Reply to comment

புலனாய்வுத் திறலோன் அருள் வேந்தன்

Col. Charls

     
அருள்வேந்தன் என்னும் அரும்பொருட் பெயரின்று
    அளவிலா உணர்வினை அளித்து நிலைத்ததே!
இருளடைந்த நாட்டின் இன்னல்க ளகன்றிட
    இரும்புளம் பூண்டு இரவுபகல் உழைத்த
பெருமகனாம் சார்ள்செனும் ரவிசங்கர் தன்னைப்
    பிரிந்தின்று தமிழினம் பெருந்துயரில் ஆழ்ந்ததே!
அருமகனின் அளப்பரிய ஆற்றல்கள் செயல்கள்
    அடக்கம் அர்ப்பணிப்பை அகத்தினில் நிரப்பிடுவோம்;!

சுகந்தனெனும் தீரனவன் சுதந்திரப்போ ராட்டத்திற்
    சுவடுகள் பதித்துமெய்க் காவலனாய்த் திகழ்ந்து
பகையொடுக்கப் புறப்பட்ட வீரமறவன் காவலன்
    பாங்கான தமிழினத்தின் பண்பான வழிதனில்
அகமெங்கும் அன்னைத் தமிழன்னை விடுதலைக்காய்
    ஆற்றிடும் பணிகளின் பொருட்டாய் உயரீந்த
நிகரிலா எம்முயிர் மாவீரத் தெய்வங்கள்
    நெஞ்சமெலாம் நிறைத்து வணங்கினோம் நித்தம்!

பொங்கல் புத்தாண்டு; புதியன பிறந்ததெனப்
    புத்துணர்வில் எம்மினம் பூரித்து நிற்கையிலே
எங்களரும் நாட்டில் அன்னியரின் வீழ்ச்சியது
    அண்மித்து விட்டதென ஆறுதலடை கையிலே
தங்கத் தமிழன்னை தனித்துவமா யீன்றவெம்
    தானைத் தனயரை இழந்தோம்! தளர்ந்தோம்;!
பொங்கிடும் தமிழீழ வெற்றிதனைப் பாராது
    போயினரே! அவர்தம் பாதமெம் சென்னியதே!
 
அரசியற் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் பிரிவுடனே
    அன்றாடம் செய்திநல்கு புலிக்குரல் அன்பர்கள்
உரமிகு உள்ளத்தில் உணர்வுடன் போராடி
    உன்னத உயிர்களை நாளும் ஈய்ந்திடும்
திருநிறைச் செல்வர் செல்வியராம் போராளிகளின்
    சிந்தனையில் திளைத்து வருந்தி நிற்கையிலே
அருமருந்தாய்க் கிடைத்த உயர்அருள் வேந்தன்தன்
    ஆன்றவுயிர் பிரிந்ததென அறிந்தோம் துடித்தோம்!

சிங்களத்திற் கோர்சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்து
    சீருடனே யவர்தம் கோட்டைகளிற் புகுந்து
பங்கம்தனைப் புரிந்த பகைவர் கூட்டம்சேர்
    பக்கபல மாய்நின்ற பன்னாட்டுத் தலைமைகள்
தங்கத் தமிழினத்தின் தீரவீரம் அறிந்துமே
    திகைத்திட வழிவகுத்த தேன்தமிழன் சார்ள்ஸ்
எங்கும் நிறைந்தான் உள்ளங்களில் நிலைத்தான்
    என்றென்றும் ஏற்றித் தொழுதிடுவோம் நாமே!

அனைத்துலக விமான நிலையம் தன்னில்
    எந்தவொரு உயிரின இழப்பும் இன்றித்
தனையழித்துக் கரும்புலி வீரன் வெற்றிபெறத்    
    தக்கவே கடும்பயிற்சி பெரிதாய் வழங்கி
முனைப்புடனே காலிக் கடற்படைத் தளம்தன்னை
    முற்றாகத் தகர்த்திட மூச்சாக உழைத்து
நினைத்ததை முடித்திட வைத்தானெம் வேந்தன்
    நினைவா லயமாய் நிற்கின்றான் நிமிர்ந்து!

தன்னம் பிக்கையுடன் தளர்விலா உறுதியும்
    தற்றுணிவும் தன்மான இனஉணர்வும் என்றும்
புன்முறுவல் பூத்த பொலிவான திருமுகமும்
    புலோலியூ ரீய்ந்த புலனாய்வுப் பெட்டகமாய்ப்
பன்னுதற் கரியநற் பண்பாளனாய்த் திகழ்ந்து
    பால்முகம் மறைத்துப் பகலவனுடன் இணைந்து
இன்னல்கள் வந்தகாலை இனியதோள் கொடுத்து
    ஏற்றங்கள் தந்தான்! ஏந்தினோம் நெஞ்சில்!
       
மக்களின் விடிவிற்காய் மாண்புனே யுழைத்த
    மாவீரர் வரிசையிலே மன்னும் வேந்தனிவன்
தக்கவே இடம்பெற்றான் தமிழீழ அன்னையவள்
    தன்சேலை போர்த்துத் தனையனைத் தாங்கினாள்!
மிக்கவே அவன்பணிகள் மீளவும் தொடர்ந்திட
    மேன்மையுறு தீரர்கள் காத்தங்கு நிற்கின்றார்!
அக்கறை கொண்டங்கு இனத்திற்காய் உயிரீய்ந்தோன்
    அகம்நிறைந்த கனவுகள் நிறைவேற உழைத்திடுவோம்!
   
-பவித்திரா-

Reply

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.