
தேசியத்தின் பெரும்தலைவன் சிறப்புக் காலம்
திகழொளியாய் தமிழீழழம் திகழும் காலம்
ஆசியொடு மக்களெலாம் ஆர்க்கும் காலம்
அகிலத்தே தமிழ்தலைவன் அழகுக் காலம்
மூசிவந்த பெரும்பகையை வென்ற காலம்
முத்தமிழிற் கலைவலங்கள் முகிழ்த்த காலம்
பேசிவரும் துறையனைத்தும் பிரபா காலம்
பெருநாடு மலர்ந்துவரப் பிறந்த காலம்!
போரென்றால் போரென்ற சேயார் தன்னை
போர்கொண்டு பதில்சொன்ன தமிழன் வந்தே
கூரீட்டிக் கொலைசெய்த கொடியர் ஆட்சிக்
கூட்டத்தை நின்றெதிர்க்கக் குவியம் கண்டான்
சீரோட்டித் தமிழாய்ந்த நிலத்தில் வந்த
சிதறாக்கும் பெரும்பகையை திகைக்க வைத்து
பாரேட்டில் தமிழீழம் பதிவு செய்தான்
பண்பாட்டு உயர்தலைவன் பிரபா வாழ்க!
தமிழருக்குத் தலைவரென பலபேர் வந்தார்
தாங்கிவரும் பட்டயங்கள் கொண்டு வந்தார்
அமையாத தீர்வுக்கு அசிங்க ஆட்சி
அழிக்கின்ற போதுமவர் அகிம்சை என்றார்
தமிழீழம் என்றெங்கள் நாட்டை மீட்டு
தரணிக்கோர் தமிழ்நாடு தந்தான் என்ற
அமிழ்தான வரலாற்றில் பிரபா வந்தான்
அவனேதான் தமிழருக்கு ஆள வந்தான்!
திறம்படைத்த ஓர்தலைவன் தெளிந்து வந்தான்
தேசடங்கும் போர்ச்சரிதம் தெரியக் கற்றான்
வெறுங்கையாய் எழுந்தவரே வெடிகள் பெற்றார்
விடியலுக்காய் உரமெடுத்த வீரர் வந்தார்
அறம்படைத்த மனுநீதி அகிம்சை கண்ட
அணித்தமிழர் இனம்தன்னை அழிக்கும் ஆட்சி
புறம்படைக்க வைத்தவனே பிரபா என்ற
புலிபடைத்த மாமேதைப் பெரியோன் வாழ்க!
ஐம்பத்து மூன்றாகும் அகவை தன்னில்
அகிலமெலாம் பொன்னூஞ்சல் ஆகு தையா!
தம்பியென நின்றார்த்து தானை பார்த்து
தரணியெலாம் அதிசயங்கள் தளிர்க்கு தையா!
நம்பிக்கைக் கரிகாலன் பிறந்த நாளில்
நாதமொடு நர்த்தனங்கள் நடக்கு தையா
கும்பத்தில் ஏவுகணை கொண்டான் தேசக்
குடியரசுப் பெருந்தலைவன் கொற்றம் வாழ்க!
-புதியபாரதி
Recent comments
18 weeks 9 hours ago
24 weeks 3 days ago
2 years 5 weeks ago
2 years 19 weeks ago
2 years 23 weeks ago
2 years 24 weeks ago
2 years 32 weeks ago
2 years 33 weeks ago
2 years 33 weeks ago
2 years 33 weeks ago