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விழுதல் என்பது எழுகையே..

 

பகுதி 16

 

எழுதியவர்
முருகபூபதி அவர்களின் அறிமுத்துடன் தொடர்கிறது
இலக்கியப்படைப்பாளி ஊடகவியலாளர் லெட்சுமணன் முருகபூபதி
 
இலங்கையில் நீர்கொழும்பில் 1951 ஆம் ஆண்டு பிறந்த முருகபூபதி 1970 களில் இலக்கியப்பிரவேசம் செய்தவர். அக்காலப்பகுதியில் வீரகேசரி நாளிதழின் நீர்கொழும்பு பிரதேச நிருபராகவும் பணியாற்றி ஊடகவியலாளரானவர்.
1972 இல் இவரது முதலாவது சிறுகதை கனவுகள் ஆயிரம்  மல்லிகை இதழில் வெளியானது. 1975 இல் இவரது முதலாவது கதைத்தொகுதி சுமையின் பங்காளிகள்நூலுக்கு இலங்கையில் தேசிய சாகித்திய விருது கிடைத்தது.
1977 இல் வீரகேசரி நாளேட்டில்  இணைந்து முதலில் அங்கு ஒப்புநோக்காளராகவும் பின்னர் துணை ஆசிரியராகவும் பணியாற்றினார். வீரகேசரி வாரவெளியீட்டில் ரஸஞானி என்ற புனைபெயரில் இலக்கியப்பலகணி என்ற பத்தி எழுத்தை தொடர்ந்து வாரம்தோறும் எழுதிய முருகபூபதிரிஷ்யசிருங்கர் என்ற புனைபெயரில் கலை (இசை, நடனம், நாடகம், சினிமா) சார்ந்த விமர்சனங்களும் எழுதியிருப்பவர்.
1984 இல் தமிழ்நாட்டுக்கும் 1985 இல் சோவியத் நாட்டுக்கும் பயணித்து பயண இலக்கியத்தொடர்களை எழுதினார்.
இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து கொழும்பு மாவட்ட செயலாளராகவும் நீர்கொழும்பு இலக்கியவட்டத்தின் செயலாளராகவும் இயங்கியவர்.
1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த முருகபூபதி தொடர்ந்தும் பல்வேறு சமூகப்பணிகளுடன்  கலை இலக்கியப்பணிகளையும் தொடருகின்றார்.
2002 இல் இவரது முதலாவது நாவல் பறவைகள் நூலுக்கு தேசிய சாகித்திய விருதைப்பெற்றார்.
இதுவரையில் சிறுகதை, நாவல், கட்டுரை, பயண இலக்கியம், கடித இலக்கியம், சிறுவர் இலக்கியம், நேர்காணல், முதலான துறைகளில் 20 நூல்களை எழுதியிருக்கிறார். இவரது கதைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளியாகியிருக்கின்றன.
அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதிகள் கழகம், தமிழர் ஒன்றியம், தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை மாணவர் கல்வி நிதியம் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் முதலான அமைப்புகளை தோற்றுவிக்க முன்னின்று உழைத்தார்.
இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு 1989 முதல் உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஸ்தாபகருமான முருகபூபதி உருவாக்கிய அவுஸ்திரேலியா தமிழ் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இங்கு ஆண்டுதோறும்  எழுத்தாளர் விழாக்களை நடத்திவருகிறது.
இவர் மேற்கொண்ட பல சமூகப்பணிகளுக்காக அவுஸ்திரேலியாவில் சில பொது அமைப்புகளின் விருதுகளையும் விக்டோரியா மாநில பல்தேசிய கலாசார ஆணையத்தின் விருது மற்றும் டெறபின் மாநகர சபையின் சிறந்த பிறஜைக்கான விருது என்பவற்றையும் பெற்றுள்ளார்.


கதை தொடர்கிறது பகுதி 16

 

பேராசிரியர் குமாரவேலை வழியனுப்பிவிட்டு விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்தான் சீலன். விமான நிலைய கட்டிடத்தை திரும்பிப்பார்த்தான். அதன் பிரமாண்டத்தின் முன்னால் தான் ஒரு சிறிய புள்ளிதானே என நினைத்தான்.
விமானங்கள் பயணிக்க ஓடுபாதையில் அவை நகரும்பொழுதும் தரையிறங்கும்பொழுதும் பாதுகாப்பு பணிகளில் தயாராக நிற்கும் ஊழியர்கள், விமானங்களை செலுத்தும் விமானிகள், முகம்சுழிக்காமல் இன்முகத்துடன் இயங்கும் விமானப்பணிப்பெண்கள், பயணங்களுக்கு தயாராகும் பயணிகள், தரையில் இறங்கும் பயணிகள், அங்கு அமைந்துள்ள உணவுச்சாலைகள், கோப்பி பார்கள் மற்றும் கடைகளில் வேலைசெய்பவர்கள்.....
எல்லோருக்கும் உழைக்கும் திறனும் சிந்திக்கும் ஆற்றலும் இருக்கும். விமானங்களும் விமான நிலைய கட்டிடமும் ஓடுபாதைகளும் அப்படியல்ல. மக்களால் இயங்குபவை. இயக்கப்படுபவை.
இலட்சக்கணக்கில் இந்த விமான நிலையத்தின் ஊடாக வெளியே வந்தவர்கள் உட்புகுந்து பறந்து சென்றவர்கள் அனைவரும் சில கணங்கள் நின்று மனித உழைப்பு பற்றி யோசித்திருப்பார்களா?
விமானத்தில்  ஏறும்  -    இறங்கும் அவசரம்தானே அனைவரது மனங்களிலும் வியாபித்திருக்கும்.
இன்று மட்டும் நான் ஏன் இப்படி யோசிக்கின்றேன்? சீலன் தனக்குள் கேட்டுக்கொண்ட கேள்விக்கு பதிலாக அன்று சந்தித்த பேராசிரியர் குமரவேலின் முகம்தான் வந்து நின்றது.
சில மணிநேரங்களுக்குள் அவர் சீலனின் மனதில் எத்தனை எண்ணக்கருக்களை விதைத்துவிட்டார்?
மரணிக்கும் வேளை நெருங்கியபொழுதும் அதற்காக அலட்டிக்கொள்ளாமல் இயங்கிய விஞ்ஞானி ரிச்சார்ட் கூட ஒரு யூத இனத்து அகதிதான். யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல்வாதிகளும் விடுதலைவேண்டி களம் இறங்கிய இயக்கங்களின் தலைவர்களும் தமிழ்த்தேசியம் பேசிய பல்கலைக்கழக மாணவர்களும் அடிக்கடி உச்சரித்த சொல் யூதர்கள்.
யேசுவும் கார்ல் மார்க்ஸூம் யூத இனத்திலிருந்து வந்தவர்கள்தான். மருத்துவபீடத்தில் மாணவர் தலைவனாக வந்தபின்னர் தெரிந்துகொண்ட அரசியல் பத்மகலா மீதான காதலுக்குப்பின்னர் தன்னைப்பாதிக்கவில்லையே என்று சீலன் ஆழ்ந்து யோசித்தான்.
சுவிஸ் வந்த பின்னர் அடுத்தடுத்து தனது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை மனதில் அசைபோட்டவாறே பஸ்தரிப்பிடத்திற்கு வந்தான் சீலன்.
தன்னைக்காட்டிக்கொடுத்த முரளி, கனடாவுக்கு சென்றுவிட்ட காதலி பத்மகலா, எதிர்பாராமல் சந்தித்து விடைபெற்ற பேராசிரியர் குமாரவேல், தஞ்சமடைந்த அறையில் சந்தித்த தவம் அண்ணர், தவத்தின் நண்பர்கள் வட்டம், எதிர்பாராமல் திடீரென்று கிடைத்துவிட்ட புகலிடத்திற்கான அனுமதிக்கடிதம்.......
வாழ்க்கை எத்தனை மனிதர்களை எத்தனை அனுபவங்களை தருகின்றது. அனுபவங்களைத்தானே அந்த விஞ்ஞானியும் தனது புத்திக்கொள்முதலாக்கியிருக்கவேண்டும். அந்தச்சிந்தனையைத்தானே குமாரவேல் சேரும் மனதில் விதைத்துவிட்டு விடைபெற்றார்.
உனக்கும் கீழே வாழ்பவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு என்ற எழுதிவிட்டுச்சென்ற கவியரசர் கண்ணதாசனும் தனது வாழ்வில் எத்தனை அனுபவங்ளை சந்தித்திருப்பார். அவரும் அகதியாக நடோடியாக தன்னைப்போன்று அலைந்திருப்பின் யேசுகாவியம் மாத்திரமல்ல அகதிகளின் காவியமும் பாடியிருப்பார்.
சீலன் பஸ்ஸில் ஏறி தவத்தாரைப்பார்க்கச்சென்றான். தவமண்ணையிடம் மனம்விட்டுப்பேசுவதற்கு அவனிடம் பல விடயங்கள் இருந்தன. பத்மகலா கனடாவிலிருந்து பேசியது. பேராசிரியர் குமாரவேலரின் சந்திப்பு, அவர் குறிப்பிட்ட விஞ்ஞானி ரிச்சர்ட், பத்மகலாவை அடையத்துடிக்கும் முரளி.... இப்படிப் பல. தவத்தாரைச்சந்தித்தவுடன் எதிலிருந்து தொடங்குவது எதில் வந்து முடிப்பது என்று தனது மனதிற்குள்ளே ஒத்திகை நடத்தியவாறு பஸ்ஸிலிருந்து தெருவைப்பார்த்தான். நகரம் ரம்மியமாக காட்சியளிக்கிறது. பச்சைக்கம்பளம் விரித்ததுபோன்ற புற்தரைகளும் ஆங்காங்கே மரங்களும் செடிகளும் புதர்களும் நீரோடைகளும் பூத்துக்குலுங்கும் மலர்களும் வாகனங்களின் ஹோர்ண் சப்தமேயற்ற நிசப்தமும் சீலனின் மனதிற்கு ஒத்தடமாகவிருந்தன.
குமாரவேல் சேர் போன்று பல அறிவுஜீவிகள் புகலிடத்தில் தஞ்சமடைந்திருப்பவர்களை சந்தித்தால் அவர்களின் வாழ்வில் அர்த்தமுள்ள அதிசயங்கள் நிகழுவதற்கு வாய்ப்புகள் இருக்கும். அவர் கனடா சென்று பத்மகலாவை சந்திக்கவேண்டும் என்று சீலனின் மனம் பிரார்த்தனை செய்தது.
சுவிஸ் புறப்படுவதற்காக அம்மா ஊரில் பட்ட கடனை அடைக்கவேண்டும். தங்கச்சிக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கவேண்டும். அதற்குப்பிறகுதான் காதல்.
பத்மகலா எனக்கு கிடைப்பாள் என்பது விதியானால் கிடைப்பாள். இல்லையென்றால்....?
சீலனுக்கு யோசிப்பதற்கு சங்கடமாகவிருந்தது.
தவத்தார் இடம்மாறி தங்கியிருந்த வீட்டுக்கு வந்தவுடன் சீலன் நேரத்தைப்பார்த்தான். மாலை 5 மணி கடந்திருந்தது.
' சீலன்.... இப்பத்தான் வேலையால் வந்தனான். இரும். தோய்ஞ்சிட்டு வாரன்.' அவர் தொலைக்காட்சியை முடுக்கிவிட்டு குளியலறைக்குள் சென்றுவிட்டார்.
தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. சீலனுக்கு சுவிஸ் மொழியை கருத்தூன்றி கற்கவேண்டும் என்ற உணர்வை தூண்டியதும் தொலைக்காட்சிதான்.
தனக்கு முன்னால் விரிந்து நீண்டு பரந்திருக்கும் பொறுப்புகளை யோசித்து மலைத்துப்போனான். சுவிஸ் மொழி படிக்கவேண்டும். வருமானத்திற்கு ஒரு தொழில் தேட வேண்டும். உழைக்கவேண்டும். கிடைக்கும் வேலை இரவிலா, பகலிலா, நடுச்சாமத்திலா?
படிக்க ஒரு நேரம், உழைக்க ஒரு நேரம், உறங்க ஒரு நேரம், உணவு சமைக்க ஒரு நேரம், வீட்டுச்சாமான் சமையல் சாமான் வங்க கடைத்தொகுதிகளுக்குச்செல்ல ஒரு நேரம். அதற்கெல்லாம் நேரம் ஒதுக்கிவிட்டால் கார் ஓட்டப்பழக ஒரு நேரம். அம்மாவுடனும் தங்கச்சியுடனும் தொலைபேசியில் பேசுவதற்கு ஒரு நேரம், இவ்வளவுக்கும் மத்தியில் கனடாவிலிருக்கும் காதலி பத்மகலாவுடன் பேசுவதற்கு பொருத்தமான நேரமும் தேட வேண்டும்.
இதற்குத்தானா புல்பெயர்ந்தவர்கள் எல்லோரும் நேரத்துடன் போராடுகிறார்கள் என்பது பேசுபொருளாகியிருக்கிறது.
(தொடரும்  பகுதி 17)
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.