Jump to content
  • entries
    21
  • comments
    80
  • views
    95853

எம்மிடம் போனில் (தொலைபேசி) கேட்ககூடாத கேள்விகள்


போக்குவரத்து

2151 views

அங்கீகாரம் பெற்ற சாரதி பயிற்சி பயிற்றுனர்கள் வழங்கும் சேவை மருத்துவர்கள் செய்யும் சேவைக்கு ஒப்பானது.

வாகனம் ஓடுபவர்கள் எதிர்காலத்தில் தமக்கு உடல், உயிர் பொருட்சேதங்கள் ஏற்படாமல் தப்புவதற்கு முறையாக வாகனம் ஓடுவதற்கு கற்றுக்கொள்வதோடு, அதை சரியான முறையில் தொடர்ந்து பயிற்சி செய்து, தமது அனுபவங்கள் மூலமும், ஆர்வம் மூலமும் வாகனம் ஓடுதலில் அறிவை பெருக்கி கொள்ள வேண்டும். எதிர்பாராது நடைபெறும் சம்பவங்கள் நீங்கலாய் ஏனைய எல்லா சந்தர்ப்பத்திலும் சவாரியின் செளகரியமும், பாதுகாப்பும் வாகனத்தை ஓடுகிற சாரதியின் கைகளிலேயே தங்கி இருக்கிறது.

சாரதி பயிற்சி நெறியை பெற்று கொள்வது தொடர்பாய் எமது நிறுவனத்திற்கு தினமும் ஏராளம் தொலைபேசி அழைப்புக்கள் வரும். அதில் பெருன்பான்மையின "விலை விசாரிப்பதாய்" அமையும்.

சாரதி பயிற்சி நெறி என்பது சந்தையில் தக்காளி, கத்தரிக்காய் கிலோ எவ்வளவு என்று கேட்டு வாங்கி கூடையில் போடுகிற கொடுக்கல் வாங்கல் போன்றது அல்ல என்று பலருக்கும் தெரிவது இல்லை. சாரதி பயிற்சி நெறி வாகனம் ஓடுபவர்களினதும், பாதசாரிகள், தெருவை பாவிக்கிற அனைவரினதும் உடல், உயிர், வாழ்க்கை, எதிர்காலம் சம்மந்தப்பட்டது.

இங்கு போனில் (தொலைபேசி) எம்மிடம் கேட்கக்கூடாத அல்லது தவிர்க்கப்படவேண்டிய சில வினாக்களை தருகிறோம். "கேட்ககூடாததன்" என்பதன் அர்த்தம் என்ன என்றால் தவறான அணுகு முறையை குறிக்கிறது.

கேள்வி 01: நான் எவ்வளவு காலத்தில் லைசன்ஸ் எடுக்கலாம்?

குறிப்பிட்ட ஒரு மாணவனை நேரில் கண்டு அவர் வாகனம் ஓடுவதை மதிப்பீடு செய்யாதவரை ஒருவரது ஆற்றலை போன் ஊடாக எதிர்வு கூற முடியாது. சிலர் உடனடியாக விடயங்களை பிடித்து கற்று கொள்வார்கள், சிலர் அதிகளவு பயிற்சி வழங்கப்பட்டதன் பின்னரே வாகனத்தை முறையாக ஓடும் நிலைக்கு முன்னேறுவார்கள். சிலருக்கு வாகனம் ஓட தெரிந்தாலும் போக்குவரத்து விதிமுறைகளை அனுசரித்து அதற்கேற்ப வாகனம் ஓடுவதற்கு தெரியாமல் இருக்கும்.

வீதி பரீட்சையில் உங்களுக்கு வாகனம் ஓட தெரியுமா என்று பரீட்சிப்பது இல்லை. பரீட்சை விதி முறைகளுக்கு அமைய போக்குவரத்து விதிமுறைகளை அனுசரித்து உங்களுக்கு வாகனம் ஓட தெரியுமா என்றே பரீட்சிக்கப்படுகிறது. நீங்கள் எவ்வளவு திறமையான சாரதியாக காணப்பட்டாலும், எத்தனை வருடங்கள் அனுபவம் இருந்தாலும் வீதி பரீட்சையில் எதிர்பார்க்கப்படும் வகையில் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் வாகனத்தை சரியாக ஓடி காண்பிக்க தெரியாவிட்டால் உங்களால் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்று கொள்ள முடியாது, சோதனையில் தோல்வியே கிடைக்கும்.

எவ்வளவு காலத்தில் ஒருவர் லைசன்ஸ் எடுக்கலாம் என்பது அவரவர் தனி தன்மைகளுக்கு ஏற்ப வேறுபடும்.

தொடரும்.............

தகவல்: போக்குவரத்து

http://CarDriving.CA

  • Like 1

2 Comments


Recommended Comments

தொடர்ச்சி.............

கேள்வி 01 போன்றதே "எனக்கு எத்தனை வகுப்புக்கள் தேவைப்படும்?", "நான் எப்போது வீதி பரீட்சைக்கு செல்லலாம்?" ஆகிய வினாக்களும் ஆகும். ஒருவரை நேரில் கண்டு அவர் வாகனம் ஓடும்போது அவரது ஆற்றல்களை நாம் மதிப்பீடு செய்யாதவரை தொலைபேசி ஊடாய் இவ்வாறான கேள்விகளுக்கு பதில் கூறமுடியாது.

கேள்வி 02: உங்களிடம் சாரதி கற்கைநெறி சான்றிதழ் (Certificate) எடுக்கலாமா? / என்ன விலை?

முழுமையான பயிற்சி நெறியில் இணைந்தவர்களுக்கு பயிற்சி நெறியை முழுமையாக பூர்த்தி செய்ததும் (MTO approved BDE Course - Beginner Driver Education Course) சாரதி பயிற்சி கல்லூரிகள் மூலம் முன்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த சான்றிதழை காண்பிப்பதன் மூலம் காப்புறுதி நிறுவனங்களில் கழிவு (Discount) பெறக்கூடியதாக அமைந்தது.

ஆனால், ஒன்றாரியோ போக்குவரத்து அமைச்சின் புதிய விதிகளின்படி நடைமுறை பின்வருமாறு உள்ளது:

1. மாணவன் ஒருவன் Beginner Driver Education Course இல் இணையும்போது (20 மணித்தியாலங்கள் classroom lessons + 10 மணித்தியாலங்கள் Home-link/Homework + 10 மணித்தியாலங்கள் வாகனத்தில் பயிற்சி), அவர் முதலாவது வகுப்பறை பாடத்தில் கலந்துகொண்டதும் அவர் விபரங்களை போக்குவரத்து அமைச்சின் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். (புதிய விதிகளின்படி இணையத்தளத்தின் பதிவு செய்வதாயின் மாணவன் ஆகக்குறைந்தது ஒரு வகுப்பறை பாடத்தில் கலந்துகொண்டபிறகே அவருக்கு வாகனத்தில் பயிற்சி அளிக்க முடியும்)

2. முழுமையான பாடநெறியை குறிப்பிட்ட அந்த மாணவன் பூர்த்தி செய்ததும் ஒன்றாரியோ போக்குவரத்து அமைச்சின் இணையத்தளத்தில் உள்ள அந்த மாணவனின் விபரத்தில் அவன் கற்கைநெறியை பூர்த்தி செய்த திகதியை பதிவு செய்யவேண்டும். இந்தப்பதிவே இப்போது சான்றிதழுக்கு இணையாக காப்புறுதி நிறுவனங்களிடம் கழிவு பெறுவதற்கு பாவிக்கப்படுகிறது. முன்புபோல் சாரதி பயிற்சி கல்லூரிகள் சான்றிதழ் ஏதும் வழங்குவது இல்லை.

முழுமையாக பயிற்சிநெறியை பூர்த்தி செய்யாத ஒரு மாணவனை போக்குவரத்து அமைச்சின் இணையத்தளத்தில் பதிவு செய்வது சட்டவிரோதமானது ஆகும். சிலர் (சாரதி பயிற்றுனர்கள்) சட்டவிரோதமாக சிறிதளவு பணத்தை வாங்கிக்கொண்டு மாணவர்கள் முழுமையான பயிற்சி நெறியை பெற்றதாக பதிவு செய்கிறார்கள். இது சட்டவிரோதமானது என்பதோடு, குறிப்பிட்ட மாணவனின் எதிர்காலத்திற்கு ஆபத்தையும் ஏற்படுத்தும். முறையாக பயிற்சி நெறியை பூர்த்தி செய்யாத மாணவன் எதிர்காலத்தில் விபத்துக்களில் சிக்கி தனக்கும், மற்றவர்களுக்கும் பாதிப்பை உண்டு பண்ணக்கூடும்.

தொடரும்.............

Link to comment

நல்ல தகவல்களுக்கு நன்றிகள் போக்குவரத்து..! முறையான பயிற்றுநரிடம் பழகாமல் தெரிந்தவர்களிடம் சிலர் பழகுவதைக் கண்டிருக்கிறேன்..! இவர்களின் வாகன ஓட்டு முறை வித்தியாசமாக இருக்கும்..!

  • Like 1
Link to comment
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.