செவ்வாய் கிரகத்தில் இறங்கும் `பறவை'
[27 - May - 2008] என்.ராமதுரை
அமெரிக்க விண்வெளிக் கேந்திரத்திலிருந்து 9 மாதங்களுக்கு முன்னர் செலுத்தப்பட்ட விண்கலம் சுமார் 42 கோடி கிலோ மீற்றர் பயணத்துக்குப் பிறகு இந்திய நேரப்படி நேற்று (திங்கட்கிழமை) பகலில் செவ்வாய் கிரகத்தில் இறங்கப் போகிறது. இது ஆளில்லா விண்கலமாகும்.
கிரேக்க புராணத்தில் வரும் `பீனிக்ஸ்' என்னும் பறவையின் பெயர் இந்த விண்கலத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.
விண்கலத்துக்குப் பறவையின் பெயர் வைக்கப்பட்டுள்ள போதிலும் இதன் வடிவத்துக்கும் பறவையின் உருவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சொல்லப் போனால் பீனிக்ஸ் விண்கலத்தின் வடிவம் ஹோட்டல்களில் காணப்படும் வட்டமான மேசை போல உள்ளது. உயரம் சுமார் ஒன்றரை மீற்றர், எடை 350 கிலோ.
இந்த விண்கலத்தில் பல பரிசோதனைகளுக்கான கருவிகள் உண்டு. முக்கியமாக மண்ணைத் தோண்டுவதற்கென சுமார் இரண்டரை மீற்றர் நீளத்துக்கு வலுவான கரம் உள்ளது.
பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இறங்கிய பின்னர் இந்தக் கரத்தைப் பயன்படுத்தி சுமார் 2 அடி ஆழத்துக்கு மண்ணைத் தோண்டி அங்கு மண்ணுக்கு அடியில் ஐஸ் கட்டி இருக்கிறதா என்று ஆராயப்போகிறது. எதற்கு இந்தப் பரிசோதனை?
செவ்வாய் கிரகத்தில் பரவலாக மண்ணுக்கு அடியில் நிறைய ஐஸ் கடடி இருக்குமானால் அதை உருக்கி நீரைப் பெற முடியும். நீரைப் பெற முடியும் என்றால் அந்த நீரை ஆக்சிஜன் வாயுவாகவும் ஹைட்ரஜன் வாயுவாகவும் தனித்தனியே பிரித்துக் கொள்ள இயலும். இந்த வாயுக்களைப் பின்னர் ராக்கெட் இயக்கத்துக்கான எரிபொருளாகவும் மாற்றிக் கொள்ள முடியும்.
இன்னும் சுமார் 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப உத்தேசம் உள்ளது. ஆகவே செவ்வாயில் ஐஸ் கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதாகத் தெரியவருமானால் அது செவ்வாயில் மனிதன் தங்கி இருப்பதற்கு பேருதவியாக இருக்கும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் செவ்வாயில் எண்ணற்ற கால்வாய்கள் இருப்பதாக பெர்சிவல் லோவல் (1855 - 1916) என்ற அமெரிக்க விஞ்ஞானி 1895 இல் அடித்துக் கூறினார்.
வானவியலில் ஆர்வம் கொண்ட அவர் சொந்தச் செலவில் வான் ஆராய்ச்சிக் கூடம் அமைத்து டெலஸ்கோப் மூலம் செவ்வாய் கிரகத்தை விரிவாக ஆராய்ந்தார்.
செவ்வாய் கிரக வாசிகள் பொறியியலில் நம்மை விட மிக முன்னேறிய நிலையில் உள்ளதாகவும் செவ்வாயின் கால்வாய்கள் இதைக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.
லோவலின் இக் கருத்துகளுக்கு அப்போது கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால், லோவலை தப்பு சொல்ல முடியாது. டெலஸ்கோப் மூலம் செவ்வாய் கிரகத்தை உற்றுக் கவனித்த போது குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகள் தெரிந்தன. லோவல் அவற்றைக் கால்வாய்கள் என்று நம்பினார். பின்னர் தான் அவை வெறும் மாயை என்று தெரிய வந்தது.
நீங்கள் வானில் மேகங்களைக் கவனித்தால் சில சமயங்களில் அவை மாடு போல அல்லது யானை போல தோற்றம் அளிக்கும். செவ்வாய் கிரகத்தின் கோடுகள் அப்படி கண்ணை ஏமாற்றுகின்றன மாயை என்பது பின்னர் புலனாகியது.
எனினும், லோவல் காலத்திலும் சரி அதற்குப் பின்னரும் சரி மேலை நாடுகளில் பல நாவலாசிரியர்கள் செவ்வாய் கிரகம் பற்றி இஷ்டத்துக்குத் தங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு செவ்வாயில் விசித்தர உருவம் கொண்ட `மனிதர்கள்' இருப்பதாகக் கதைகள் எழுதினர்.
செவ்வாயிலிருந்து `பச்சை' நிற மனிதர்கள் பூமி மீது படையெடுப்பு நடத்துவது போன்ற கதைகள் அமெரிக்காவில் நிறையவே வெளிவந்தன. ஆகவே, அமெரிக்காவிலும் பிற மேற்கத்திய நாடுகளிலும் செவ்வாய் கிரகத்தில் உண்மையிலேயே பச்சை நிற மனிதர்கள் உள்ளதாகப் பாமர மக்களில் பலரும் நம்பினர்.
அமெரிக்க ஹாலிவுட் படத் தயாரிப்பாளர்கள் இன்னமும் விடுவதாக இல்லை. செவ்வாயில் அபூர்வ மனிதர்கள் இருப்பது போன்ற கற்பனையில் பல ஆங்கிலப் படங்களைத் தயாரித்து வெளியிட்டு வருகின்றனர்.
உண்மையில் செவ்வாய் கிரகத்தில் புழு பூச்சி கூட இல்லை. நுண்ணுயிர்களும் இல்லை. அமெரிக்காவும் ரஷ்யாவும் ஆளில்லா விண்கலங்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப ஆரம்பித்தபோது இது உறுதியாகியது.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இரண்டு நாடுகளும் பல விண்கலங்களை அனுப்பியுள்ளன. எனினும் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதில் அமெரிக்காவுக்குத் தான் அதிக வெற்றி கிட்டியுள்ளது. பல ரஷிய விண்கலங்கள் தோல்வியே கண்டன.
அமெரிக்கா 1975 இல் அனுப்பிய வைக்கிங் - 1 மற்றும் வைக்கிங் -2 விண்கலங்கள் செவ்வாயில் இறங்கி விரிவான பரிசோதனைகளை நடத்தின.
செவ்வாயின் தரையில் நுண்ணுயிர்கள் உள்ளனவா என்று இவை ஆராய்ந்தன. ஆனால் அதில் தீர்மானமான முடிவு கிட்டவில்லை. அதன் பிறகு பல விண்கலங்கள் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டுள்ளன.
பல விண்கலங்கள் செவ்வாயில் இறங்கி ஆராய்ந்துள்ள போதிலும் அக்கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
இது விஷயத்தில் விடாப்பிடியாக விஞ்ஞானிகள் விண்கலங்களை அனுப்பி ஆராய்வதற்கு காரணம் உள்ளது.
செவ்வாய் கிரகத்தில் என்றோ- பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீர் பெரும் பிரவாகமாகப் பெருக்கெடுத்து ஓடியதற்கான தடயங்கள் காணப்படுகின்றன.
சுமார் 4 ஆயிரம் கிலோ மீற்றர் நீளம் கொண்ட மிகப் பெரிய நதி செவ்வாயில் இருந்ததாகத் தெரிகிறது. இந்த நதி ஓடியபோது ஏற்பட்ட மிக ஆழமான பள்ளத்தாக்குகள் இப்போதும் காணப்படுகின்றன.
கடந்த காலத்தில் செவ்வாய்க்குச் சென்ற விண்கலங்கள் இவை பற்றி விரிவான படங்களை அனுப்பியுள்ளன.
செவ்வாயில் ஏதோ ஒரு காலத்தில் பிரம்மாண்டமான நதி ஓடியது என்றால் அந்த தண்ணீர் அனைத்தும் எங்கே போயிற்று என்பது பெரும் புதிராக உள்ளது.
காற்று மண்டலத்தில் நீராவி வடிவில் தண்ணீர் உள்ளதா என்றால் அதுவும் இல்லை.
இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். பூமியுடன் ஒப்பிட்டால் செவ்வாய் கிரகம் வடிவில் சிறியது. செவ்வாயின் குறுக்களவு பூமியின் குறுக்களவில் பாதி தான்.
எந்த ஒரு கிரகமாக இருந்தாலும் அது எந்த அளவுக்குப் பெரியதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதற்கு ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். செவ்வாய் கிரகம் வடிவில் சிறியது என்பதால் அதன் ஈர்ப்பு சக்தி குறைவு.
ஆகவே அக் கிரகத்தினால் தனது காற்று மண்டலத்தை ஈர்த்து வைத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது.
இன்னொன்று, ஒரு கிரகத்தில் காற்று மண்டலத்தின் அடர்த்தி நல்ல அளவில் இருக்குமானால் அதனால் பல சாதகங்கள் உண்டு. பூமியின் காற்று மண்டலம் நன்கு அடர்த்தியாக உள்ள காரணத்தால் தான் பூமியில் நீரானது திரவ வடிவில் உள்ளது.
செவ்வாயில் ஏதோ ஒரு காலகட்டத்தில் காற்று மண்டல அடர்த்தி பெரிதும் குறைந்தபோது அதன் தண்ணீரானது வாயுக்களாகப் பிரிந்து அக் கிரகத்திலிருந்தே வெளியேறி விண்வெளிக்குப் போய்விட்டிருக்கலாம் என்ற ஒரு கருத்து உள்ளது.
ஒரு வேளை செவ்வாயில் மிச்ச மீதியாக இருக்கின்ற நீரானது அதன் துருவப் பகுதியில் உறைந்த ஐஸ் கட்டி வடிவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆகவே தான் இப்போது முதல் தடவையாக அமெரிக்க விண்கலம் ஒன்று செவ்வாயின் வட துருவப் பகுதியில் போய் இறங்க இருக்கிறது.
பீனிக்ஸ் விண்கலம் மட்டும் செவ்வாயில் நிலத்துக்கு அடியில் ஐஸ் கட்டி வடிவில் தண்ணீர் உள்ளதாகக் கண்டுபிடிக்குமேயானால் அது கடந்த பல நூற்றாண்டுகளில் இல்லாத மாபெரும் கண்டுபிடிப்பாக இருக்கும்.
ஆனால் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாயில் பத்திரமாகப் போய் இறங்க வேண்டுமே என்பது அமெரிக்க விஞ்ஞானிகளின் முதல் கவலையாகும்.
2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி விண்வெளியில் செலுத்தப்பட்ட பீனிக்ஸ், செவ்வாயை நெருங்கும் கட்டத்தில் அதன் வேகம் மணிக்கு 21 ஆயிரம் கிலோமீற்றராக இருக்கும்.
அடுத்து அது செவ்வாய் கிரகத்தின் தரையை நோக்கிப் பாயும். அப்போது செவ்வாயின் காற்று மண்டல உராய்வு காரணமாக சுமார் 2000 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் தோன்றும். இந்த வெப்பம் விண்கலத்தைத் தாக்காதபடி வெப்பக் காப்புக் கேடயம் உள்ளது. தரையிலிருந்து சற்று உயரத்தில் பீனிக்ஸ் விண்கலத்தின் பாராசூட்டுகள் விரிவடையும்.
ஒரு கட்டத்தில் பாராசூட்டுகள் கழன்றுகொள்ளும். பின்னர் விண்கலத்தின் வேகத்தை மிகவும் குறைப்பதற்கான கருவிகள் செயல்படும். இறுதியில் வேகம் மணிக்கு 8 கிலோ மீற்றராகக் குறையும் போது விண்கலத்தின் மூன்று கால்களும் தரையில் ஊன்றி உட்காரும். தரையிறங்குவதில் வெவ்வேறு கட்டங்களில் எல்லாம் சரியாகச் செயல்பட்டாக வேண்டுமே என்பது தான் விஞ்ஞானிகளின் கவலை.
கடந்த காலத்தில் பல விண்கலங்கள் சரியாகத் தரையிறங்காமல் செவ்வாயின் தரையில் மோதி நொறுங்கியது உண்டு. பீனிக்ஸ் விஷயத்தில் அப்படி ஏற்படாது என்று கருத இடம் இருக்கிறது.
ஏனெனில் கிரேக்க புராணப்படி பீனிக்ஸ் பறவை சாகாவரம் பெற்றதாகும்.
(கட்டுரையாளர் : மூத்த பத்திரிகையாளர்)
தினமணி
http://www.thinakkur...s_page51582.htm