கடற்கோட்டை
வட இலங்கையில் ஐரோப்பியரால் அமைக்கப்பட்ட கோட்டைகளில் ஊர்காவற்றுறை ஹீ மென்கில் கோட்டை வரலாற்றில் முக்கியம் பெறுகிறது. இக் கடற்கோட்டை ஆனது ஊர்காவற்றுறை – காரைநகரினை பிரிக்கும் ஆழமான கடலின் மத்தியில் போர்த்துக்கீசரினால் கட்டப்பட்டது. யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் கைப்பற்றி ஆட்சி செய்த போது ஊர்காவற்றுறை கோட்டையினை மாற்றியமைத்து தற்போதைய வடிவத்தினையும் பெயரையும் பெற்றது என்றும் கூறப்படுகின்றது. இக்கோட்டையானது ஒல்லாந்தர் காலத்தில் நாட்டைப் பாதுகாக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் இது முதன்முதலில் அமிநால் டெமென்சிஸ் என்ற போர்த்துக்கேய தளபதியால் 17 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதிற்கு ஆதாரங்கள் உள்ளன. இக்கோட்டையில் இருந்து இந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே செல்லும் கப்பல்களை அவதானிக்கலாம். யாழ் குடா நாட்டின் வெளித்தொடர்புகளை கட்டுப்படுத்தக் கூடிய கேந்திர ஸ்தானமாக அமைந்துள்ளது. இது பன்றியின் கால் வடிவத்தில் அமைந்துள்ள படியால் ஒல்லாந்தர் தமது மொழியில் இவ்வாறு அழைத்தனர்.
ஓல்லாந்தரால் சிறந்த முறையில் பேணி பாதுகாக்கப்பட்ட இக்கோட்டை 1795 இல் பிரிட்டிஷ்காரரிடம் சரணடைந்த பிற்பாடு சிறைக்கூடமாகவும் மருத்துவ நிலையமாகவும் பாவிக்கப்பட்டு வந்தது. கடலில் கப்பல் மூலம் போவோர் வருவோருக்கு நுழைவுச்சீட்டு இக்கோட்டையில் வைத்து வழங்கப்பட்டது. நாட்டிற்கு கப்பல் மூலம் வரும் பகையை இக்கோட்டை காத்து நின்றது. இங்கு வைத்து கப்பல்கள் ஆராய்ந்து சோதனை செய்யப்பட்டது. 2ம் உலக யுத்த காலத்தில் இது கடல் ஆகாய மீட்பு நிலையமாக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து குடியேறுபவர்களை பொது சுகாதாரத்திற்கு என்று தனிமைப்படுத்தும் நிலையமாக விளங்கியது. மேற்கூறப்படும் கோட்டை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பகுதியாக இருந்தது. சில காலம் இது தொல்லியல் திணைக்களப்பொறுப்பில் இருந்தது. அலுப்பாந்திக்கு நேராக இருப்பதனால் இலங்கைத்தீவின் கடல் நீர்ப்பரப்பிலிருந்து யாழ்ப்பாண கடல் நீரேரிக்குள் பிரவேசிக்கும் கப்பல்களை இங்கிருந்தே கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் முடிந்தது. ஆங்கிலேயர் காலத்தில் ஊர்காவற்றுறை முக்கிய கடற்படைத்தளமாக விளங்காத போதும் பிரதான சுங்கப் பரிசோதனை நிலையமாக விளங்கியது.
Credit
- 1