ஊர்ப்புதினம்

தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை தொல்லியல் திணைக்களத்திற்கு இல்லை - பன்னீர்செல்வம் சிறீகாந்த்

1 month 1 week ago

24 Sep, 2025 | 05:09 PM

image

தொல்லியல் திணைக்கள ஆளணி நிரப்பப்படும் போது திட்டமிட்ட முறையில் தமிழ் பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்ற அதேவேளை தொல்லியல் திணைக்களம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் பன்னீர்செல்வம் சிறீகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எமது பாரம்பரியங்களையும் தொன்மையையும் பாதுகாப்பதற்கு மரபுரிமை சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதனை பாதுகாக்க வேண்டிய கடப்பாடினை உடைய தொல்லியல் திணைக்களம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை

கடந்த காலங்களில் ஆட்சியில் பங்களித்து எமது மக்களின் அபிலாசைகளுக்காக மானசீகமாக உழைக்கின்ற தரப்பு என்ற அடிப்படையில் எமக்கும் தொல்லியல் திணைக்களம் தொடர்பாக விமர்சனங்கள் இருக்கின்றன.

தொல்லியல் திணைக்கள ஆளணி நிரப்பப்படும் போது திட்டமிட்ட முறையில் தமிழ் பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்றனர்.

இதுதொடர்பாக கடந்த காலங்களில் எமது செயலாளர் நாயகம் சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற சந்தர்ப்பங்களில் எதிர்காலத்தில் தவறு நிவர்த்திக்கப்படும் என்று உறுதியளிக்கின்ற போதிலும், இதுவரை தவறுகள் நிவர்த்திக்கப்படவில்லை.

இவை, தொல்லியல் திணைக்களத்தில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் இருப்பதனையே வெளிப்படுத்துகின்றது.

இவ்வாறான சூழலில், எமது தாயக பிரதேசத்தில் தமிழ் மக்களின் பூர்வீகத்தை பேணிப் பாதுகாக்கும் வகையில், சிதைவடைந்த சங்கிலியன் சிலை புனரமைக்கப்பட்டதுடன், யாழ் மணிக்கூட்டு கோபுரத்தினை சுற்றி தமிழ் மன்னர் களின் சிலைகள், தனிநாயகம் அடிகளாருக்கு சிலை, யாழ் பண்ணையில் தமிழ் மங்கையின் சிலை என்று பல உருவாக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, எமது மரபுரிமை சின்னங்களை அழிப்பதில் சில கோடாரிக் காம்புகளும் பின்னணியில் செயற்படுகின்றன என்பதுதான வேதனையான விடயம்.

குறிப்பாக, இந்தப் பிரதேசத்தில் மாறி மாறி அதிகாரத்திற்கு வருகின்ற தரப்புக்களுடன் தனக்கு உறவு இருப்பதாக வெளிப்படுத்தி தன்னுடைய வர்த்தகத்தினை வளப்படுத்துவதில் விண்ணாதி விண்ணனான ஒரு வர்த்தகர், மந்திரிமனை அழிவிற்கும் காரணமாக இருக்கின்றார்.

மந்திரிமனை வளாகத்தில் நீண்டகாலமாக காணப்படுகின்ற குறித்த வர்த்தகரின் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்களினால் ஏற்படும் அதிர்வுகளும் மந்திரிமனை அழிவிற்கு காரணமாக இருக்கின்றது என்று பல வருடங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

வடக்கு மாகாண சபையிலும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. எனினும் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் உள்நோக்கம் காரணமாக இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, ஊழல் அற்ற ஆட்சி, அனைவருக்கும் சமத்துவமான எதிர்காலம் போன்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்ற தற்போதைய அரசாங்கம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதற்கு, காணப்படும் தடைகள் மற்றும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் தொடர்பாக அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/225975

ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடம் இலங்கை

1 month 1 week ago

உலகளாவிய பயண இதழான டைம் அவுட், 2025 ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடமாக இலங்கையை தரவரிசைப்படுத்தியுள்ளது, இது அந்த மாதத்திற்கான சிறந்த பயண இடங்களின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டது.

டைம் அவுட் இலங்கையை அதன் வெப்பமண்டல காலநிலை, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகுக்காகப் பாராட்டியதுடன், இப்பண்புகள் ஒக்டோபரில் பயணிகளுக்கு ஏற்ற இடமாக இலங்கையை அமைப்பதாக கூறியுள்ளது. தங்க நிறக் கடற்கரைகள் மற்றும் மலைநாட்டு நடைபயணங்கள் முதல் பண்டைய கட்டிடங்கள் மற்றும் வனவிலங்கு சஃபாரிகள் வரை, இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்தையும் வழங்குவதாக சிறப்பிக்கப்பட்டது.

இலையுதிர் கால வண்ணங்கள் மற்றும் பருவகால விழாக்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இலங்கையைத் தொடர்ந்து துருக்கி மற்றும் நியூ மெக்ஸிகோ ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஸ்பெயினில் உள்ள வலென்சியா, நியூயோர்க் நகரம், பிலிப்பைன்ஸ், பூட்டான், பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ருமேனியாவில் உள்ள டிமிசோரா, சான் பிரான்சிஸ்கோ மற்றும் நமீபியா ஆகியவை இதில் அடங்கும்.

டைம் அவுட்டின் படி, இந்த இடங்கள் அவற்றின் பருவகால வசீகரம், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் ஒக்டோபரில் சிறப்பாக அனுபவிக்கக்கூடிய தனித்துவமான பயண அனுபவங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. 

Tamilmirror Online || ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடம் இலங்கை

கீரைப்பிடி 200 ரூபா

1 month 1 week ago


326418021.jpg

யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன்

கீரைப்பிடி 200 ரூபா

மழை காரணமாக கீரைச் செய்கை அழிவடைந்துள்ளதால், சந்தைகளில் கீரைப்பிடியின் விலை 200 ரூபாவைக் கடந்துள்ளது. யாழ். மாவட்டத்தில் கடந்தவாரம் பெய்த மழை காரணமாக கீரைச் செய்கை அழிவடைந்துள்ளது. அறுவடைக்குத் தயாராக இருந்த கீரை வெள்ளத்தில் மூழ்கி அழிவடைந்துள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தைகளில் கீரைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், கீரைப்பிடி ஒன்றின் விலை 200 ரூபாவைக் கடந்துள்ளது.

கீரைப்பிடி 200 ரூபா

இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை

1 month 1 week ago

Published By: Vishnu

24 Sep, 2025 | 07:06 AM

image

இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான புதிய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைத் தர உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிருந்து கட்டுநாயக்க வரை ஆரம்பிக்கப்பட உள்ள புதிய விமான சேவை தொடர்பில் செவ்வாய்க்கிழமை (23) தனது உத்தியோகபூர்வ முகபுத்தக தளத்தில் பதிவொன்றையிட்டு இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.

அப்பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான (IZ) – 639 என்ற விமானம் இன்று முதல் செவ்வாய்க்கிழமை தோறும் பிற்பகல் 6.30 மணிக்கு டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணிக்க உள்ளது. அதற்கமைய இன்று பயணமான விமானம் புதன்கிழமை காலை 6.15 மணியளவில் நாட்டை வந்தடைய உள்ளது.

ஓமான் மற்றும் மாலைத்தீவின் வான் பரப்புகளில் இஸ்ரேல் விமானங்கள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த விமானம் சீஷெல்ஸ் வழியாக கொழும்பை வந்தடைய  உள்ளது. பின்னர் மீண்டும் டெல் அவிவ் நோக்கிப் புறப்படும். இப்பயணத்துக்கு சுமார் 9.15 மணித்தியாளங்கள் ஆகக் கூடும்.  அதற்கமைய புதன்கிழமை (24) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இரவு 22.30 மணியளவில் பயணிக்கவுள்ள விமானம் மறுநாள் காலை (25) 5.30 மணியளவில் டெல் அவிவ் விமான நிலையத்தை வந்தடையும்.

இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதை பிரதான நோக்கமாக கொண்டு மேற்படி விமான சேவை வாரத்திற்கு ஒரு முறை செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை | Virakesari.lk

நாட்டில் நாளாந்தம் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் பதிவு ; 3 பேர் உயிரிழப்பு - தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தகவல்

1 month 1 week ago

24 Sep, 2025 | 03:14 PM

image

(செ.சுபதர்ஷனி)

கடந்த 2022 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 28 சதவீதமானோர் மார்பகப்புற்று நோயாளர்களாவர். அந்தவகையில் நாளாந்தம் சுமார்  15 மார்பகப்புற்று நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதோடு துரதிஷ்டவசமாக நாளாந்தம் 3 பேர் மார்பகப்புற்றுநோயால் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனுஷ்டிக்கப்பட உள்ள  மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புதன்கிழமை (24) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாரிய சுகாதார பிரச்சினையாக உள்ள மார்பகப்புற்று நோய் தொடர்பில் ஒக்டோபர் மாதம் முழுவதும் பரவலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.  மார்பகப்புற்றுநோய் தொடர்பில் வீன் அச்சம் கொள்ளத் தேவையில்லை நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சைகளை பெறுவதன் மூலம் நோயை முழுமையாக குணப்படுத்தலாம். எனினும் நாட்டில்  நோய் நிலைமையின் பிந்திய நிலையிலேயே மார்பக புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவது வருத்தத்துக்குரிய விடயமாக உள்ளது.

இறுதியாக கிடைக்கப்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான சுகாதார தரவுகளுக்கமைய நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 28 சதவீதமானோர் அதாவது 5477 பேர் பெண் மார்பகப்புற்று நோயாளர்கள் என தெரியவந்துள்ளது.  நோயின் பிந்திய நிலையில் சிகிச்சையளிப்பது சிக்கலான விடயமாகும். இலங்கையில் வருடாந்தம் சுமார் 15,500 புற்றுநோயாளர்கள் மரணிக்கின்றனர். 2022 ஆம் ஆண்டு மாத்திரம் 15245 பேர் அவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் அவ்வாறு மரணித்தவர்களில் 798 பேர் மார்பகப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். 

நாடளாவிய ரீதியில் நாளாந்தம் 15 மார்பகப்புற்றுநோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதுடன்,   3 பேர் மரணிப்பதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையில் மார்பகப்புற்றுநோய் தொடர்பில் தெளிவூட்டுவதற்காக  ஒக்டோபர்    மாதம் 11ஆம் திகதி எவலொக்சிட்டி மாலில் விசேட கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் விசேட வைத்தியநிபுணர்களும் நோய் தொடர்பில் மேலதிக விழிப்புணர்வுகளை வழங்க உள்ளனர் என்றார்.

இது தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் ஹசரெலி பிரனாந்து தெரிவிக்கையில்,

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலகளாவிய சுகாதார தரவுகளுக்கமைய 2022 ஆம் ஆண்டு உலக அளவில் 2.3 மில்லியன் பெண் மார்பகப்புற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 6 இலட்சத்து 70 ஆயிரம் மரணங்களும் சம்பவித்த உள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் வருடாந்தம் மார்பகப்புற்றுநோய் காரணமாக 8000 மரணங்கள்  சம்பவிக்கின்றன. ஆகையால் அனைவரும் நோய் அவதானம் மற்றும் நோய் நிலையின் ஆரம்ப அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியம்.

பொதுவாக அனைத்து பெண்களுக்கு மார்பகப்புற்றுநோய் ஏற்படக் கூடிய அவதானம் உள்ளது. எனினும் சில சமயங்களில் ஆண்களுக்கும் மார்பகப்புற்றுநோய் ஏற்படலாம். இது பாரதூரமான விடயமாகும். புற்றுநோய் கலங்கள் ஆண்களின் மார்பு பகுதியை நேரடியாக தாக்குவதால் உயிரிழப்பு ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளன. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள். 12 வயதுக்கு முதல் பூப்பெய்தியவர்கள், பிள்ளை பெறாத தாய்மார், உடல் பருமனானவர்கள், புகைத்தல் மற்றும் மது அருந்துவோர் ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம் என்றார்.

 

நாட்டில் நாளாந்தம் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் பதிவு ; 3 பேர் உயிரிழப்பு - தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தகவல் | Virakesari.lk

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய பயணம்......

1 month 1 week ago

24 Sep, 2025 | 03:07 PM

image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது வணிக துறையின் பங்குதாரர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைத்து ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது, கப்பல் மேலாண்மையை மேம்படுத்துதல், வருவாய் வளர்ச்சியை ஊக்குவித்தல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல், திறமை மேம்பாடு, நிலைத்தன்மையை மேம்படுத்துதல், செலவு சீரமைப்பு மற்றும் கடனை மறுசீரமைத்தல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் இன்ஜின், இயந்திரங்கள்  மற்றும் உதிரிப்பாகங்களின் பற்றாக்குறை இருந்தபோதிலும்,  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது 2024 ஆம் ஆண்டில் தங்களது சேவைகளை  69 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக மேம்படுத்தியுள்ளது. 

இஞ்சின் கிடைக்காத காரணத்தினால் நீண்ட காலமாக இயங்காமல் இருந்த இரண்டு விமானங்கள் இப்போது சேவைக்கு திரும்பியுள்ளன. மூன்றாவது விமானம் அடுத்த ஆண்டு முதல் சேவைக்கு திரும்பவுள்ளத.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது கடந்த ஆண்டில் தனது வலையமைப்பை சீரமைத்தல்,  டிஜிட்டல் விற்பனை தளங்களை சீரமைத்தல், வருவாய் வளர்ச்சிக்கு வழிவகுத்தலில் அதிக கவனம் செலுத்தியது.

2025/26 நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வருவாய் 10 சதவீதமாக அதிகரித்தது மற்றும் பயணிகள் எண்ணிக்கை 22 சதவீதமாக உயர்வடைந்தது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளின் சௌகரியத்திற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும்  பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுது. 

இந்த முயற்சிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்துள்ளன.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின்  ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் விமான நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும். 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது கடன் மறுசீரமைப்பு,  உலகளாவிய நிலைத்தன்மை நடைமுறைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் எதிர்கால பயணிகளுக்கான தடையற்ற அனுபவங்களை வழங்க தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றின் மூலம் நிதி ஸ்திரத்தன்மையை அடைவதில் கவனம் செலுத்தும்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய பயணம்...... | Virakesari.lk

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்தியமீனவர்கள் 7 பேரும் விடுதலை!

1 month 1 week ago

24 Sep, 2025 | 05:04 PM

image

கடந்த மாதம் 13ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07  இராமேஸ்வரம் மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்ய யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் (ஓகஸ்ற்) 13 ஆம் திகதி நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 07 தமிழக மீனவர்களும் இன்று புதன்கிழமை (24) யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்னர்.

இதன்போதே அவர்கள் அனைவரும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்படனர்.

6 வருடங்கள் ஒத்திவைக்கப்பட 2 வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையுடன் 7 மீனவர்களையும் விடுவித்து ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.

அத்துடன் ஓகஸ்ற் மாதம் 29 ஆம் திகதி நெடுந்தீவு கடலில் மீன்பிடி உபகரணங்கள் ஏதும் இல்லாமல் கைதுசெய்யப்பட்டு ஊர்காவற்றுறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட 4 மீனவர்களும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்தியமீனவர்கள் 7 பேரும் விடுதலை! | Virakesari.lk

மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

1 month 1 week ago

24 Sep, 2025 | 05:16 PM

image

(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். 

இந்த சந்திப்பு தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில்  புதன்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.

இதன் போது உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கிடையில் இரு தரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் இலங்கையில் அரசியல் முன்னேற்றங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு – விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, தங்காலை கால்டன் இல்லத்தில் தற்போது வசித்து வருகின்றார். 

மஹிந்த கொழும்பிலிருந்து வெளியேற முன்னர் சீன தூதுவரை  சந்தித்திருந்தார். இவ்வாறு முக்கிய இராஜதந்திரிகள் முன்னாள் ஜனாதிபதிகளை சந்தித்து வரும் நிலையில், இந்திய உயர்ஸ்தானிகரும் மஹிந்தவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் | Virakesari.lk

இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பு; நிலஅபகரிப்பு, இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய நுழைவு மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ரவிகரன் எம்.பி எடுத்துரைப்பு

1 month 1 week ago

24 Sep, 2025 | 04:01 PM

image

தமிழர் தாயகப்பரப்பில் அரச கட்டமைப்புக்களினூடாக முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்புக்கள், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் இந்திய அரசின் நிதி உதவியில் முன்னெடுக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலை நோயாளர் விடுதிஅமைக்கும் திட்டத்தை மீள ஆரம்பிப்பதுடன், முள்ளியவளை கலைமகள் வித்தியாலய வகுப்பறைத் தொகுதியின் கட்டுமானப்பணிகளை மீள ஆரம்பிப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தம்மால் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நேற்று  செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற சந்திப்பில் தம்மால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தோம். இதன்போது ஆக்கபூர்வமாக பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன.

குறிப்பாக நானும் இதன்போது பல்வேறு விடயங்கள் சார்ந்து கருத்துக்களை இந்திய உயர்ஸ்தானிகருக்குத் தெரிவித்திருந்தேன்.

குறிப்பாக இதன்போது மாகாணசபைகள் தொடர்பில் பேசியிருந்தேன். அந்தவகையில் மாகாணசபை முறைமையை இந்தநாட்டில் அறிமுகப்படுத்தியதே இந்தியாதான் ஆனால் தற்போது மகாணசபைகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் தெரிவித்தேன்.

அத்தோடு மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்படும் என்று கூறப்பட்டு வருகின்றபோதும் நீண்டகாலமாக மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்படாமலுள்ளமையினையும் இந்திய உயர்ஸ்தானிகருக்கு இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன்.

அதேவேளை தமிழர் தாயகப்பரப்பிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் தமிழ் மக்களுக்குரிய அதிகமான நிலப்பரப்புக்கள் சில திணைக்களங்களினூடாக அபகரிக்கப்பட்டுள்ள விடயத்தினையும் இதன்போது எடுத்துக்கூறியிருந்தேன்.

இவ்வாறு எமது தமிழ் மக்களின் பெருமளவான பூர்வீக நிலங்கள் வனவளத்திணைகமகளம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், படையினர்போன்ற அரசகட்டமைப்புக்களினூடாக அபகரிக்கப்பட்டுள்ளதால் எமதுக்கள் விவசாயம், கடற்றொழில், கால்நடைவளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபடுவதிலும் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்பதையும் இதன்போது தெளிவுபடுத்தினேன்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசகட்டமைப்புக்களின் ஊடாக காணி அபகரிப்புக்கள் இடம்பெற்றுள்ள விதத்தை புள்ளிவிபரங்களின் மூலம் சுட்டிக்காட்டியதுடன், வடக்கு, கிழக்கில் உள்ள எட்டுமாவட்டங்களிலும் இதே ஆக்கிரமிப்பு நிலமைகள் இருப்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறியிருந்தேன்.

இதுதவிர இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகள்தொடர்பிலும் இதன்போது கருத்துக்களை முன்வைத்திருந்தேன்.

குறிப்பாக ஏற்கனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடந்தகாலயுத்தம் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் வடக்குமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட கடற்பரப்புக்களில் தற்போது இந்திய இழுவைப்படகுகள் அத்தமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுவதால், வடபகுதி தமிழ் மீனவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன்.

அதிலும் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில்கூட இந்திய இழுவைப்படகுகள் தமது அத்துமீறிய சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தை நான் அவதானித்தவற்றையும் எடுத்துக்கூறினேன். எனவே இந்த விடயத்தில் கூடுதல் கவனமெடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தேன்.

அதேவேளை இந்திய நிதிஉதவியில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்திய சாலையில் அமைக்கப்படவிருந்த நோயாளர் விடுதி இதுவரை அமைக்கப்படாமலுள்ளமை தொடர்பிலும் இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன்.

குறித்த முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் விடுதி அமைப்பதுதொடர்பில் ஏற்கனவே பாராளுமன்றில் சுகாதார அமைச்சரிடம் நான் கேள்வி எழுப்பியிருந்தநிலையில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ விரைவில் குறித்த நோயாளர் விடுதிக்கான வேலைத்திட்டங்களுக்கான நடவடிக்மைகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமெனத் தெரிவித்த விடயத்தையும் இதன்போது தெரியப்படுத்தினேன்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் போதுமான அளவில் முறையான நோயாளர் விடுதி இன்மையால் மக்கள் பெருத்த இடர்பாடுகளுக்கு மத்தியில் சிகிச்சைபெற்றுவருவதைச் சுட்டிக்காட்டி, இந்த விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தேன்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள கலைமகள்வித்தியாலயத்தில் இந்திய நிதி உதவியில் முன்னெடுக்கப்பட்ட வகுப்பறை கட்டடத்தொகுதி அமைக்கும் வேலைத்திட்டம் இடைநடுவே கைவிடப்பட்டுக் காணப்படுகின்ற விடயத்தினை இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரதே கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன்.

இவ்வாறு இந்திய நிதி உதவியில் அமைக்கப்பட்டு, பூரணப்படுத்தப்படாமலுள்ள கட்டடத் தொகுதியிலேயே மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமையினையும் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன்.

அத்தோடு குறித்த வகுப்பறைக் கட்டடத்தொகுதி அமைப்பதுடன் தொடர்புடைய சில ஆவணங்களும் இதன்போது என்னால் கையளிக்கப்பட்டிருந்தது. அத்தோடு மாணவர்களின் நலன்கருதி விரைவாக முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டடத்தொகுதி வேலைகளை விரைந்து ஆரம்பிக்குமாறும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை முன்வைத்தேன்.

என்னால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை செவிமடுத்த இந்திய உயர்ஸ்தானிகர், என்னால் முன்வைக்கப்பட்ட சகலவிடயங்களிலும் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலை நோயாளர்விடுதி அமைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவும் கூடுதல் கரிசனையுடன் செயற்படுவதாகவும், விரைவில் தாமும் இந்தவிடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி குறித்த நோயாளர் விடுதியை அமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு முள்ளியவளை கலைமகள் வித்தியாலய வகுப்பறைக் கட்டடத்தொகுதி விடயத்திலும் தாம் கூடுதல் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார்.

அதேவேளை இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறி நுழைகின்ற விடயத்திலும் தாம் கவனம் செலுத்துவதாகவும் இதன்போது இந்தியஉயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

மேலும் அரசியல்ரீதியான பல்வேறு விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

அந்தவகையில் ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைந்தது. கலந்துகொண்ட அனைத்துப் பராாளுமன்ற உறுப்பினர்களும் ஆக்கபூர்வமாக தமது கருத்துக்களை முன்வைத்தனர்  என்றார்.

FB_IMG_1758696943903.jpg

https://www.virakesari.lk/article/225962

கிளிநொச்சி பெண் நோயியல் வைத்தியசாலை சிகிச்சை பிரிவின் ஆரம்ப நிகழ்வு

1 month 1 week ago

24 Sep, 2025 | 04:04 PM

image

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் சுமார் 5,320 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த  அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட பெண் நோயியல் வைத்திய நிலையமானது தொடர்ந்து மூடப்பட்டு காணப்பட்ட நிலையில் குறித்த சிகிச்சை பிரிவினை ஆரம்பித்து வைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று  புதன்கிழமை (24) வடமாகாண ஆளுநர் அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயன் மற்றும் ஆளுநரின் செயலாளர் வடமாகான சுகாதார அமைச்சின் செயலாளர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிளிநொச்சி  மாவட்ட பொது வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய வைத்தியஅதிகாரி  கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் நோயாளர் நலன்புரி சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.

DGH__1_.png

DGH__9_.png

DGH__3_.png

DGH__8_.png

DGH__4_.png

https://www.virakesari.lk/article/225965

புலிகளுக்குசொந்தமானதாக நம்பப்படும் 6,000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கிக்கு ஒப்படைப்பு

1 month 1 week ago

புலிகளுக்குசொந்தமானதாக நம்பப்படும் 6,000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கிக்கு ஒப்படைப்பு

செவ்வாய், 23 செப்டம்பர் 2025 07:43 PM

புலிகளுக்குசொந்தமானதாக நம்பப்படும் 6,000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கிக்கு ஒப்படைப்பு

குற்றப்புலனாய்வு துறை கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம அவர்களிடம் தெரிவித்தன் படி விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானதாக நம்பப்படும் 6,000 தங்கப் பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் இலங்கை மத்திய வங்கிக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற இராணுவச் செயல்பாடுகளின்போது முகாம்கள், விடுதலைப் புலிகளின் வங்கிகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட 10,000 தங்கப் பொருட்களில் இவை அடங்குகின்றன. இதற்கு முன்னர், நீதிமன்றம் தேசிய ரத்தின, ஆபரண ஆணையத்துக்கு தங்கத்தை ஆய்வு செய்து விரிவான அறிக்கையை நீதிமன்றத்திற்கும் CIDக்கும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.

CID அதிகாரிகள் தெரிவித்ததாவது, மத்திய வங்கிக்கு ஒப்படைக்கப்பட்ட 6,000 பொருட்கள் எடை மற்றும் கலவை விவரங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பான முன்னேற்ற அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும், அந்தத் தங்கங்கள் ஆரம்பத்தில் உள்ளூர் மக்கள் தன்னார்வத்துடன் விடுதலைப் புலிகளுக்கு ஒப்படைத்தவை என நீதிமன்றத்தில் முன்பு வெளிப்படுத்தப்பட்டது. இதற்கான விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டது.

https://jaffnazone.com/news/50707

மன்னார் காற்றாலை திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

1 month 1 week ago

மன்னார் காற்றாலை திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

24 September 2025

1758696401_1116507_hirunews.jpg

யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு, மன்னாரில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட இரண்டு காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். 

இந்த விடயம் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். 

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு ஆவணம், வட்சப் செயலி ஊடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பிரதிகளைத் தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். 

உத்தியோகபூர்வ ஆவணம் கிடைத்த பின்னர் அதன் விபரங்களைத் தாம் பகிரங்கப்படுத்த முடியும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். 

இதன்படி, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 36 காற்றாடிகளுக்கு மேலதிகமாக, ஆரம்பிக்கப்பட்ட இரண்டு திட்டங்களுக்கான 14 காற்றாடிகளை அமைக்கும் பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதியின் பணிப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, இந்த காற்றாலை நிறுவல் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. 

அத்துடன், கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

இந்த போராட்டங்களின் பின்னர் நிலைமையை அறிந்து பரிந்துரைக்கும் வகையில் நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி அமைத்திருந்தார். 

அந்த குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, ஜனாதிபதி பணிப்புரையும் வெளியாகியுள்ளது. 

அதேநேரம், இந்த பணிப்புரைக்கு மேலதிகமாக, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ள சுற்றாடல் சம்பந்தமான தடுப்பு நடவடிக்கைகளையும் உரிய முறையில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, ஜனாதிபதியால் அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்ட ஆவணம் தமக்குக் கிடைத்துள்ளதாக காற்றாலை திட்டத்துக்கு எதிர்ப்பை வெளியிடும் போராட்டக் குழுவுக்குத் தலைமை தாங்கும் அருட் தந்தை மார்க்கஸ் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். 

எனினும், ஜனாதிபதியின் பணிப்புரையைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தொடர்ந்து போராடப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

https://hirunews.lk/tm/421865/president-directs-to-continue-progressing-the-mannar-wind-farm-project

இலங்கை - இந்திய வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

1 month 1 week ago

இலங்கை - இந்திய வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

அமெரிக்காவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக குறித்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான நட்புறவையும் நெருங்கிய ஒத்துழைப்பையும் மீண்டும் உறுதிப்படுத்த இந்திய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்ததாக அமைச்சர் விஜித ஹேரத் தமது எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அமைச்சர் விஜித ஹேரத்தும் அமெரிக்கா சென்றுள்ளார். 

அதன்படி, இன்று (24) அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்ற உள்ளார். 

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார். 

இதேவேளை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி வெளியுறவுச் செயலாளர் எலிசன் ஹூக்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பொதுவான முன்னுரிமைகள் குறித்து இதன்போது விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmfxgot3u00mpo29n2uhbmlnw

செம்மணி வளைவில் சர்வதேசத்திடம் நீதிகோரி உணவுத் தவிர்ப்புப் போர்;

1 month 1 week ago

செம்மணி வளைவில் சர்வதேசத்திடம் நீதிகோரி உணவுத் தவிர்ப்புப் போர்;

1260774579.jpg

நாளை முதல் செப்ரெம்பர் 29 வரை ஐந்து தினங்கள் நடைபெறும்!

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி, நாளை முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை சுழற்சிமுறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தற்போது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும், தமிழர்களுக்கான தீர்வை வலியுறுத்தியும் சுழற்சி முறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடத்தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் இரவு - பகலாக எதிர்வரும் 29ஆம் திகதி மாலை 4 மணிவரை இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது. எனவே, தமிழ் மக்கள் பெருவாரியாக இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் - என்றனர்.

https://newuthayan.com/article/செம்மணி_வளைவில்_சர்வதேசத்திடம்_நீதிகோரி_உணவுத்_தவிர்ப்புப்_போர்;

எங்கள் மக்களின் சம்மதம் இல்லாமல் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வர முடியாது! - எம்.கே.சிவாஜிலிங்கம்

1 month 1 week ago

எங்கள் மக்களின் சம்மதம் இல்லாமல் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வர முடியாது!

adminSeptember 24, 2025

Sivagi.jpg?fit=1170%2C658&ssl=1

எங்கள் மக்களின் சம்மதம் இல்லாமல் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வர முடியாது. நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம் என்ற மமதையை விட்டு முழுமையான தீர்வுக்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

2009 இறுதி யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு 16 ஆண்டுகளாக நீதிக்காக தமிழினம் ஏங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் தமிழர் தரப்பிலேயே பலரை குழப்பம் செய்யும் விதத்தில் சிலரின் நடவடிக்கை காணப்படுகிறது.

சர்வதேசம் எதையுமே செய்யாது என்ற விசம பிரசாரத்தின் மூலம் அழுத்தம் இல்லாத சூழலை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

நான் 15 தடவைக்கு மேல் ஜெனிவா கூட்டத்தொடருக்கு சென்றவன் என்ற அடிப்படையில், நாட்டிலிருந்து கோரிக்கை வர வேண்டும். உள் நாட்டு மக்கள் போதிய அளவு அக்கறை காட்டாவில்லை. புலம்பெயர் நாடுகளில் இருந்து வரும் அழுத்தம் மட்டும் போதாது என்ற கருத்துப்பட சொல்லி இருந்தார்கள்.

நடைபெற்றது இனப்படுகொலை என்று சொல்வதற்கு போர் முடிவடைந்து ஏறக்கூடிய ஏழு ஆண்டுகள் எடுத்தன. 2009 இல் போர் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்தே 3 பிரதான கட்சிகள் இணைந்து இனப்படுகொலை என கையெழுத்திட்டு ஐநாவுக்கு கடிதம் அனுப்பின.

2015ல் வடக்கு மாகாண சபை இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றிய போதும் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் வடக்கு மாகாண சபை இருந்த போதும் அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் இருந்தது.

இனப்படுகொலையை நிரூபிக்க முடியாது என சொன்னவர்கள் தற்போது செம்மணிக்கு பிறகு இனப்படுகொலை நிருபிக்கப்படலாம் என்ற கருத்தை எங்கள் தரப்பில் இருந்து சொல்கிறார்கள்.

நாங்கள் போராடுவதால் அழுத்தம் கொடுப்பதால் எதுவும் ஆகாது என்று இல்லை. எங்களுக்கு அதிர்ஷ்டம் இருப்பது போல செம்மணி மனித புதைகுழி தோண்டும் போது இருநூறுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் இன்று வெளிவந்துள்ளது. இதை குழப்புவதற்கு பலர் செயற்பட்டாலும் நாங்கள் அதனை வெளிப்படுத்த தயாராக இருக்க வேண்டும்.

இனிமேல் இனப்படுகொலை நடைபெறாது என்பதை உறுதிப்படுத்தக்கூடிய விதத்தில் ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வடக்கு கிழக்கு பிராந்தியங்களை ஏற்று  ஐநாவின் பொறிமுறை ஊடாக எமக்கான பரிகாரநீதி வழங்கப்பட வேண்டும். சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் எமக்கு தீர்வு வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

எங்கள் மக்களின் சம்மதம் இல்லாமல் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வர முடியாது. நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம் என்ற மமதையை விட்டு முழுமையான தீர்வுக்கு அரசாங்கம் முன்வர வேண்டும். சர்வதேசத்திடம் நீதியை கேட்கவும் தொடர்ந்து போராடவும் தமிழ் மக்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும் – என்றார்.

https://globaltamilnews.net/2025/220728/

வோல்கர் டர்குடன் அநுரகுமார திசாநாயக்க சந்திப்பு!

1 month 1 week ago

வோல்கர் டர்குடன் அநுரகுமார திசாநாயக்க சந்திப்பு!

adminSeptember 24, 2025

Anura-UN.jpg?fit=900%2C450&ssl=1

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் செயலகத்தில் உள்ள மனித உரிமைகள் பேரவை அறையில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பின்போது, மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் ஜனாதிபதியுடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/220737/

இலங்கையின் ஏற்றுமதி 6.61% அதிகரிப்பு!

1 month 1 week ago

New-Project-324.jpg?resize=750%2C375&ssl

இலங்கையின் ஏற்றுமதி 6.61% அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை தொடர்ந்து மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியைக் காட்டியது.

அதன்படி, குறிப்பிட்ட காலப் பகுதியில் மொத்த வருவாய் 11,554.32 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB) தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 6.61% வலுவான அதிகரிப்பை பிரதிபலிக்கிறது என்று EDB ஒரு அறிக்கையை வெளியிட்டு கூறுகிறது.

2025 ஆகஸ்ட் மாதம் மாத்திரம் மொத்த வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் உள்ளடக்கிய மொத்த ஏற்றுமதிகள் 1,607.58 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது.

இது 2024 ஆகஸ்ட் மாதத்தை விட ஆண்டுக்கு ஆண்டு 2.57% வளர்ச்சியைப் பதிவு செய்தது.

இந்த செயல்திறன் இலங்கையின் ஏற்றுமதித் துறையின் வலிமையையும், சந்தை அணுகலை விரிவுபடுத்துவதற்கும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் செயல்படுத்தப்பட்ட உத்திகளின் செயல்திறனையும் எடுத்துக்காட்டுகிறது.

https://athavannews.com/2025/1448332

கெஹெல்பத்தர பத்மே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

1 month 1 week ago

thumb_large_df-1.webp?resize=581%2C375&s

கெஹெல்பத்தர பத்மே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  (CID) தடுப்புக் காவலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுகப் பொலிஸ்  நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, கணேமுல்ல சஞ்சீவ் மற்றும் கம்பஹா பஸ் பொட்டா ஆகியோரைக் கொலை செய்ய தானே திட்டமிட்டதாக பத்மே ஒப்புக்கொண்டார். அத்துடன் கம்பஹா ஒஸ்மன் மீதான கொலை முயற்சியில் நேரடி தொடர்பு இல்லையெனவும், தம்மிட்ட அவிஷ்க மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோரின் கோரிக்கையின் பேரில் அதற்கு ஒத்துழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொக்கேய்ன், ஹெரோயின், ஐஸ், குஷ் மற்றும் கேரள கஞ்சா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்ததாகவும்,   தமது கைபேசியில், “கொக்கேய்னை ஐ என்ற குறியீட்டு பெயராக பயன்படுத்தியதையும், அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், தன்னிடம் இருந்த அனைத்து துப்பாக்கிகளையும் பொலிஸார் ஏற்கனவே மீட்டுள்ளதாகவும், தற்போது தன்னிடம் இன்னும் ஒரு துப்பாக்கி மட்டுமே மீதமுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.

https://athavannews.com/2025/1448286

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வலையில் சிக்காமல் கடற்றொழிலாளர்களை மீட்பதற்கான திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

1 month 1 week ago

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வலையில் சிக்காமல் கடற்றொழிலாளர்களை மீட்பதற்கான திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

23 Sep, 2025 | 03:50 PM

image

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடவடிக்கையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது தொடர்பில் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் திட்டத்தை முன்னெடுக்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் தலைமையில் கடற்றொழில் அமைச்சின் 25 மாவட்ட இணைப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல் அமைச்சில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, அமைச்சின் செயலாளர் பி.கே. கோலித கமல் ஜினதாச மற்றும் துரைசார் அதிகாரிகள் ஆகியோருடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கடற்றொழிலாளர்களை, போதைப்பொருள் கடத்தலுக்கு கடத்தல்காரர்கள் பயன்படுத்துவது பற்றி போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு விளக்கம் அளித்தது.

இதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துமாறு அமைச்சர் உத்தரவிட்டார். அதேபோன்று இது பற்றி கடற்படையினருக்கும் தெரியப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், உள்நாட்டு நீர்நிலைகளில் மீன் உற்பத்திகளை பெருக்குவது பற்றி நெக்டா நிறுவனத்தின் தலைவர் விளக்கமளித்தார். இதற்குரிய ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

அதேபோல மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டன.

Photo__3_.jpg

Photo__4_.jpg

Photo__3___1_.jpg

Photo__1_.jpg

https://www.virakesari.lk/article/225857

கிளிநொச்சியில் பல வருடங்களாக இயங்காதுள்ள மகளிர் சிகிச்சை நிலையத்தை மீள இயக்க நடவடிக்கை - சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

1 month 1 week ago

23 Sep, 2025 | 02:26 PM

image

( எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்)

பல வருடங்களாக இயங்காமல் இருக்கும் கிளிநொச்சி மகளிர் சிகிச்சை நிலையத்தை மீள இயங்க செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும்,  அதற்குரிய  திட்டங்கள்  வகுக்கப்பட்டுள்ளதாவும்  சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டெம்பர் 23)  நடைபெற்ற  அமர்வில்  வாய்மூல விடைக்கான கேள்வி  வேளையின் போது ஆளும் கட்சி உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்  ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி  கேள்வியெழுப்புகையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில்  நெதர்லாந்து அரசாங்கத்தால் கட்டப்பட்ட சிறப்பு மகளிர் சிகிச்சை நிலையமானது பல ஆண்டுகளாக இயங்காமல் இருக்கின்றது. 

இதனை நாங்கள் சென்று பார்த்தோம். அங்கே இலங்கையில் எங்கும் இல்லாத ஸ்கேன் மற்றும் கதிரியக்க இயந்திரங்கள் உள்ள போதும். அவற்றில் சில உபகரணங்கள் காலாவதியாகியுள்ளன.

சுகாதார  அமைச்சுசார் ஆலோசனை கூட்டத்தில்  இவ்விடயம் கலந்துரையாடப்பட்டது. அதன்போது வடமாகாணத்தில் சுழற்சி முறையில் ஆளணிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறப்பட்டது. 

சுகாதார அமைச்சர் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் அவதானம் செலுத்தி நீண்ட காலமாக இயங்காமல் இருக்கும் வைத்தியசாலைகளை உடனடியாக இயக்கவும், ஆளணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன்மூலம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட பெண்கள் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

இதற்கு  எழுந்து பதிலளித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

இந்த பிரச்சினை உண்மையானதே. அங்கே கட்டிடங்கள், உபகரணங்கள் இருந்தாலும் ஆளணி போதுமானதால் இல்லை. 

இலங்கைக்கு வரும் விசேட வைத்தியர்களை அங்கு அனுப்பினாலும் அவர்கள் இலங்கையில் தொடர்ந்தும் தங்கியிருப்பது தொடர்பிலும் பிரச்சினைகள் உள்ளன.

எவ்வாறாயினும் நிறைவுகாண் ஊழியர்களை நாங்கள் பயிற்றுவித்து வருகின்றோம். இதனூடாக அங்கு ஆளணியை பூர்த்தி செய்ய முடியுமென்று நினைக்கின்றேன். 

கிளிநொச்சி பெரிய வைத்தியசாலை தொடர்பிலும் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம். அங்குள்ள குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.  

கிளிநொச்சியில் பல வருடங்களாக இயங்காதுள்ள மகளிர் சிகிச்சை நிலையத்தை மீள இயக்க நடவடிக்கை - சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ    | Virakesari.lk

Checked
Sun, 11/02/2025 - 14:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr