Reply to comment

சிலுவை மனம்

கல்லூரி முடிந்து நான் தங்கியிருக்கும் என் அறைக்குள் நுழைந்த போது என் மேசையில் ஒரு துண்டு காகிதம் என் கண்ணில் படும் படியாக வைக்கப்பட்டிருந்தது.

எப்போதும் நான் கல்லூரி முடிந்து வரும் போது சென்னையில் நான் தங்கியிருந்த வீட்டு வராந்தாவில் யாராவது இருப்பது சாதாரணமான ஒரு நிகழ்வாக இருக்கும்.

ஆனால் கடந்த காலங்கள் போல யாரும் இப்போது என் கண்ணில் தெரிய இருப்பதில்லை.

இவையெல்லாம் எனக்கு ஓர் அபூர்வ நிகழ்வாகவே பட்டது.

கல்லூரி நண்பர்கள் கூட முன்பு போல
என்னோடு நெருங்கிப் பழகுவதைக் குறைத்துக் கொண்டிருப்பது
எனது புலனுக்கு புரியாத ஒன்றல்ல.

இது போன்ற புறக்கணிப்புகள் வேதனைகள்
என் வாழ்வில் காண்பது இன்று நேற்றல்ல.

இலங்கையில் நடந்த கலவரங்களில் அகப்பட்டு
திக்கு தெரியாமல் உயிர் பிழைக்க பெற்றோரோடு
ஓடிய இடங்களிலெல்லாம் நான் பட்ட வதைகளின்
தொடர்களாகவே இது எனக்குப் பட்டது.

அன்று என்அம்மாவும் அப்பாவும்
சின்னவளான என்னைக் காப்பாற்றத் தூக்கிக் கொண்டு
ஓடும் போது எமது வீட்டை தீயிட்டு எரிக்க வந்த
காடையர்கள் கைகளில் அகப்பட்டு என் அண்ணன் போட்ட ஓலம்
என் இதயத்தை விட்டு இன்றும் மறக்க முடியாதது.

அன்று காலையில் அவனைப் பார்த்ததுதான் கடைசி.
பிறகு அவன் முகத்தை நான் பார்க்கவேயில்லை.

அவன் நினைவாக அவனது புகைப்படமொன்றாவது இல்லாததால்
அவன் என் அப்பா போல் இருப்பான் என்று
அம்மா சொல்லக் கேட்டு அவனை என் அப்பா முகத்தில்தான் காண்பேன்.

அம்மாவும் அப்பாவும் அந்தக் கோரக் காட்சியை பார்க்க விடாது
என் கண்களை மறைத்துக் கொண்டதாலோ என்னவோ
சில நேரங்களில் என் மனம் வெதும்பி அழவேண்டிய தருணங்களில் கூட அழுவதற்கு பதில் என் இதயம் இறுகிப் போய் விடுவதை
என்னால் உணர முடிகிறது.

என் மேல் யாரும் அனுதாபப்படுவது கூட எனக்கு உடன்பாடான ஒன்றல்ல. வேதனைகள் ஏற்படும் போது அழுவதற்கு பதில் நான்
யார் மீதாவது எரிந்து விழுவது ஏன் என்பது எனக்கே வியப்பான ஒன்று.

இதற்கு விடை இன்றும் எனக்கு கிடைத்தாக இல்லை.

இந்த பொல்லாத எனது குணமே எனது பெண்மைக்கு
பாதுகாப்பான ஒன்றான போது அதை மாற்றிக் கொள்வது தேவையற்றதாகவே எனக்குப் பட்டது.

இதனால் எனக்குக் கிடைத்த பட்டங்கள் திமிர் பிடித்தவள் ,பெருமைக்காரி கோபக்காரி என்பனவே தவிர வேறெதுவுமில்லை.

என்னோடு மிக நெருக்கமாகப் பழகும் குறிப்பிட்ட சில நண்பர்களுக்கு என்னை பிடித்திருந்தது மட்டுமே எனக்குப் போதுமானதாகப் பட்டது.

எனக்குப் பிடித்ததை மட்டுமே இவர்களோடு கூடபகிர்ந்து கொண்டேன்.

எனக்குப் பிடிக்காதவற்றை எனக்குள்ளேயே
நான் புதைத்துக் கொண்டேன்.

என் மேசையில் இருந்த காகிதம் ஏதோ ஒரு வேதனையைத் தரப் போகிறது என்பது எனக்குத் தெரியும்.

யன்னல் வழி புகும் காற்றுக்கு ஈடு கொடுத்து
மீண்டும் என் கண்ணை உறுத்திக் கொண்டு நின்ற
அந்தக் காகிதம் எனக்கு நல்ல செய்தி சொல்வதாக இருந்திருந்தால்
அது வீட்டிலுள்ள யார் மூலமாவது என் கைக்கு வந்திருக்கும்.

என் புத்தகச் சுமையை இறக்கி விட்டு
வரப் போகும் மனச் சுமையை எதிர் கொள்ள
காகிதத்தை மெதுவாகக் கையிலெடுத்தேன்.

கொழும்பிலுள்ள வீட்டுக்கு போண் எடுக்கவும்
என்ற குறிப்பு என் கண்ணில் குத்தியது.

விடயம் தெளிவற்றதால்
காகிதத்தை மேசையில் வைத்து விட்டு முகத்தைக் கழுவுவதற்காக
பாத்ரூம் பக்கம் போன போது வீட்டில் உள்ளவர்களது பேச்சுக் குரல் விவாதமாக மாறுவது என் காதுகளுக்குள் விழுந்தது.

அதற்குள் என் பெயர் உச்சரிக்கப் பட்டதால்
திறந்த தண்ணீரை நிறுத்தி விட்டு
விவாதத்துக்கு காது கொடுத்தேன்.

சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற
படுகொலை தொடர்பான விவாதமும்
இலங்கையர் மீது ஏற்பட்டிருக்கும் பய உணர்வும்
அவர்களது சம்பாசனையில் தெரியக் கூடியதாக இருந்தது.

இன்று எவர் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாத தன்மையிலான
பய உணர்வொன்று உருவாகியுள்ளதன் காரணமாக
சில வருடங்கள் குடும்பத்தில் ஒருவர் போல்
அவர்களோடு பழகிய என்னிடமே சந்தேகம் கொள்ள இடமாகிவிட்டதை எண்ணி இதயம் கொஞ்சம் வலிக்கவே செய்தது.

நான் முகத்தை கழுவிக் கொள்ளாமலே என் அறைக்குத் திரும்பும் போது என்ன நடந்தாலும் என்னை வெளியேற்ற விட மாட்டேன் என்று கவிதா சண்டை பிடிப்பது என் காதுகளுக்கு பறையாக விழுந்தது.

இப்போது எனக்கு விசயம் ஓரளவுக்கு விளங்கியது.

நான் வீட்டுக்குப் போண் பண்ண அறையை விட்டு வெளியேறினேன்.

தொலைபேசி பூத்திலிருந்து வீட்டுக்கு போண் பண்ணிய போது
அம்மாதான் வீட்டிலிருந்தாள்.

அங்கு நிலமை சரியில்லை. உடனே புறப்பட்டு வா என்று
அவள் பேசிய தோரணை எனக்கு அவள் மிகவும் பயந்து போயிருப்பதைக் காட்டியது.

நான் நிலமையை விளக்க முயன்ற போது ,
அவள் மேலே பேச விடாதபடி
எங்களுக்கு இரண்டு மூன்று பிள்ளைகள் இருந்தால் பரவாயில்லை. இருந்ததில் ஒன்றை கண் முன்னே இழந்தது போதும்.
இருக்கிற உன்னையும் இழப்பதற்கு நாங்கள் தயாராயில்லை என்று கதறியழுத குரலை நிறுத்துவதற்கு ,
நான் இப்பவே புறப்படுகிறேன் என்ற வார்த்தை
முற்றுப் புள்ளியாக அமைந்தது.

அண்ணனின் ஓலம் மீண்டும் என்னை
வீரிட்டுக் கத்த வைத்து விடும் போல என் காதுகளுக்குள் கேட்டது.

எனது அறைக்கு நான் திரும்பிய போது கவிதா எனக்காக என் அறையில் காத்திருந்தாள்.

அவள் கண்கள் அழுது வீங்கியிருந்தது.

அவள் பக்கத்தில் நான் வந்து அமர்ந்த போது
நான் அழுவதற்கு பதில், கவிதா என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள்.

யார் என்ன சொன்னாலும் நான் உன்னைப் போக அனுமதிக்க மாட்டேன். உனக்கு ஏதாவது ஆகும்னா அது எனக்கும் ஆகட்டும்.
யாரோ செய்யிற ஒரு காரியத்துக்கு எல்லாரும் பொறுப்பாகிட முடியாது என்று புலம்ப ஆரம்பித்தாள்.

நடந்து விட்ட ஒரு படுகொலை காரணமாக பல இடங்களில் அப்பாவிகள் கைதாகி துன்புறுத்தப்படுவதன் நிலை புரியாமல் அவள் பேசுவதாகவே எனக்குப்பட்டது.

நான் அவள் மனதை சங்கடப்படுத்த விரும்பாத நிலையில் அது பற்றி பேசாது நான் கொழும்பு போய் வர வேண்டிய விடயத்தை கவிதாவிடம் சொன்னேன்.

அவளது குமுறல் அந்த செய்தியோடு நின்றது.

அவள் என்னை முறைத்துப் பார்த்த பார்வையின்
அர்த்தங்கள் எத்தனை எத்தனை என்பதை
என்னால் கற்பனை பண்ண முடியாமலிருக்கிறேன்.

சிலவேளை என்னையும் சந்தேகிக்கிறாளா அல்லது
பயந்தவளாக எண்ணுகிறாளா அல்லது
செய்வதறியாது நான் இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன் என்று எண்ணுகிறாளா என்று பலவாறாக எண்ணத் தோன்றியது.

இலங்கையிலிருந்து சென்னை வந்து வாழும்
எனது வாழ்வின் நிலையோ, பின்ணணிகளோ இவர்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை.

ஊரிலிருந்து பணம் வருவதால்
மற்றவர்களைப் போல நானும் ஒரு பணக்காரப் பெண்ணென்று கருதுவதில் தப்பேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

எமக்காக என்று மிச்சம் பிடித்து
நல்லதொரு மாப்பிள்ளை கையில் பிடித்துக் கொடுப்பதற்காகான சீதனத்துக்காக சிறுகச் சிறுக சேமித்த பணத்தை எல்லாம்
இப்போது என் பெற்றோர்
நான் வாழ்வதற்காகவே என்று செலவிட்டிருக்கிறார்கள்.

பிள்ளை முதலில் உயிரோடு இருந்தால்தானே
வரதட்சனை பணம் கொடுக்க முடியும்.
முதலில் எங்காவது போய் இவள் வாழட்டும் என்று அப்பா அம்மாவோடு வாதிட்டு என்னை சென்னைக்கு அழைத்து வந்துபடிக்க வைக்கத் துணிந்ததையும் அதை அம்மா மறு பேச்சே இல்லாமல் ஏற்றுக் கொண்டதையும் என்னால் மறக்க முடியவில்லை.

ஆனால் இன்று அதே பெற்றோர்கள் உடனே திரும்பி இலங்கைக்கு வா எனும் அணர்த்தத்தின் காரணத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடியாமலில்லை.

இலங்கையில் ஒரு கலவரம் நிகழாமல் இருந்திருந்தால் இவர்களைப் போலவே எங்களையும் நாட்டை விட்டென்ன,
வீட்டை விட்டுக் கூட வெளியில் வாழ
எமது பெற்றோர்கள் சம்மதித்திருக்க மாட்டார்கள்.

இன்றைய இலங்கை தமிழர் நிலையே வேறு.

எங்கோ போய் உயிர் பிழைத்து வாழ்ந்தால் போதும் என்பதே பலரது வேண்டுதலாகவும் தேவையாகவும் இருக்கிறது.

வாழும் நாட்டில் நிம்மதியில்லை.
இப்போது வாழ வந்த நாடுகளிலும் வழிகள் தடைப்படுவது
வேதனையைத் தந்தது.

நடைபெற்ற நிகழ்வுகளின் நியாய அநியாயங்களை நியாயப்படுத்திக் கொண்டிருக்கவோ அவைகளுக்காக போராட வேண்டிய துணிவோ எனக்கிருப்பதாகத் தோணவில்லை.

பத்திரிகைச் செய்திகளும் , அரசியல்வாதிகளின் பேச்சுகளும் ,
போலீசாரின் நடைவடிக்கைகளும், சாதாரண மக்களின் பார்வைகளும் தொடர்ந்து இங்கு வாழ முடியாது என்ற நிலையை உருவாக்கியிருந்ததை நான் உணர்ந்தேயிருந்தேன்.

இவர்களது பார்வையை விட நெருக்கிப் பழகிவர்களது பார்வையும் தூரமும் என்னைப் பாதித்தேயிருந்தது.

எனவே கவிதாவுடன் இது பற்றி வாதிடக் கூடாதென்ற முடிவுக்கு வந்திருந்தேன்.

எனக்காக வேறொருவர் பாதிப்படைவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கவிதாவிடம் நான் போயே ஆகவேண்டும். என் அம்மாவும் அப்பாவும் பயந்து போயிருக்கிறார்கள். திரும்பி நிச்சயம் சென்னைக்கு வருவேன்
என்று அவளிடம் சொல்வது பொய்யாக எனக்குள் உறைத்தாலும் நான் அந்தப் பொய்யை உண்மை போல் சொன்ன போது என் இதயத்தில் வலியைடுத்ததை மறைக்க நான் பட்ட வேதனை எனக்கு மட்டுமே தெரியும்.

நட்பின் ஆழத்தை என் இதயம் உணர்ந்த முதற் கணம் அதுதான் என்று நினைக்கிறேன்.

பாசத்துக்கும் நட்புக்கும் உள்ள தூரம் அதிகமில்லை என்றே தோன்றியது.
சென்னைக்கு வந்த காலம் தொட்டு என்னோடு ஒரு உறவாக வாழ்ந்தவள் கவிதா மட்டுமே.

எமக்குள் ஆயிரம் வேற்றுமைகள் இருந்தும் கருத்து முரண்பாடுகளோடு வாழ்வதற்கு நாம் பழகிய அல்லது எம்மைப் பழக்கிக் கொண்ட விதம் அதிசயமானது , அலாதியானது.

ஓரு காதலன் கிடைத்து விட்டால் அல்லது திருமணமாகி விட்டால் நமக்குள் உள்ள உறவில் விரிசல் அல்லது தூரம் ஏற்பட்டு விடும் என்பதே அவளது கருத்தாக இருந்தது.

அது கூட இப்படியான ஒரு பிரிவை உருவாக்காது என்று சொல்ல
என் வாய் முயன்ற போது , அதை வேறொரு பேச்சுக்கு மாற்ற வேறெதையோ தேடி, அடைப்புகளை நிரப்ப வார்த்தைகளைத் தேடிய போது நான் பொய் பேசும் நிலைக்குத் தள்ளப் பட்டுக் கொண்டிருக்கிறேன் என்றே தோன்றியது.

என்னை சென்னைக்கு அழைத்துக் கொண்டு வந்து தங்கிய போது எமக்கு உதவிய இந்தியத் தமிழர்களைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

இலங்கை தமிழர்களுக்கான உண்ணாவிரதங்களும் போராட்டங்களும் பகிரங்கமாக நடை பெற்ற காலம் என் மனக் கண்களுக்குள் வந்து போனது.

அங்கு நடைபெறும் தமிழர் போராட்டத்தை நியாயப் படுத்திப் பேசுவோர் வழிதான் எமக்கு இலங்கையில் அநியாயம் நடக்கிறதென்றே நான் தெரிந்து கொண்டேன்.

அது கூடத் தெரியாத பருவத்தில்தான் நான் வெளியேறினேன்.

என் பெற்றோர் ,
எனக்கு விபரம் தெரியும் வரை என்னோடு சென்னையில் தங்கியிருந்த போது நெருக்கமானவர்கள்தான் கவிதா குடும்பத்தினர்.
இவர்கள் எமக்குள் உறவுக்காரர்கள் போல் பழகத் தொடங்கிய பின்னர்தான் என் பெற்றோர் இவர்களை நம்பி என்னைத் தனியாக கவிதா குடும்பத்தினரோடு விட்டுச் செல்லத் துணிந்தனர்.

அதற்கு மிக முக்கிய காரணம் கவிதாவும் நானும் ஒன்றாகப் படித்ததும் ஒற்றுமையாக உறவாடியதும் நல் நடத்தையும் எமது நட்புமே என்பது அனைவரும் அறிந்தது.

இவர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் போயிருந்தால் நிச்சயம் அவர்கள் போயே இருக்க மாட்டார்கள்.

நான் நேற்று வரை அவர்கள் வீட்டுப் பிள்ளையாகவே கருதப்பட்டேன்.

வேற்றுமையே தெரியாத அளவு அவர்களோடு வாழ்ந்த வாழ்கை
எமக்கு சம்பந்தமேயில்லாத ஒரு நிகழ்வால் புற்று நோய் போல் புரையோடிப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.

அதுவே
நேற்று வரையில்லாத தூரமொன்றை
இப்போது உருவாகியிருப்பதை என்னால் உணர முடிந்தது.

எனக்கு ஒன்று மட்டும் உறுதியாகப் பட்டது.

அது என் பெற்றோர் என்னை சென்னைக்கு மீண்டும் திருப்பி அனுப்ப மாட்டார்கள் என்பதே.

எந்தக் காரணம் கொண்டும் என்னை இழப்பதற்கு அவர்கள் தயாரானவர்களில்லை.
ஆனால் அடுத்து எடுக்கப் போகும் அவர்களது முடிவுதான் என்ன என்பதை ஊகிக்க முடியாமலிருந்தேன்.

நான் விடுமுறைக்காக கொழும்புக்குப் போகும் போதெல்லாம் ஓரு சில பொருட்களை எடுத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்ட நான்,
எனக்கு முக்கியமாகத் தேவைப் பட்டவவை அனைத்தையும் தேர்வு செய்து எடுத்துப் போக வேண்டுமென்ற முடிவுக்கு வந்தேன்.

மிகுதியான அனைத்தும் கவிதாவுக்கு பயன் படும் பொருட்கள் என்ற விதத்தில் அவற்றை விட்டுச் செல்வதென்ற முடிவு எனக்கு சரியாகப்பட்டது.
அவற்றில் என் கைகளில் சிறைப்பட்டது நான் சென்னையில் வாழ்ந்த கால புகைப்பட ஆல்பமே.

அதற்குஅடுத்த தேர்வுகளாகவே மற்றப் பொருட்கள் என் மனதுக்குப் பட்டது.
எனது பிரயாணப் பொதிகளுக்குள் என் பொருட்களை நிறைத்தேன்.

கவிதாவின் அப்பா எனது பயணத்துக்கான விமான டிக்கட்டை எடுத்துக் கொண்டு என் அறைக்குள் நுழைந்த போது அவரது முகம் வாடியிருப்பதை என்னால் உணர முடிந்தது.

அப்பாகிட்ட பேசினேன் லீனா.
நாளைக்கு பிளைட் பயணத்துக்கான டிக்கட் புக் பண்ணிட்டேன் என்ற கூறிய போது , கவிதாவின் தந்தை முகத்தில் என்றுமே இருக்கும் சிரிப்பும், பாசமும் ,நகைச்சுவை உணர்வுகளும் மரணித்திருப்பதை என்னால் உணர முடிந்தது.

கவிதா பேசாமல் யன்னலை நோக்கிய வண்ணம் அமர்ந்திருந்தாள்.

தேவையானவற்றை அடுக்கிப் பெட்டிக்குள் வைத்து விட்டு குளித்து விட்டுத் திரும்பிய போது கவிதா என் அறையை விட்டுப் போயிருந்தாள்.
நான் படுக்கையில் சாய்ந்தேன்.

தூக்கம் வர மறுத்தது.

சென்னையில்வாழ்ந்த காலங்கள் மனக் கண்ணுக்குள் வந்து போன போது வதையாகவே இருந்தது.

காலையில் அறைக் கதவு திறக்கப்படுவதையும் கவிதாவின் தாய் காப்பியை என் கட்டிலருகே வைத்துச் செல்வதையும் கண் திறக்காமலே கண்டு கொண்டேன்.

அதைக் குடிக்க மனமில்லாமல் மறு பக்கம் திரும்பிப் படுத்த போது கவிதா அறைக்குள் நுழைந்து என் பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.

அவளோ நானோ பேசிக் கொள்ளவில்லை.

யாரும் முகம் பாராமலே படுத்திருந்தோம்.

உறவொன்றின் பிரிவு
எப்படி ஒருவரையொருவர் பேசாமல் வாட்டி வதைக்கிறது என்று உணர்ந்த முதல் கணம் இதுதான் எனக்கு.

சந்திப்புகள் எதிர்பாராதவை
பிரிவுகள் நிரந்தரமானவை என்பதை எண்ணும் போது
இதயம் நின்று துடித்தது.
நான் மறுபக்கம் திரும்பிய போது கவிதா என்னைக் கட்டித் தழுவிக் கொண்டாள்.

அவளது முகம் என் மார்புக்குள் புதைந்து நின்ற போது
என்னை ஈரமாக்கிய அவளது கண்ணீர் என்னைக் கரைய வைத்து,
என்னையும் விம்மி அழ வைத்தது.

இதுவரை கட்டுப்பாட்டுக்குள் கட்டி வைத்திருந்திருந்த மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் அவளைக் கட்டிக் கொண்டு விம்மி அழுதேன்.

வார்த்தைகளை விட மௌனத்துக்குள்ள பாதிப்பு கொடியது என்பதை விட விம்மலுக்குள் வெளிப்படும் பெருமூச்சு எம்மை சுட்டெரித்தது.

நகர்ந்து கொண்டிருந்த நேரத்தை உணர்த்தியதே
கவிதாவின் தந்தையினதும், தாயினதும் பேச்சுக் குரல்கள்தான்.

விழித்தெழுவதற்கு மட்டுமல்ல பிரிவதற்குமான நேரம் வந்து விட்டது.

யேசு சிலுவையை சுமப்பதற்கு முன் இறைவனிடம்
ஏன் எனக்கு இப்படி நடக்க வேண்டும்என்று கதறிய போது
யேசுவின் உடல் இரத்த வியர்வையால்
எப்படி நனைந்திருக்கும், நடுக்கியிருக்கும் என்பதை அனுபத்தில் கண்ட கணம் அதுதான்.

கவிதா வீட்டாரிடம் விடை பெற்ற போது கவிதாவின் தாய் பேச வார்த்தைகளின்றித் தவித்தாள்.

அவள் என்னை கட்டிப் பிடித்து இறகத் தழுவி விலகிய போது அவள் கண்களில் கண்ணீர் தாரையாக வழிந்து ஓடியது.

நல்லாயிருப்பேம்மா. . . . . . என்ற வார்த்தைகளுக்கு மேல் பேச முடியாமல் அவள் வார்த்தைகள் தடையானது.

அந்த வார்த்தையே நான் திரும்பி வரப்போவதில்லை என்பதை எனக்கு உணர்த்தியது.

வாசலில் டாக்சியொன்று வந்து நின்ற போது
கவிதா புறப்படு ஏர்போட்டுக்கு போய் வர்ரதுக்கு என்று கவிதாவின் அப்பா சொன்னது கடைசியாக என்னை வழியனுப்ப கவிதாவையும் அழைத்துச் செல்வதென்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார் என்பதாகவே பட்டது.

நானும் கவிதாவும் சாமான்களை கொண்டு வந்த போது டாக்சி டிரைவர் அவற்றை வாங்கி டிக்கிக்குள் வைத்து மூடினார்.

கவிதாவின் அப்பா கேட்டைப் பூட்டி விட்டு முன் ஆசனத்தில் அமர
நானும் கவிதாவும் பின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டோம்.

டாக்சி மெதுவாக நகரத் தொடங்கியது

கடைசியாக
நான் வாழ்ந்த இடத்தை ஒரு முறை இறுதியாகத் திரும்பிப் பார்த்த போது
கதவோரத்தில் நின்றுசேலைத் தலைப்பால் கண்ணைத் துடைத்துக் கொள்ளும் கவிதாவின் தாயை என் கலங்கிய கண்களுக்குள் தெரியவிடாமல் பண்ணுவதுவற்காகவென்றே டாக்சி வேகமாக முன்னேறியது.

சென்னை விமான நிலையத்தில்
பொதிகளை ஒப்படைத்து விட்டு கவிதாவின் அப்பா காலைத் தொட்டு நான் வணங்கிய போது
இது என்ன கொடுமையோ ஒரு தீர்வு கிடைக்கிற வரைக்கும் நமக்கெல்லாம் நிம்மதியே இருக்காது என்ற வார்த்தைகள் அவராலும் என்னைப்பிரிய முடியவில்லை என்பதை உணர்த்தியது.

கவிதாவை கட்டி அணைத்துக் கொண்டேன் நீ திரும்பி வருவியாடா என்ற வார்த்தைகளுக்கு பதில் சொல்வதற்கு தெரியாமல் போனதும் போண் பண்ணுறேன், வந்திடுவேன் கவலைப்படாதே என்று கூறும் போதே
விமான நிலையத்துக்குள் செல்ல வேண்டிய கடைசி அறிவிப்பு கேட்டது.

இனியும் பேசினால் உன் இதயம்வெடித்து விடும் என்பதற்கான
அறிவிப்பாய் அதைக் கருதினேன்.

நான் உள்ளே செல்வதையே கவிதா பார்த்துக் கொண்டிருப்பது என் புலனுக்கு பட்டது
நான் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு லேசாகத் திரும்பி கையசைத்த போதுஅவள் தந்தையைக்கட்டிப் பிடித்துக் கொண்டுஅழுவது தெரிந்தது
அதை தொடர்ந்துபார்க்க முடியாதவளாய்திரும்பிப் பார்க்காமல் நடக்கத் தொடங்கினேன்.

விமானம்
சென்னையை விட்டு மட்டுமல்ல
சேர்ந்து வாழ்ந்த நட்புகளையும் பிரித்த வெறியோடு
வானத்தை வசமாக்கியபடி முகில்களுக்குள் மூழ்கிகிப் போனது.

விமானம்
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது
வரண்ட என் இதயம் போலவே இலங்கையும் இருண்டு போய் இருந்தது.

விமானத்தில் ஏறி அமர்ந்து கண்களை மூடிய நான் விமானம் தரையிறங்கப் போகிறது என்ற அறிவித்தல் கேட்டு விழித்துப் பார்த்த போதுதான் என்னோடு பயணம் செய்தவர்கள் யார் யார் என்பதையே கண்டேன்.

விமான நிலையத்தை விட்டு வெளியேறிய போது என் அப்பா எனக்காக வெளியில் காத்திருந்தார்

அவரைப் பார்த்ததும் ஓடிப் போய் கட்டிக் கொண்டு
கதற வேண்டும் போல இருந்தது.
அடக்கிக் கொண்டேன்.
அவரும்என் நிலைஉணர்ந்தவராய், என் பொதிகளை வாங்கிக்காருக்குள் வைத்தார்

நான் கதவைத்திறந்து கொண்டு ஏறியமர்ந்ததும்
அப்பா காரை ஓட்டத் தொடங்கினார்.

வீடு வரை நாங்கள் எதுவும் பேசவில்லை

வீட்டு வராந்தாவில் கார் வந்து நின்றதும் வீட்டுக்குள் நுழைந்த நான்
நேராக என் அறைக்குள் புகுந்துகதவைத் தாளிட்டுக் கொண்டேன்

அப்பா வீட்டுக்குள் வந்ததும் கவிதாவின் அப்பாவுடன் போணில் நான் வந்து சேர்ந்த விடயம் பற்றிப் பேசுவது கேட்டது

பின்னர் அம்மாவும் அப்பாவும் தொடர்ந்து சாப்பாட்டு அறையிலிருந்து பேசிக் கொண்டிருந்தார்கள் .

அம்மா கதவைத் திறந்து கொண்டு வந்து பார்த்த போது நான் தூங்குவது போல இருந்தேன் என்னை எழுப்பாமலே கதவை தாழிட்டு விட்டுச் சென்றாள்.

நான் எவ்வளவு நேரம் அப்படியே இருந்தேனோ தெரியாது
காலையில் வாகனங்களின் இரைச்சல் கேட்டு விழித்துக் கொண்ட போது இரவு அயர்ந்து தூங்கியிருப்பதை உணரக் கூடியதாக இருந்தது.

கட்டிலுக்கு அருகே வைக்கப்பட்டிருந்த காப்பிக் கப்பைப் பார்த்த போது அம்மா அறைக்குள் வந்து போயிருப்பதுதெரிந்தது

காப்பியைக் கையிலெடுத்துக் கொண்டு சமையலறைக்கு வந்த போது
அம்மா காலைச் சாப்பாட்டை தயார் செய்து கொண்டிருந்தார்.

அப்பா வெளி வராந்தாவில் உள்ளசாய்மானக் கதிரையில் சாய்ந்தவாறு அன்றைய தினசரியை புரட்டிப்பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆறிப் போன காப்பியை சாப்பாட்டு மேசை மீதுவைத்து விட்டு குளியலறைக்குள் சென்றுமுகத்தை அலம்பித் திரும்பிவந்த போது அம்மா புதிதாக காப்பிபோட்டு வைத்திருந்தாள்

நான்உட்கார்ந்து அருந்த ஆரம்பித்த போது
என் பக்கத்தில் வந்த அம்மா என் தலையைத் தடவிக்கொடுத்து பெருமூச்சொன்றை விட்டாள்.

நான் அதைசட்டை செய்யாதவளாக தொடர்ந்தும் காப்பியை உறிஞ்சிக் கொண்டிருந்தேன்.

அந்நேரம் தொலைபேசி அலறியது , போய் எடுத்த அப்பா
இரவே வந்திட்டா இன்னும் சரியா அவளோட கதைக்க(பேச) இல்ல ,நாங்க சொல்றதை எங்கட பிள்ள தட்டாது நாங்க அவளுக்கு என்ன கெட்டது பண்ணவா போறோம். நாளைக்கு வாங்கோவன் என்று கூறிப் போனை வைத்து விட்டு மீண்டும் வராந்தாப் பக்கம் போனார்.

அம்மா முகத்தைப் பார்த்தேன்

இங்க எனக்குத் தெரியாம என்ன நடக்குது என்றேன்.

பாரு புள்ள இங்கதான் பிரச்சனையெண்டு அங்க அனுப்பினா அங்கயும் பிரச்சினைஉன்னை என்னதான் படிக்க வச்சாலும், கடைசியில நல்லவன் ஒருவன் கையில பிடிச்சுக் குடுத்துட்டு மூச்சு விடுறதுக்கு இனி முன்ன இருந்தது போல ஒரு காலம் பிறக்கும் எண்டு எங்களால சொல்ல ஏலாது. அதுதான் சுவிசிலயிருக்கிற மாமாவோட மகன் சுரேசுக்கு உன்னை கட்டிக் குடுக்க இருக்கிறம். அங்க அவன் நல்லா சம்பாதிக்கிறான், போன நாலு அஞ்சு வருசத்துக்குள்ள ஓரு பெரிய வீடு கட்டியிருக்கிறான் இன்னும் அங்கய காட் (வதிவிட அனுமதி)கிடைக்கயில்லையாம் . இன்னுமொரு 2-3 வருசத்தில கிடைச்சிடுமாம். அதுவரைக்கும் பொறுக்க ஏலாது. அதால ஏஜன்சி மூலம் அங்க அனுப்பி வைக்கிறது எண்டு முடிவெடுத்த்திருக்கிறம் என்று அம்மா சொல்லிக் கொண்டு போன போதுநான் பேசாமல் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.

ஆடு மாடுகளை விற்பது போல நானும் விற்கப்படுகிறேனோ என்று எண்ணத் தோன்றியது.

அஜுவன்

Reply

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.