Help - Search - Members - Calendar
Full Version: புலிகள் சும்மா இருக்க மாட்டார்கள் -தமிழ்ச்செல்வன்
யாழ் கருத்துக்களம் > தகவற் களம் > செய்திகள் : தமிழீழம்
கந்தப்பு
புலிகள் சும்மா இருக்க மாட்டார்கள் - தமிழ்ச்செல்வன் ஜூனியர் விகடனுக்கு வழங்கிய செவ்வி

http://www.tamilnaatham.com/pdf_files/juni..._2006_04_25.pdf
Naasamaruppan
இலங்கையின் மீது மீண்டும் சர்வதேச நாடுகளின் கவனம் விழுந்திருக்கிறது. இதற்குக் காரணம், கடந்த ஒரு மாதத்தில் இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் என இரு தரப்பில் வெடித்துக் கிளம்பியிருக்கும் வன்முறைகள்தான். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என ஒரு மாதத்தில் மட்டும் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.

இதற்கு பதிலடியாகக் கண்ணி வெடிகளின் மூலம் ராணுவத்தினரைத் தாக்கி அழிக்கிறார்கள் புலிகள். அமைதி பேச்சுவார்த்தைக்காக வந்த நார்வே, கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. புலிகள், அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகிவிட்டதாகவும் தங்களின் தளபதிகளைத் திரட்டி, அதிரடியான தாக்குதலை நடத்தப் போவதாகவும் செய்திகள் கசிகின்றன. இப்படியரு பதற்றமான நிலையில் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் தொலைபேசி மூலம் நமக்குக் கொடுத்த சிறப்பு பேட்டி...

ஈழத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சூழல் தமிழர்களை எந்த வகையில்
Ôஈழஅச்சுறுத்துகிறது?


"கடந்த ஐந்து ஆண்டுகளாக இலங்கை அரசால் பெயரளவில் பேணப்பட்டு வந்த அமைதி, இப்போது நிர்மூலமாக்கப்பட்டு தமிழர்களின் வாழ்வுரிமை மீண்டும் பறிக்கப்பட்டிருக்கிறது. புதிய அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, தமிழ் மக்கள்மீது கொடூர யுத்தத்தைக் கட்டவிழ்த்து விடுவதற்கான முழு ஆயத்தங்களை செய்து வருகிறார். புலிகளின் ஆதரவாளர்கள், பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள் என்று தொடர்ந்து பலர் கொலை செய்யப்படுகிறார்கள். மாமனிதர் பரராஜசிங்கம் தொடங்கி சில தினங்களுக்கு முன் கொல்லப்பட்டிருக்கும் விக்னேஸ்வரன் வரை பலரை நாங்கள் இழந்திருக்கிறோம். திரிகோணமலையிலும் ஈழத்தின் மற்ற பகுதிகளிலும் இன ஒழிப்பு கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்துக்கொண்டு புலிகள் சும்மா இருக்கமாட்டார்கள்."

அமைதி பேச்சுவார்த்தையிலிருந்து புலிகள் விலகி விட்டதாக சொல்லப்படுகிறதே?

"இது முற்றிலும் தவறானது. நாங்கள் எந்த விதத்திலும் இன்னும் விலகிக் கொள்ளவில்லை. இலங்கை அரசு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்றுதான் ஜெனீவா பேச்சுவார்த்தைக்கு வந்தது. அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி... முன்பு செய்துகொண்ட ஒப்பந்தத்தை எப்படி நிறைவேற்றலாம் என்பதைப் பற்றியே நாங்கள் யோசிக்கிறோம். அந்த ஒப்பந்தப்படி புலிகள் நேர்மையாக நடந்து கொண்டார்கள். ஆனால், இலங்கை அரசு ஒப்பந்தத்தை மீறி சர்வதேச சமுதாயத்தின் முன்பாக அம்மணமாக அசிங்கப்பட்டு போனது. அந்த ஆத்திரத்தை இப்போது தமிழ் மக்களைக் கொன்றொழிப்பதன் மூலம் தீர்த்துக்கொள்கிறது.

ஜெனீவாவில் நடைபெறும் அடுத்த சுற்றுப் பேச்சு வார்த்தைக்கு எப்படியாவது புலிகளை செல்லவிடாமல் தடுத்துவிட வேண்டும் என்று போராளிகளைக் கோபப்படுத்தி, அமைதிச் சூழலை கெடுக்கப் பார்க்கிறார்கள். இதை சர்வதேச சமுதாயத்திடம் தெளிவாக சொல்லிவிட்டோம். பேச்சுவார்த்தைக்கு ஜெனீவா செல்வதற்கான சூழல் இப்போது இல்லை. நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், சதிகளுக்கு இலங்கை அரசாங்கம் பதில் சொல்லியாகவேண்டும். ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றாமல் மேற்கொண்டு பேசிப் பயன் இல்லை."

விடுதலைப் புலிகளின் கிழக்குப் பகுதி தளபதிகளை வன்னி பகுதிக்கு அழைத்துப் பேசுவதற்காக அமைதி கண் காணிப்புக் குழு ஏற்பாடு செய்த கடற்பயணம், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதன் காரணம் என்ன?

"திரிகோணமலை, மட்டக் களப்பு ஆகிய கிழக்குப் பகுதி தளபதிகளின் கடற்பயணம் மேற் கொள்ளப்பட்டிருந்தால் மிக மோசமான இழப்புகளை நாங்கள் சந்தித்திருக்கக் கூடும். 'இலங்கைக் கடற்படையால் எந்தவிதமான தொல்லைகளும் ஏற்படாது. தளபதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது' என்கிற உத்தரவாதம் அமைதி கண்காணிப்பு குழுவால் கொடுக்கப்பட்ட பின்புதான் பயணத்துக்கு ஒப்புக்கொண்டோம். அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பயணிகள் கப்பலில் எங்களது தளபதிகள் ஏறியபோது, அந்தக் கப்பலின் கேப்டன், இலங்கை கடற்படையினரின் கட்டளைக்கிணங்க செயல்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறார்கள். மேலும்,அந்த கப்பலைச் சுற்றி இலங்கை கடற்படைக்கு சொந்தமான டோரா எனப்படும் நான்கு தாக்குதல் படகுகளும் நின்றிருந்திருக்கின்றன. மிகப்பெரிய சதித் திட்டம் அரங்கேற்றப்பட இருந்ததைக் கடைசி நேரத்தில் கண்டு பிடித்ததால், பயணத் திட்டத்திலிருந்து விலகினோம். இதைக் கண்காணிப்புக் குழுவுக்கும் தெரியப்படுத்தி விட்டோம்."

திரிகோணமலையில் வாழும் தமிழ் மக்களின் தற்போதைய நிலை என்ன?

"கடந்த நான்கு வருட அமைதிப் பேச்சுவார்த்தையைப் பயன்படுத்தி, அங்கு சிங்களகாடையர்கள் (ரவுடிகள்) மற்றும் சிங்கள நீதிமன்றத்தால் கொடூரமான குற்றவாளிகள் என்று சிறையில் அடைக்கப்பட்டவர்கள் (சட்டரீதியாக விடுதலை செய்து) என்று பலரின் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்துத் தமிழ்ப் பகுதிகளில் குடியமர்த்துகிற ஒரு பாசிச வேலையை இலங்கை அரசு செய்கிறது.

கடந்த சில தினங்களுக்குள்ளாக கிட்டத்தட்ட முப்பது தமிழர்களைக் கொலை செய்தது, இந்தக் காடையர்கள்தான். சிங்கள ராணுவத்தினர் தாக்கப்படுவது வெளி யுலகுக்குத் தெரிகிற அளவுக்கு, தமிழர்கள் கொல்லப்படுவது தெரியாமல் போகிறது. திரிகோணமலையில் வாழும் தமிழ்மக்கள் ஒருவிதமான பதற்றத்துடனேயே வாழ வேண்டியிருக்கிறது."

விடுதலைப்புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி இலங்கை ராணுவத்தினர் விகொல்லப்படுவதுதான்& திரிகோணமலை கலவரத் துக்குக் காரணம் என்று கூறப்படுகிறதே?

"திரிகோணமலையில் நடந்ததை கலவரம் என்று சொல்வதே தவறு. கலவரம் என்றால் இரண்டு பக்கமும் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்குமே? இது தமிழர்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதல். திரிகோணமலையில் ஒரு குண்டு வெடிக்கவைக்கப்பட்ட சிறிது நேரத்தில், லாரிகளிலும் வாகனங்களிலும் சிங்கள காடையர்கள் கொண்டுவரப்பட்டு, இந்த கோரமான படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழ் மக்கள் பேரவைத் தலைவரான விக்னேஸ்வரன், ராணுவ உயர் பாதுகாப்பு வளையத்துக்குள்ளேயே கொல்லப்பட்டிருக்கிறார். அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர்கள் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றினார்கள். மிகமுக்கியமான நகரசபைகளையும் பிரதேச சபைகளையும் கைப்பற்றினார்கள். விக்னேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினராக விரைவில் பதவி ஏற்க இருந்தார். இந்நிலையில்தான் கொலை நிகழ்ந்திருக்கிறது.

புலிகளால் ராணுவத்தினர் கொல்லப்பட்டதால்தான் இத்தகைய தாக்குதல்கள் நடைபெறுவதாக சொல்வது ஒரு காரணமே அல்ல."


தற்போதைய சூழல், சர்வதேச சமுதாயத்திடம் புலிகளுக்கு நெருக்கடியை
தோற்றுவிக்குமா? இந்த விஷயத்தில் இந்தியாவுக்கும் நெருக்குதல் இருக்கிறதா?


"எம்மைப் பொறுத்தவரையில், சர்வதேச சமுதாயத்தின் ஆதரவையோ ஒத்துழைப்பையோ வைத்துக்கொண்டு எம்முடைய மக்களின் போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்கவில்லை. இப்போதுதான் இலங்கை அரசின் கபட நோக்கத்தையும் குள்ளநரித்தனத்தையும் புரிந்து கொண்ட சர்வதேச சமுதாயம், இலங்கை அரசுக்கு தான் செய்துவந்த உதவிகளை நிறுத்தி, 'தமிழர்களின் பிரச்னையை சமாதான வழியில் பேசி, அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டும்' என்று நெருக்கடி கொடுக்கிறது.

உலகெங்கிலும் இன விடுதலைக்காகவும் தங்களின் லட்சியங்களுக்காகவும் போராடுகிற போராளி அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்த காலம் மாறி, போராட்டங்களின் நோக்கங்களைப் புரிந்துகொண்டு ஆதரவு வழங்கிய வரலாறு உண்டு. தென்னாப்பிரிக்கப் போராட்டத்திலும் சரி, பாலஸ்தீன போராட்டத்திலும் சரி... இதுதான் நடந்தது. காலம் மாறும்... காற்றும் மாறி வீசும். எங்களது நியாயமான போராட்டத்தைப் புரிந்துகொண்டு எங்களையும் அங்கீகரிக்கும் காலம் வரும். ஆனால், இலங்கை விரிக்கும் நயவஞ்சக வலையில் இந்தியா சிக்கிவிடக் கூடாது."

புலிகள் யுத்தத்துக்குத் தயாராகி விட்டார்களா?

"புலிகள் எப்போதுமே தங்களுடைய தேசத்தையும் மக்களையும் பாதுகாக்கிற ராணுவ பலம் கொண்ட தேசிய விடுதலை அமைப்பாகத்தான் இருக்கிறார்கள். எமது மக்களைக் காக்க எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக ஒவ்வொரு புலி வீரனும் காத்திருக்கிறான். ஒருவேளை பேச்சுவார்த்தை முறிந்து போனால், அதற்கு சிங்கள பேரினவாதிகளே காரணம்."

& டி.அருள்எழிலன்
விகடன்
This is a "lo-fi" version of our main content. To view the full version with more information, formatting and images, please click here.
Invision Power Board © 2001-2010 Invision Power Services, Inc.